ஜித்தா தமிழ் சொல்வேந்தர் மன்றம் நடத்திய பேச்சுப் போட்டிகள்
ஜித்தா தமிழ் சொல்வேந்தர் மன்றத்தின் தலைவர் மு.இ.முஹம்மது இபுராஹிம் மரைக்காயர் தனது வரவேற்புரையில்: "தமிழ் மொழியின் வாயிலாக தலைமைத்துவம், பேச்சாற்றல் போன்றவற்றை வளப்படுத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்கு ஏதுவாக ஜித்தா தமிழ் சொல்வேந்தர் மன்றம் சென்ற ஜனவரி 16ம் தேதி துவக்கப்பட்டது. பேசத் தெரியாதவர்களைப் பேச வைப்பது, பேசத் தெரிந்தவர்களை மேலும் நன்றாக பேச வைப்பதும் தான் இந்த சொல்வேந்தர் மன்றத்தின் நோக்கம். தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பது இன்னொரு நோக்கம் ஆகும்.
அனைத்துலக சொல்வேந்தர் மன்றம் 1924ம் ஆண்டு ரால்ப் ஸ்மெட்லியால் தொடங்கப்பட்டது. தற்போது 116 நாடுகளில் 13,500 மன்றங்கள் அமைந்துள்ளன. இவற்றில் 280,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களை மேம்படுத்திக் கொள்ள எங்களின் சொல்வேந்தர் மன்றத்தோடு இணைத்துக்கொள்ள அழைக்கிறேன். ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடக்கும். முதலாம் ஆண்டு நிறைவு தின நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகிறது" என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய சொல்வேந்தர் மன்ற சரக ஆளுநர் முனைவர். இலக்குவன், மன்றத்தின் சிறப்புகளையும், அதில் இணையும் உறுப்பினர்களின் வளர்ச்சியையும் பற்றி தெளிவாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சியை ரவீந்திரன் தொகுத்து வழங்கினார்.
முதலில் நகைச்சுவை பேச்சுப் போட்டி பிரிவின் தலைவர் சொல்வேந்தர் அபூபக்கர் போட்டியை வழிநடத்தி சென்றார். இந்த போட்டியில் பாலசுப்ரமணியன், குமரேஷ் பாபு, மனோகர் மரியதாஸ், மருது, மோகன் குமார், சீனிவாசன் மற்றும் திருமதி சாந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
பிறகு நடந்த திடீர் தலைப்பு பேச்சுப் போட்டி பிரிவின் தலைவர் சொல்வேந்தர் சீனி அலி போட்டியை நடத்தினார். இதில் பாலசுப்ரமணியன், மனோகர் மரியதாஸ், மருது, மோகன் குமார், சீனிவாசன், செந்தில்நாதன் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிறகு நடந்த மதிப்பாய்வு பேச்சுப் போட்டி பிரிவின் தலைவர் சொல்வேந்தர் ஜெயசங்கர் போட்டியை வழிநடத்தினார். இந்த போட்டியில் அப்துல் பத்தாஹ், மகாலிங்கம், மனோகர் மரியதாஸ் மற்றும் மோகன் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். சொல்வேந்தர் சிங்கராஜன் 'சோதனை பேச்சாளராக' தனது உரையை நிகழ்த்தினார்.
இறுதியாக நடந்த சர்வதேச பேச்சுப் போட்டி பிரிவின் தலைவர் சொல்வேந்தர் முஹம்மது இபுராஹிம் மரைக்காயர் போட்டியை வழிநடத்தி சென்றார். இதில் மகாலிங்கம், மோகன் குமார் மற்றும் முருகையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நகைச்சுவை பேச்சுப் போட்டி பிரிவில் குமரேஷ் பாபு முதலாவது இடத்தையும், திருமதி சாந்தி இரண்டாவது இடத்தையும், பாலசுப்ரமணியன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். திடீர் தலைப்பு பேச்சுப் போட்டி பிரிவில் பாலசுப்ரமணியன் முதலாவது இடத்தையும், மனோகர் மரியதாஸ் இரண்டாவது இடத்தையும், மோகன் குமார் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
மதிப்பாய்வு பேச்சுப் போட்டி பிரிவில் மோகன் குமார் முதல் பரிசையும், அப்துல் பத்தாஹ் இரண்டாவது பரிசையும், மனோகர் மரியதாஸ் மூன்றாவது பரிசையும் பெற்றனர். சர்வதேச பேச்சுப் போட்டி பிரிவில் மோகன் குமார் முதலாவது இடத்தையும், முருகையன் இரண்டாவது இடத்தையும், மகாலிங்கம் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். இறுதியில் வெற்றிபெற்ற பேச்சாளர்களுக்கு கேடயமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.