‘ஸ்ரீ முருகா’ ராகுல் கபடே எழுதிய மின் புத்தகம்
ஆறுமுகக் கடவுளாம் முருகப்பெருமானைப் பற்றி பல்வேறு கதைகள் நிலவுகின்றன. அவரின் திருவிளையாடல்கள், சிவபார்வதி மைந்தனாகவும், விநாயகரின் சகோதரனாகவும் கூறப்படும் முருகனின் பெருமைகள் பல்வேறு புராணங்களில் கூறப்பட்டுள்ளன.
ஔவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தது. மயில்மீது ஏறி உலகை வலம் வந்தது. சூரனை வதம் செய்தது என இன்றைக்கும் முருகனின் திருவிளையாடல்கள், திருவிழாக்களாக அறுபடை வீடுகளிலும் கொண்டாடப்படுகின்றன.
முருகப்பெருமானுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது தென்னிந்தியாவிலும், ஏன் தமிழர்கள் வசிக்கும் வெளிநாடுகளிலும் கோவில்கள் அமைந்துள்ளன.
முருகனின் மீது பக்தி கொண்ட ராகுல் கபேடே, உலகம் முழுவதும் உள்ள முருகனின் ஆலயங்களுக்கு சென்று தகவல்களை சேகரித்ததோடு, முருகனைப் பற்றிய கதைகளையும் நூலாக தொகுத்து வெளியிட்டுள்ளார்.
பழங்கால இலக்கியங்களில் முருகனைப் பற்றி கூறப்பட்டுள்ளவை அனைத்தும் உண்மைதான் என்று தனது ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளதாக கூறும் கபடே, 5000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் வேலூர் பகுதியில் முருகன் வாழ்ந்ததற்கான தடயங்கள் காணப்படுவதாக தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆதி சங்கரர் முருகனுக்கு இயற்றிய சுப்ரமணிய புஜங்கம் பற்றியும் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் ராகுல் கபடே. முருக பக்தர்களுக்கு ஏற்ற நூல் இது என்று தெரிவிக்கின்றனர் இலக்கிய விமர்ச்சகர்கள்.