கத்தார் ட்யூட்டி ப்ரீ அதிர்ஷ்ட குலுக்கலில் ரூ.5.5 கோடி வென்ற இந்தியர்
துபாய்: கத்தாரில் பணிபுரியும் இந்தியரான சதீஷா பாபு என்பவருக்கு கத்தார் ட்யூட்டி ப்ரீ நடத்திய அதிர்ஷ்ட குலுக்கலில் ரூ.5.5 கோடி பரிசு கிடைத்துள்ளது.
தோஹா விமான நிலையத்தில் கத்தார் ஏர்வேஸின் கத்தார் ட்யூட்டி ப்ரீ கடை உள்ளது. கத்தார் ட்யூட்டி ப்ரீ கடந்த 2006ம் ஆண்டு முதல் அதிர்ஷ்ட குலுக்கலை நடத்தி வருகிறது. 5,000 டிக்கெட்டுகள் விற்றவுடன் குலுக்கல் நடத்தப்படும்.
கடந்த 15 ஆண்டுகளாக கத்தாரில் பணிபுரிபவர் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான சதீஷா பாபு(50). கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அவர் கத்தார் எமிரி விமானப் படையில் ஏர்கிராப்ட் டெக்னீஷியனாக பணிபுரிகிறார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் தோஹா விமான நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் கிளம்பும் முன்பு லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார்.
இதையடுத்து நடந்த குலுக்கலில் சதீஷாவுக்கு ரூ.5.5 கோடி பரிசு கிடைத்துள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில்,
இந்த லாட்டரியில் பரிசு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் கடந்த 4 ஆண்டுகளாக டிக்கெட் வாங்கினேன். இறுதியாக பரிசு வென்றதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பணத்தைக் கொண்டு எனது குடும்பத்தின் எதிர்காலம் மற்றும் குழந்தைகளின் படிப்பு குறித்து திட்டமிடுவேன். என் வாழ்க்கையில் கிடைத்துள்ள சிறந்த பரிசு இது தான். மறுபடியும் கோடீஸ்வரன் ஆகும் வாய்ப்பை இழக்க நான் விரும்பவில்லை. அதனால் மீண்டும் இந்த டிக்கெட் வாங்குவேன். கத்தார் ட்யூட்டி ப்ரீ எனது வாழ்க்கையை மாற்றிவிட்டது என்றார்.
கத்தார் ஏர்வேஸ் சிஇஓ அல் பாகர் கூறுகையில், இந்த முறை நடந்த அதிர்ஷ்ட குலுக்கலில் வென்ற பாபுவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.