திருச்செந்தூரில் நாளை வைகாசி விசாக திருவிழா
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் நாளை 24ம் தேதி வைகாசி விசாக திருவிழா நடக்க இருக்கிறது. இதனால் திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்து வருகி்ன்றனர்.
அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 15ம் தேதி துவங்கியது. தினமும் பகலில் மூலவருக்கு உச்சிகால தீபாரதனை முடிந்ததும் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வனையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தை அடைகிறார். அங்கு அபிஷேகம், தீபாராதனை முடிந்ததும் சுவாமி அம்பாள் 11 முறை வசந்த மண்டபத்தை சுற்றி வந்து தங்க தேரில் எழுந்தருளி கோயிலை அடைகிறார்.
வைகாசி விசாக திருவிழா ஓட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வருப தீபாராதனை நடந்தது. 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயாரட்சை தீபாராதனை நடக்கிறது. நாளை 24ம் தேதி விசாகத் திருவிழாவன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடக்கிறது.
அதிகாலை 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 2.30 மணிக்கு தீபாராதனை, காலை 9 மணி்க்கு உச்சிகால பூஜை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி, தெய்வனையுடன் தங்க தேரில எழுந்தருளி வசந்த மண்டபத்தை சேருகிறார். அங்கு அபிஷேகம், தீபாராதனை முடிந்ததும் இரவில் முனி குமாரருக்கு சாப விமோசனம் கொடுத்து விட்டு கோயிலை அடைகிறார். இவ்விழாவில் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கோயிலில் குவிந்து வருகின்றனர்.