நீ பேசு... நான் பாட்டு கேட்கிறேன்!
சில்லென்று உடல் தழுவிச் செல்லும் தென்றல் காற்று... மெல்லத் தலையில் பட்டு நழுவி உடல் நனைத்துப் போகும் சின்ன மழை... கூடவே கொஞ்சம் போல குளிர்... எவ்வளவு சுகானுபவம்... அப்படித்தான் நம்மைத் தாலாட்டும் ஞாபகங்களும்.
ஒவ்வொரு நினைவுக்கும் உயிர் தருவது சாட்சாத் அந்த நினைவுகளேதான்.. நினைக்க நினைக்க பெருக்கெடுக்கும் உணர்வு ஊற்றுதான் அந்த உயிரைப் பிடித்திருக்கும் உறவுச் சங்கிலி..
மறக்க முடியாத விஷயங்கள் ஒவ்வொருவருக்கும் நிறைய இருக்கும். காதலி குறித்தும் இப்படித்தான் பலர் நினைவில் மூழ்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எப்படியெல்லாம் காதலியரைப் பற்றி காதலர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதை பெரிய லிஸ்ட் போட்டுச் சொல்லியுள்ளனர் அனுபவசாலிகள்... பார்ப்போமா...
உள்ளுக்குள் இதமாக்கி..
நினைவுகள் குறித்து ஹருகி முரகாமி இப்படிக் கூறுகிறார்... நினைவுகள் உள்ளுக்குள் உங்களை இதமாக வைத்திருக்கும். அதேசமயம், உங்களை துண்டு துண்டாக சிதறடிக்கவும் செய்யும்.. எவ்வளவு உண்மை..
புன்னகையில் ஆயிரம் அர்த்தம்
காதலியரின் புன்னகையை யாராலும் மறக்க முடியாது.. சின்னதாக ஒரு மெல் சிரிப்பும்... ஹாஹாஹா வென பலத்த சிரிப்பு.. இரண்டுமே இருவேறு எக்ஸ்ட்ரீம்கள்... இருந்தாலும் உயிருக்குள் ஊடுறுவி உங்களை உருக வைத்து விடும். காதலர்கள் தங்களது காதலியின் புன்னகையைத்தான் முதலில் நினைவில் கொள்கிறார்களாம்.
பார்வை ஒன்றே போதுமே...
அந்தப் பார்வைக்கு ஈடாகுமா... காதலியின் கூர்ந்த விழிகள் காதலர்கள் மீது குத்தி நிற்கும்போது அதில் தொக்கி நிற்கும் காதலையும், ஏக்கத்தையும் எப்படி மறக்க முடியும்.. காதலர்களுக்கு ரொம்பப் பிடித்தவற்றில் இந்தக் கண்களுக்கும் முக்கிய இடமுண்டாம்.
சின்னப் பேச்சில் சில்லிடும் சுகந்தம்
ஒவ்வொரு காதலனும் ரசிக்கும் இன்னொரு விஷயம், காதலியின் பேச்சுக்களையும், அவரது உச்சரிப்பையும்தானாம். தான் பேசும்போது தன்னைக் கவனிக்கும் காதலியிடமிருந்து வரும் சின்னச் சின்ன ரியாக்ஷன்களை அவர்கள் கூர்ந்து கவனித்து ரசிப்பார்களாம். ஒரு சின்ன 'உம்' கொட்டுதல் கூட அவர்களை கிறங்கடிக்குமாம்... காதல் வந்தால் எப்படியெல்லாம் ரசிக்க வைக்கிறது பாருங்கள்...
நடையில் தெரியும் நளினம்
காதலர்களுக்கு மறக்க முடியாத இன்னொரு விஷயம் காதலியரின் நடையாம். நீ வரும்போதே என் நெஞ்சம் தடதடத்தது... உன் பாரத்தால் அல்ல... உன் பாதம் நடப்பது என் இதயம் மீதல்லவா... இப்படியெல்லாம் காதலியரின் நடையைப் பார்த்து கவி பாடுகின்றனராம் இந்தக் காதலர்கள்... நெஞ்சமெல்லாம் நீயே...என்பதற்கு இதுதானோ அர்த்தம்...
குமரி உருவம்.. குழந்தை உள்ளம்
குமரி உருவம்.. குழந்தை உள்ளம்... ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ... என்பது பாடல். பல காதலர்களுக்கும் தங்களது காதலியின் இந்தக் குழந்தைத்தனம், வெகுளித்தனம், அறியாமை இவையெல்லாம் கூட ரொம்பப் பிடிக்குமாம். காரணம், இப்படிப்பட்டவர்களிடம் கோபம் வந்தால் சட்டென்று பறந்து போய் விடும். பாசம் அதிகமாக இருக்கும், காதலும் கட்டுக்கோப்பாக இருக்கும் என்பதால்..
