குவைத்தில் அன்றும், இன்றும், என்றும்: அனுராதா ஸ்ரீராம், ரோபோ சங்கர் பங்கறே்பு
குவைத்: குவைத் தமிழ்ச் சங்கம் நடத்திய அன்றும், இன்றும், என்றும் இன்னிசை நிகழ்ச்சி கடந்த 1ம் தேதி நடந்தது.
குவைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அன்றும், இன்றும், என்றும் என்ற தலைப்பில் கடந்த 1ம் தேதி இன்னிசை இரவு நிகழ்ச்சி நடந்தது. குத்து விளக்கேற்றி தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மெல்லிசை, நாட்டுப்புற இசை என்று பல்வேறு காலங்களில் வெளியான தமிழ் திரை இசைப் பாடல்கள் பாடப்பட்டன.
பிரபல பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் மேடையில் பாடப் பாட பார்வையாளர்கள் ஆடத் துவங்கிவிட்டனர். ஸ்ரீதர் தலைமையிலான ஸ்ரீ ராஜ் மெலோடிஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சி அருமையாக இருந்தது. பின்னணி பாடகர் வேல்முருகன் நாட்டுப்புற பாடல்கள் பாடி பார்வையாளர்களை அசத்தினார். ரோபோ சங்கர் தனது பாணியில் நகைச்சுவை கலந்த மிமிக்ரி செய்தார். அவர் பேசப் பேச அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது.
நிகழ்ச்சியில் குவைத் தமிழ்ச் சங்க தலைவர் டாக்டர் பி. ரவிக்குமார், பொதுச் செயலளார் ஏ. மாரியப்பன், விளம்பரதாரர்கள் கூட்டாக சேர்ந்து பொங்கல் மலரை வெளியிட்டனர். 1,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியை டிவி தொகுப்பாளினி பிரியதர்ஷினி தொகுத்து வழங்கினார்.