For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என் ஒவ்வொரு விரலும் உன் இதயம் வருடும்...!

Google Oneindia Tamil News

Throw away your worries
மனசு கலங்கிப் போய்க் கிடக்கும்போது என்னடா.. என்று பாசத்துடனும், பரிவுடனும் ஒரு சின்னக் குரல் நம் காதுக்கருகே வந்து கேட்கும்போது எப்படி இருக்கும் தெரியுமா மனசுக்கு...அனுபவித்தவர்களுக்கு அது நிச்சயம் புரியும்.

மனித மனசு அப்படிப்பட்டதுதான். எந்த ஒரு வேதனையாக இருந்தாலும், கலக்கமாக இருந்தாலும், வலியாக இருந்தாலும், ஆறுதல் அலைகள் அந்த மனக் கரைகள் மீது பட்டுத் தெறிக்கும்போது கிடைக்கும் நிம்மதி, சொர்க்கத்திற்குச் சமமானது.

என் தோள் இருக்கிறது சாய்ந்து கொள், என் கரம் இருக்கிறது பற்றிக் கொள் என்று தேடி வரும் ஆத்மாக்களைப் பார்க்கும்போதே மனது தேம்பத் தொடங்கி விடும். அழுகை நல்லதுதான், ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர், அதனால் இதுபோன்ற சமயங்களில் தாரளமாக அழலாம்... ஆறுதல் தரும் தோள் மீது சாய்ந்தபடி.

மனசுக்கு ஒன்றுமே தெரியாதுங்க. அது ஒரு குழந்தை போல. அந்த மனசை அதிகம் கஷ்டப்படுத்தக் கூடாது. கஷ்டம் வருகிறதா, மனசு சரியில்லையா, வலிக்கிறதா.. அமைதியாக இருங்கள். அழகான விஷயங்களை யோசித்துக் கொள்ளுங்கள், சந்தோஷ தருணங்களை நினைத்துப் பாருங்கள். ஒன்றும் முடியவில்லையா. வெளியில் போய் வெயிலையாவது வெறித்துப் பாருங்கள்.. உங்கள் மனம் கவர்ந்த விஷயம் அங்கு நிச்சயம் உங்களது கண்களுக்குப் புலப்படும்.. ஜோக் இல்லைங்க, நிஜம்தான்.

கவலைக்கு மருந்தேது என்பார்கள். அது அபத்தமானது. கவலைக்கும் மருந்துண்டு. சந்தோஷம்தான் அந்த மருந்து. மனசை அப்படியே வெறுமனே விட்டு விடுங்கள். எதையும் நினைத்துப் பார்க்காதீர்கள்.. அப்படியே நினைத்தாலும் கவலை வந்து உங்களைத் தாக்கிய விநாடிக்கு முதல் விநாடி நீங்கள் இருந்த சந்தோஷ தருணத்தை அப்படியே ரீவைண்டு செய்து பாருங்கள்... அதற்கு முந்தைய விநாடி உங்களை உற்சாகப்படுத்திய விஷயத்தை நினைத்துப் பாருங்கள்.. ஜில்லென்ற உணர்வு நிச்சயம் உங்களை ஆட்கொள்ளும்.

கவலைகளும், வருத்தங்களும், வேதனைகளும், வலிகளும் தாக்காத மனங்கள் உலகில் எங்குமே இருக்க முடியாது.. அப்படியே இருந்தாலும் நிச்சயம் அது மனித மனமாக இருக்க முடியாது. மனிதன் என்றால் கவலைகளும் சேர்ந்தவன்தானே... !

இந்த உலகம் அழகானது.. எந்த வேதனைக்கும் இங்கு மருந்துண்டு.. வெளியில் வந்து பாருங்கள், சாதாரண வானம் கூட கவர்ச்சியாக தெரியும்- நீங்கள் ரசித்துப் பார்த்தால். ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு இலையும், ஒவ்வொரு பறவையும், அதன் சின்னச் சின்ன கூக்குரலும்... எவ்வளவு அழகு.. பெய்யும் மழை, அடிக்கும் காற்று, கொளுத்தும் வெயில்... என்னை விட, உங்களை விட, நம்மைவிட இந்த உலகம் அழகானது.

இதை அனுபவிக்கவே ஒரு பிறவி போதாது... இதில் எதற்கு நமக்கு தேவையில்லாத கவலைகள்... ?

விட்டொழியுங்கள்.. சந்தோஷத்துடன் கை குலுக்குங்கள்.!

English summary
Every humanbeing is bitten by worries. This is natural. But we have to overcome the worries with our strong mind and happiness.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X