இப்படி ரசிச்சுப் பாருங்களேன்...
ஒன்றும் இல்லை...இதற்காக பெரிய திட்டமிடலும் கூட தேவையில்லை. தனிமை மட்டுமே தேவை. பேசுவதும், ரசிப்பதும் எவ்வளது சுகமானது தெரியுமா...
காதல் ததும்பும் விழிகளுடன், கண் நிறையக் காதலுடன், வாய் நிறைய ஆசையுடன் வந்து வந்து பேசும் யாரையுமே எல்லோருக்கும் பிடிக்கும். ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயத்தையும் சொல்லிச் சொல்லி அவரைப் புகழ்ந்து பேசுங்கள்... நிச்சயம் சந்தோஷப்படுவார்.
ஒவ்வொருவருக்கும் ஒரு விஷயம் கிறக்கம் தரும். பேச்சு சிலரை மயக்கும்...கண் பார்வை கலக்கம் தரும்... சிரிப்பு சிலாகிக்க வைக்கும்.. சினுங்கல் சிலிர்க்க வைக்கும்... ஒவ்வொன்றையும் ரசியுங்கள்.. அனுபவித்துப் பேசுங்கள்.
மனசுக்குப் பிடித்த இடம் பார்த்து அமர்ந்து பேசலாம். மடி மீது தலை வைத்துக் கொண்டு ஆசையாக பேசலாம். ஆறுதலாக, ஆசையாக கை பிடித்து வருடித் தாருங்கள்.. அவரைப் பேச விட்டு ரசியுங்கள்..இல்லையா, நீங்கள் பேசுவதைக் கேட்டு அவர ரசிப்பதை பார்த்து மகிழுங்கள்.
எந்த வலையிலும் சிக்காத நான்
உன் கண் வலையில் சிக்கியது எப்படி கண்ணே...
நீ பார்க்கிறாயா.. இல்லை என் மனதை அறுத்துப் போடுகிறாயா
அது கண்ணா இல்லை... கத்தியா...
ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களுக்கென சில பிரத்யேக வசீகரங்கள் இருக்கும். பெரும்பாலும் அது புன்னகையாக இருக்கும். சிரிப்பில் சிக்காதவர்களே இருக்க முடியாது... அந்தப் புன்னகையை ஏந்திப் பிடித்து ரசியுங்கள், சிலாகித்து நாலு வார்த்தை கூறுங்கள்..
ஜில்லென நீ சிரித்தபோது
சில்லிட்டுப் போனது மனசு.
உன் பல் வரிசையைப் பார்த்து
சூரியனுக்கே முகம் சுருங்கிப் போய் விடும்...
இப்படி சிலிர்க்க வைக்கும் சிரிப்பைப் புகழ்ந்து பேசுங்கள்... கை பிடித்து செல்லமாக பேசுங்கள்... காதல் மொழி பேசி கண்களைப் பார்த்து அவர் வெட்கப்படுவதைக் கண்டு ரசியுங்கள்.. பலர் கண்களை நேருக்கு நேர் பார்க்கமாட்டார்கள்.. காரணம் வெட்கம், விடாதீர்கள்.. துரத்தி துரத்தி விளையாடுங்கள்.
ஒவ்வொரு காதலையும் உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள உதவுவது இந்த ஆத்மார்த்தமான பேச்சுதான். செக்ஸ் மட்டும்தான் உறவைப் பலப்படுத்தும் என்பபதில்லை. அருமையான பேச்சும் கூட உறவுகளை பலப்படுத்த கை கொடுக்கும்.
மனம் நிறைய ஆசையுடன் பேச வரும்போது தயவு செய்து அதைத் தடுக்காதீர்கள்... பலருக்கு உங்களைப் பற்றிய நினைப்பும், பேச்சுமே மூச்சாக இருக்கும். அதை உங்களால் உணர முடியாவிட்டாலும் கூட பரவாயில்லை, உணர்வுகளைத் தடுத்து கஷ்டப்படுத்தி விட வேண்டாம். எனவே நீங்களும் ரசியுங்கள், உங்களை ரசிப்பதைப் பார்த்து சந்தோஷத்துடன் அதையும் அனுபவியுங்கள்... வாழ்க்கை அழகாக இருக்கும்.