கோடை மழை நாளில் காதலாய் சில நினைவுகள்…
பருவகாலத்தில் பெய்யும் மழையை விட கோடை காலத்தில் பெய்யும் மழைக்கு தனி விஷேசம் உண்டு. வெப்பத்தில் தகிக்கும் பூமியை குளிர்விக்க பெய்யும் மழை அது.
கோடை காலத்தில் அநேகமாக மாலை அல்லது இரவில்தான் மழை கொட்டும். இடியும் மின்னலுமாய் வானத்தில் தனியாய் ஒரு ராஜாங்கம் அரங்கேறும்.
சிலசமயம் ஆலங்கட்டிகள் கூட கொட்டும். அதை பொறுக்கி பாட்டிலில் சேகரிப்பது கூட தனி சுவாரஸ்யம்தான். பருவ கால மழையில் நனைய வேண்டாம் என்று எச்சரிக்கும் பெற்றோர்கள் கூட கோடை மழையில் குளிக்க சம்மதம் சொல்லிவிடுவார்கள்.
வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக இதோ கோடை மழை கொட்டத் தொடங்கிவிட்டது. இதுபோன்ற ஒரு மழைநாளில் ஏற்பட்ட சில சுவாரஸ்ய அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்
நிறம் மாறும் வானம்
காலையில் இருந்தே வாட்டி வதைக்கும் வெயில் புழுக்கத்தை அதிகரிக்கும் அப்போதே உணர்ந்து கொள்ளலாம் மாலை நேரத்தில் மழை அடித்து ஆடப்போகிறது என்று. அதே போல மதியத்தில் இருந்தே வானத்தில் மாற்றங்கள் ஆரம்பமாகிவிடும்.
சின்னச் சின்ன மின்னல்கள்
கருமேகங்கள் சூழ்ந்திருக்க வானத்தில் பளிச் பளிச் என்று மின்னி இதோ இன்னும் கொஞ்சநேரத்தில் இடிக்கப்போகிறேன் என்று அறிவிக்கும். சொன்னது போல இடிச்சத்தம் காதைப் பிளக்கும்.
மண்வாசனை ஆளை அசத்தும்
அது என்னவோ தெரியாது கோடை காலத்தில் மழை பெய்யும் போது மட்டும் அலாதியான வாசனை ஆளைத்தூக்கும். அதற்காகவே ஜன்னலை திறந்து வைத்து மழையை ரசித்த நாட்கள் உண்டு.
ஆலங்கட்டி சேகரித்த அனுபவம் இருக்கா?
கிராமப்புறங்களில் அதிகம் ஓட்டுவீடுதான். கோடை காலத்தில் பெய்யும் மழையில் சின்னச் சின்ன கற்களை எறிவது போல ஓடுகளில் சத்தம் கேட்கும் அப்போதே புரிந்து விடும் ஆலங்கட்டி விழுகிறது என்று அதை சேகரிக்க தனி போட்டியே நடக்கும்.
ஓழுகும் மழைநீரில் குளியல்
அங்கொன்றும் இங்கொன்றுமாக காரை வீடுகள் இருந்தாலும் மழை நீர் வழிந்தோடுவதற்கு குழாய் பொருத்தியிருப்பார்கள். அதை தூம்பு என்று ஊர்ப்பக்கம் கூறுவார்கள். அதை தேடிச் சென்று அதில் கொட்டும் மழை நீரில் குளிக்கும் அனுபவம் தனி சுகம்தான்.
கப்பல் விளையாட்டு
பள்ளி விடுமுறை காலம் என்பதால் நோட்டு புத்தகங்கள் பழையதாகவிடும் எடைக்கு போடுவதற்கு முன்பாக பாதி காகிதங்கள் கப்பல்களாகி மழைநீரில் மிதக்கவிடுவது அலாதியான மகிழ்ச்சிதான்.
துணையுடன் ஒரு பயணம்
மழை பொழியும் மாலை நேரத்தில் கடற்கரை சாலையில் துணையுடன் கை கோர்த்து நடப்பது தனி இன்பம். உங்கள் துணைக்கும் மழை மீதான காதல் இருப்பது முக்கியம். திருமணமான புதிதில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மழையில் நனைந்தவாறு பயணித்த நாட்கள் இப்போதும் கண்முன்னே வந்து செல்கிறது. அப்புறம் காய்ச்சல் வந்து அவஸ்தை பட்டது வேறு விசயம்.
இதோ தொடங்கிவிட்டது கோடை மழை. காதலோடு நனையுங்கள்... காய்ச்சல் வந்தால் அப்புறம் கவலைப்படலாம்.