வாரத்துல இரண்டு நாள் "விரதம்" இருங்க பாஸ்... ஆரோக்கியம் கூடும்!
சென்னை: வாரத்தில் இரண்டு நாள் வயிற்றைக் காயப் போட்டால் அதாங்க விரதம் இருந்தால் நோய், நொடிகள் இல்லாமல் நீண்ட காலம் வாழலாம் என ஒரு புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாம்
அந்த ஆராய்ச்சியில் வாரத்தில் இரண்டு நாட்களாவது கலோரிகள் குறைவான உணவை உட்கொண்டாலே உடல் பருமன், இதய நோய்கள் மற்றும் சர்க்கரை நோயிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம் எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளதாம். இதேபோல் பிரபல ஊட்டச்சத்து நிபுணரான அமாண்டா ஹமில்டனும் 48 மணி நேரம் கலோரிகள் இல்லாத உணவை எடுத்துக் கொள்வதே மிகச்சிறந்த டயட் என்கிறார். மேலும் உடல் ஆரோக்கியத்தை கூட்டுவதற்கும், இருக்கும் பலத்தை அதிகரிப்பதற்கும் சுலபமான உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்ளச் சொல்கிறார் அவர்.
விரதம் இருங்க பாஸ்...
விரதங்கள் மூலம் சுலபமான முறையில் உடலை கட்டுக்கோப்பாக்கலாம். அத்துடன் உடல் எடையைக் குறைப்பதற்காக நாம் மேற்கொள்கிற அறுவைச் சிகிச்சையில் இருக்கும் ஆபத்துகள் விரதத்தில் மிகவும் குறைவு என்கிறதாம் ஆராய்ச்சி...
ஆரோக்கியம் என்றென்றும்...
அறிவியல் பூர்வமான உண்மை என்னவென்றால் விரத கால உணவுகள் மூலம் சர்க்கரை மற்றும் இதய நோய்கள் தாக்கியவர்கள் ஆரோக்கியமாக வாய்ப்புகள் அதிகமாம்.
ரத்த அழுத்தம் குறையுது...
ஆஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் பிரவுன் என்ற ஆராய்ச்சியாளர் விரதம் இருந்த ஒரு குழுவினரை ஆய்வு செய்த போது, விரதம் இருப்பவர்களின் உடலில் சர்க்கரை அளவு உயர்வதாகவும், உடலில் உள்ள கொழுப்பு கரைந்து சக்தியாக மாறுவதாகவும், ரத்த அழுத்தம் குறைவதாகவும் முடிவில் தெரிய வந்துள்ளதாம்.
இது போதும்...
பெண்கள் 500 கலோரிக்கும், ஆண்கள் 600 கலோரிக்கும் குறைவான உண்வையே விரத நாட்களில் எடுத்துக் கொள்கிறார்களாம்.
அப்பவே சொன்னாங்க...
இந்த வகையான விரதம் மூலம், தினந்தோறும் எடை குறைவதை விட அதிக பலன் கிடைக்கிறதாம். 1940லிலேயே விஞ்ஞானிகள் இதனை விலங்குகள் மூலம் ஆராய்ந்து கண்டறிந்தார்களாம். அண்மைய ஆய்வுகளும் அதையே வழி மொழிகின்றன.
ரொம்ப நல்லது...
டிமெண்டியா மற்றும் அல்சமீர் நோய்களுக்கு எதிராக கூட இந்த விரதமுறை போராடுகிறதாம். ஆராய்ச்சியாளர்கள் கணைய உறுப்புகளின் செயல்பாடு உயர்வதாகவும், குறைந்த அளவு கொழுப்பே உடலில் படிவதாகவும் அளந்து சொல்கிறார்கள்.
வரப்பிரசாதம்...
இதய நோயாளிகளுக்கு இவ்விரதமுறை வரப்பிரசாதம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். தீவிர உடற்பயிற்சிக்கு இணையானதாம் இது.