அதிக சத்தம் இதயத்திற்கு ஆபத்து… ஆய்வில் எச்சரிக்கை
சத்தம் சில நேரம் சங்கீதமாக காதுக்குள் நுழையும், அது மனதிற்கும், மூளைக்கும் மகிழ்ச்சியைத் தரும். அதுவே இரைச்சலாக நுழைந்தால் அது இதயத்தை பாதித்து உயிருக்கே எமனாகிவிடும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறிந்துள்ளனர்.
சாதாரண சத்தம், இரைச்சலை காட்டிலும் 10 டெசிபல் அதிகமானால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 12 சதவீதம் அதிகரிக்குமாம்.
அன்றாடம் நாம் செல்போன் சத்தத்தைத் தொடர்ந்து கேட்பதும் அதையடுத்து கூடவே கொஞ்சம் சத்தமாக பேச்சை கேட்பதாலும் கூட இதயத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று கண்டறிந்துள்ளார்கள்.
இரைச்சலும் இதயமும்
டென்மார்க்கில் 50 முதல் 64 வயது வரையான 55,000 பேரை பத்தாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து ஆய்வு செய்ததில் இதயத்துக்கும் ஒலிக்கும் உள்ள தொடர்பு தெரிய வந்துள்ளது.
எதிர்பாராத சத்தம்
பிடிக்காத ஒலி, எதிர்பாராத ஓசை, செல்போன் போன்ற தொடர் இரைச்சல் எல்லாமே இதயத்தை தாக்குகிறது.
ஒலியால் பிரச்சினை
பொதுவாக ஒலியால் வரும் பிரச்னைகளை மதிப்பிட இரண்டு அளவுகோல் பயன்படுத்தப்படுகிறது. என்ன மாதிரியான சத்தம் என்பது ஒன்று. எவ்வளவு நேரமாக காதில் விழுகிறது என்பது அடுத்தது.
ஓயாத இரைச்சல்
சாதாரண சத்தம் என்பது 80 டெசிபல் வரை இருக்கும். பரபரப்பாக இயங்கும் ஒரு தெருவின் இரைச்சலைவிட இது குறைவு. காதில் ஹெட்ஃபோன் மாட்டிக் கொண்டு கேட்கும் ஸ்டீரியோ ஒலி 112 டெசிபல் வரை போகலாம். மிக்சி, வாஷிங் மெஷின், ஹேர் டிரையர் போன்ற வீட்டு சாதனங்கள் 90 டெசிபல் வரை ஒலி எழுப்பக் கூடியவை.
சகிக்க கூடிய சத்தம்
குழந்தையின் அழுகை, பொம்மைகள் எழுப்பும் ஒலி இதெல்லாம் நம்மால் சகித்துக் கொள்ளக்கூடிய அளவைவிட இரு மடங்கு அதிகமாம்.
வாகன ஒலியால் ஆபத்து
தெருவில் செல்லும் வாகனங்கள் எழுப்பும் மொத்த சத்தம் எல்லா அளவுகளையும் கடந்தது. இவற்றை எவ்வளவு நேரம் கேட்க நேரிடுகிறது என்பதை பொருத்து உடலுக்கு வரும் ஆபத்தை அளவிடலாம். முதலில் காது பாதிக்கிறது. தொடர்ந்து இதயபாதிப்பு ஏற்படுகிறது. வீட்டிலும் வெளியிலும் ஒலி குறைந்தால் ஆரோக்கியத்துக்கு வழி கிடைக்கும்.
3 கோடி பேர் பாதிப்பு
கட்டுப்பாடுகள், கண்காணிப்பு நிறைந்த அமெரிக்காவில் எந்த நேரமும் 3 கோடி பேர் ஆபத்தான ஒலியால் பாதிக்கப்படுகின்றனர் என்று புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. நம்முடைய நாட்டில் இதற்கு சரியான கட்டுப்பாடு இல்லை. காற்று, நீர் மாசு படுவதை நாம் பார்க்கிறோம் அல்லது தொடுகிறோம். ஒலியை பார்ப்பதில்லை, குடிப்பதில்லை. அதனால் ஆபத்தை அறிவதில்லை. எனவே சுற்றுச்சூழல் மாசு போல ஒலி மாசு பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுவது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.