ஸ்பரிசம்
உன் பக்கத்தில் நின்றேன்.. தென்றல் என்னைத் தாலாட்டியது.. நீ தொட்டதாலோ அல்லது கை பட்டதாலோ அல்ல.. உன் சுவாசத்தின் ஸ்பரிசம் என்னை தீண்டியதால்... காதலியரின் சின்னச் சின்ன ஸ்பரிசம் கூட சொர்க்கத்தின் வாசல்படியாக தெரிகிறதாம் காதலர்களுக்கு. உடலோடு உடல் உராய்வதைக் காட்டிலும் இப்படிப்பட்டசின்னச் சின்ன ஸ்பரிசங்களுக்குத்தான் உணர்வு ஆயுள் அதிகம்... அழகான ஹைக்கூ கவிதைகள் இந்த குட்டி குட்டி ஸ்பரிசங்கள்...
நீ பேசு... நான் பாட்டு கேட்கிறேன்
நிறைய காதலர்களுக்குப் பிடித்த விஷயம் இதுதான். என்னமோ அப்படித்தான் பெரும்பாலானோருக்கு உண்மையாகவே அமைகிறது.. அது காதலியின் குரல் இனிமை.. நீ பேசு.. நான் பாட்டு கேட்கிறேன்.. உன் பேச்சில் என்று கவிதையே எழுதுவார்கள். அப்படிப்பட்ட குரல் இனிமையை எந்தக் காதலனும் அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டானாம்.
உன் நாசியில் என் ஆசை....
ஒவ்வொருவருக்கும் காதலியிடம் சில விஷயங்கள் பிடித்திருக்கும். கண் பிடிக்கும். இதழ் பிடித்திருக்கும்.. குரல் பிடித்திருக்கும். சிரிப்பு பிடித்திருக்கலாம்.. இன்னும் சிலருக்கு வித்தியாசமான ஆசைகள் இருக்கலாம். சிலருக்கு மூக்கு பிடிக்குமாம். சிலருக்கு தாங்கள் நேசிக்கும் பெண்ணின் புருவம் பிடிக்குமாம். சிலருக்கு அழகான நெற்றி பிடிக்குமாம். இப்படி ஒவ்வொருவருக்கும் சின்னச் சின்ன ஆசைகள்.. மறக்க முடியாதபடி நெஞ்சோடு இதமாய்....
கண்டுபிடிப்பது கடினம்.. மறப்பது ரொம்பக் கஷ்டம்
காதல் நினைவுகள் குறித்து அலிஷா ஸ்பீ என்பவர் கூறுகையில், காதலை கண்டுபிடிப்பது கடினமானது.. அதை போல அதைக் காத்துக் கொள்வது ரொம்பக் கஷ்டமானது. அதை விட கடின்மானது அதை மறக்கச் சொல்வது...
நினைவுகள் தோட்டாக்கள் போல...
நினைவுகள் தோட்டாக்கள் போல... சில தோட்டாக்கள் விர்ரென்று உங்களைத் தாண்டிச் சென்று விடும். சில நினைவுத் தோட்டாக்கள் உங்களைத் தாக்கி உங்களை தூள் தூளாக்கி விடும்.. காதல் நினைவுகள் இதில் 2வது ரகத்தைச் சேர்ந்தவை என்கிறார் ரிச்சர்ட் காட்ரி.
வலித்தாலும் நினைப்பேன்...
முன்னாள் நடிகை சோபியா லாரன் நினைவுகள் குறித்து அழகாகச் சொல்லியுள்ளார்... நான் என் கடந்த கால நினைவுகளை மறக்கவோ, தடுக்கவோ முயற்சிக்க மாட்டேன்.. குறிப்பாக காதல் நினைவுகளை. அவை வலித்தாலும் கூட நான் மறக்காமல் நினைப்பேன். கடந்த காலத்தை மறப்பது சரியல்ல என்பது எனது எண்ணம். நீங்கள் இன்று இருக்கும் நிலைக்கு உங்களது கடந்த காலம்தான் காரணம், அடிப்படை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எவ்வளவு உண்மை.. நினைவுகளைத் தேக்கி வையுங்கள்.. அது உங்களை மட்டுமல்ல உங்களது காதலையும் கூட வாழ வைக்கும்!.