சான்பிரான்சிஸ்கோ தமிழ் மன்றம் நடத்திய கவியரங்கம் மற்றும் பட்டிமன்றம்
சான்பிரான்சிஸ்கோ: சான்பிரான்சிஸ்கோ பகுதி தமிழ் மன்றம் சார்பில் கலைமாமனி அப்துல் காதர் தலைமையில் கவியரங்கம் மற்றும் பட்டிமன்றம் டப்ளின் நகரில் கடந்த 16ம் தேதி நடைபெற்றது.
வற்றாத நதிகள் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. பெண்ணின் கண்ணீர், தியாகியின் ரத்தம், உழைப்பாளியின் வியர்வை, விண்ணின் மழைதுளி மற்றும் எழுத்தாளனின் மைத்துளி என்ற தலைப்புகளில் மிக அருமையான கவிதைகளை வாசித்தனர்.
அதனை தொடர்ந்து மகிழ்ச்சியும் நிறைவும் அதிகம் கிடைப்பது திருமணத்துக்கு முன்பே! திருமணத்துக்கு பின்பே! என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத்தில் பேசிய பேச்சாளர்கள் அதிரடியாகவும், மிகவும் சுவையாகவும், தலைப்புக்கு பொருந்தும் படியும், அனைவரும் ரசிக்கும் படியும் பேசி மக்களை மகிழ்வித்தனர்.
கவியரங்க மற்றும் பட்டிமன்ற நடுவர் அப்துல் காதரின் உரையும், நிகழ்ச்சி நடு நடுவே நாவண்மையுடனும், நகைச்சுவையுடனும் அவர் செய்த குறுக்கீடுகளும் நிகழ்ச்சிக்கு முத்தாய்பாக இருந்தன.
குடா பகுதியில் பட்டிமன்றம் மற்றும் கவி அரங்கத்தில் பேசியவர்களின் நாவன்மையை பாராட்டிய அப்துல் காதர், பட்டிமன்றத்தில் பேசியவர்கள் அருமையாகவும், கண்ணியத்துடனும் அனைவரும் ரசிக்கும் படியும், மிகுந்த தரத்துடன் பேசியதாகவும் அவர்களின் புகழை ராஜ் டிவி அகட விகடம் மூலம் அனைவருக்கும் கொண்டு செல்லப் போவதாகவும் கூறினார்.
80களிலும் 90களிலும் தமிழ் இளைஞர்களிடையே எழுச்சியை உருவாக்கிய அமரர் எம்.எஸ். உதயமூர்த்திக்கு மௌன அஞ்சலி செலுத்தி இந்தக் கூட்டம் தொடங்கபட்டது.
அப்துல் காதர் இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தனக்கு வரும் வருவாய் அனைத்தையும் தமிழகத்தில் அவர் தொடங்கியுள்ள ஊனமுற்றோர் நலவாழ்வு மையத்துக்கு கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்துல் காதரின் திறமைகளை உலகுக்கு வெளி கொணர்ந்தது கவியரசு கண்ணதாசன் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய 21வது வயதில் நரைகள் என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதையை கண்ட கண்ணதாசன், அந்தக் கவிதையை தன் புத்தகத்தில் வெளியிட்டதோடு நின்று விடாமல் கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு கடிதம் எழுதி மிக திறமை வாய்ந்த இந்த இளைஞரை கவனித்து வளர்க்குமாறு கூறியிருந்தார்.
பிறகு அப்துல் ரகுமான் அவரை சந்தித்து வாணியம்படி இஸ்லாமிய கல்லூரியில் ஆசிரியர் பதவி பெற உதவி இருக்கிறார்.