முத்துப்பேட்டை– ஜாம்புவானோடை ஷேக் தாவூது ஆண்டவர் தர்ஹா 711வது ஆண்டு கந்தூரி விழா
முத்துப்பேட்டை - ஜாம்புவானோடை ஷேக் தாவூது ஆண்டவர் தர்ஹாவின் 711வது ஆண்டு பெரிய கந்தூரி விழா கடந்த 13ம் தேதி மாலை 5 மணிக்கு வெகு விமர்சையாக துவங்கியது. முன்னதாக தர்ஹா வளாகத்தில் தர்ஹா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் தலைமையில் துஆ ஓதப்பட்டு திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் புனித பல்லாக்கு ஊர்வலத்தினை துவக்கி வைத்தார்.
ஊர்வலத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட புனித பல்லாக்கு இரண்டுடன், 8 நாட்டிய குதிரைகள், யானை, ஒட்டகம், இரண்டு கண்ணாடி ரதம், சிறிய கூடுகள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வண்டிகள், பேண்டு வாத்தியங்கள், மேள தாளங்கள் முழங்க புனித கொடி ஊர்வலம் தர்ஹாவிலிருந்து புறப்பட்டு கோரையாற்று பாலம் வழியாக ஆசாத் நகர், திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பேருந்து நிலையம் வந்து பின்னர் புதிய பேருந்து நிலையம் சென்று அதே வழியாக மீண்டும் தர்ஹா சென்றடைந்தது.
இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய வெளிமாநிலங்களிலிருந்தும் மாற்று மத பக்தர்கள் பல்லாயிரக்கணக்கனோர் கலந்து கொண்டனர்.
கந்தூரி விழா ஏற்பாடுகளை தர்ஹா நிர்வாக கமிட்டி செய்து இருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவாரூர் எஸ்.பி. மகேஷ்குமார் மேற்பார்வையில்; முத்துப்பேட்டை டி.எஸ்.பி. பாஸ்கர் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் சப்-இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.