உலக மக்கள் தொகை தினம்: பள்ளிகளில் பாலியல் கல்வியின் அவசியம்
உலகம் முழுவதும் 15-19 வயது கொண்ட 1.6 கோடி பெண்கள் ஆண்டுதோறும் வளரிளம் பருவத்திலேயே கருத்தறிப்பதாக சர்வதேச புள்ளிவிபரம் கூறுகிறது.
இத்தகைய வளரிளம் பருவ கருவுறுதலுக்கு முதன்மைக் காரணமாக அமைவது, பாலியல் பற்றிய தெளிவான புரிதலின்மையும், கல்வியின்மையுமே ஆகும்.
ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதம் 11-ம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக ஐநா சபை அறிவித்துக் கடைபிடித்து வருகிறது. இந்த ஆண்டு மக்கள் தொகை தினத்தை "வளரிளம் பருவ கருவுறுதலுக்கு எதிரான விழிப்பு உணர்வு' என்ற கருப்பொருளுடன் அனுசரிக்க ஐ.நா. முடிவெடுத்துள்ளது.
இறக்கும் இளம் தாய்மார்கள்
உலகம் முழுக்க 15-19 வயதுள்ள 1.6 கோடி பெண்கள் ஆண்டுதோறும் வளரிளம் பருவத்திலேயே கருத்தறிப்பதாக சர்வதேச புள்ளிவிபரம் கூறுகிறது. மகப்பேறின்போது இவர்களில் கணிசமானோர் இறக்கிறார்கள்.
ஏழை மற்றும் வளரும் நாடுகள்
வளரிளம் பருவ மகப்பேறின்போது இறக்கும் இத்தகைய பெண்கள் பெரும்பாலும் ஏழை மற்றும் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இந்தியாவில் இத்தகைய மரணங்கள் அதிகமாகவே காணப்படுகிறது.
வறுமை எழுத்தறிவின்மை
வறுமை, சமத்துவமின்மை, எழுத்தறிவின்மை போன்ற பல சமூக சிக்கல்களுக்கும் காரணமாக இந்த வளரிளம் பருவ கருவுறுதல் அமைகிறது.
பாலியல் விழிப்புணர்வு
இத்தகைய வளரிளம் பருவ கருவுறுதலுக்கு முதன்மைக் காரணமாக அமைவது, பாலியல் பற்றிய தெளிவான புரிதலின்மையும், கல்வியின்மையுமே ஆகும்.
வெறும் 15 சதவிகிதம்
சமீபத்தில் டெல்லியில் 15-24 வயதுள்ளோரிடம் நடத்திய ஓர் ஆய்வில், வெறும் 15 சதவிகிதத்தினர் மட்டுமே பாலியல் தொடர்பான கல்வி பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது.
பாலியல் குற்றங்கள்
பாலியல் கல்வி மறுக்கப்படுவதும், பாலியல் பற்றிய தெளிவான புரிதலை ஏற்படுத்தாத நடைமுறை வாழ்வும்தான் பாலியல் தொடர்பான குற்றங்கள் மற்றும் வளரிளம் பருவ கருவுறுதலுக்கான காரணம் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது
பாலியல் கல்வியின் அவசியம்
அதேபோல, "பாலியல் பற்றிய அறிவு திருமணத்திற்குப் பிறகும் பெரும்பாலான இந்தியர்களுக்கு ஏற்படுவதில்லை" என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கெல்லாம் தீர்வாக முறையான பாலியல் கல்வி அமல்படுத்த வேண்டியது அவசியம்.
பள்ளியில் பாலியல் கல்வி
வளரிளம் பருவத்தினரிடையே பாலியல் அறிவை ஏற்படுத்த இந்திய அரசு 1999 ஆம் ஆண்டு முதலே முயற்சி செய்து வருகிறது. மக்கள் தொகைக் கல்வியோடு இணைத்து பாலியல் கல்வியை அறிமுகப்படுத்தும் செயல்திட்டமும் தோல்வியில் முடிந்தது.எவ்வாறு பாடத்திட்டத்தை அமைப்பது,எத்தகைய பாடங்களை அமைப்பது போன்ற குழப்பங்களாலேயே, அது நடைமுறைக்கு வராமலே போய்விட்டது.
பாதுகாப்பற்ற கருக்கலைப்பு
இந்தியாவில் வளர்ந்து வரும் இளம்பிராய பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையிலும்,வளரிளம் பருவ கருவுறுதலும், கருக்கலைப்பும் எண்ணிக்கையில் அதிகரித்து வரும் நிலையிலும்,பாலியல் கல்வியை அமல்படுத்த வேண்டிய அவசியத்தின் முதல் படியாக, இந்த வளரிளம் பருவ கருவுறுதலுக்கு எதிரான விழிப்பு உணர்வு தினம் முதல் படியாக அமைந்திருக்கிறது.
பொருளாதார பாதிப்புகள்
வளரிளம் பருவ மகப்பேறின் காரணமாக மரணம் ஏற்படுவது வெறும் உடல்நலத்தோடு தொடர்புடைய பிரச்னை மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் இதன் பாதிப்புகள் அதிகம். எனவே வளரிளம் பருவ கருவுறுதலையும், கருக்கலைப்பையும், மரணங்களையும் தடுக்க பள்ளிகளிலேயே பாலியல் கல்வியை கற்பிக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.