அட்டை, நத்தை, பாம்பு!…. அதிர்ச்சியூட்டும் மசாஜ்கள்!!
மசாஜ் செய்வது மனதிற்கு இதம் தரும்... மனஅழுத்தம் போக்கும். உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கைகளால் உடம்பை ஆங்காங்கே பிடித்துவிட்டு மசாஜ் செய்த காலம் போய் இப்போது ஆபத்தான விலங்குகளான பாம்பு, அட்டை போன்றவைகளைக் கொண்டு மசாஜ் செய்கின்றனர்.
இந்த மசாஜ்களை செய்துகொள்பவர்களுக்கு உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறதோ இல்லையோ பார்ப்பவர்களுக்கு ரத்தம் உறைந்து போகிறது.
பாம்பு மசாஜ்
இஸ்ரேல் நாட்டில் உள்ள மசாஜ் செய்யும் அழகுக் கலை நிலையம் ஒன்று தங்களது வாடிக்கையாளர்களுக்கு அமேசன் காடுகளில் பிடிக்கப்பட்டு பழக்கப்பட்ட பாம்புகளைக் கொண்டு மசாஜ் செய்கிறது.
மனஅழுத்தம் குறையுமாம்
பாம்புகளை மனிதனின் முதுகுப்பகுதி, தலைப்பகுதி, கழுத்துப்பகுதி, கால் போன்றவற்றில் ஊர விட்டு ஒரு விதமான புல்லரிக்கும் மசாஜ் இங்கே செய்யப்படுகின்றது.இந்த மசாஜ் சேவைகளுக்கு 80 டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. இந்த மசாஜ் செய்வதால் மன அழுத்தங்கள் வெகுவாகக் குறைக்கப்படுகின்றதாம்.
இந்தோனேசியாவியலும்
இதேவகையான மசாஜ் இந்தோனேசியாவில் உள்ள பார்லர்களிலும் செய்யப்படுகிறதாம். பாம்புகள் தங்களின் உடலின் மீது நெளிவதால் உண்டாகும் பயத்தின் விளைவாக மசாஜ் செய்து கொள்பவரின் உடலில் ‘அட்ரனலைன்' எனப்படும் ஒருவித ஹார்மோன் சுரக்கிறது.
மேலும், பாம்பின் கதகதப்பான தோல் மனித சருமத்தில் படுவதன் மூலமாக ஏற்படும் புதிய உணர்வின் பயனாக நமது ரத்த சுழற்சியில் புதிய வேகம் பிறக்கிறதாம்.
அட்டைப்பூச்சி
லீச் தெரபி எனப்படும் அட்டைபூச்சி மசாஜ் தற்போது பிரபலமாகி வருகிறது. நடிகை டெமி மூர் லீச் தெரபியின் ரசிகையாம். இதனால் இளமை தக்கவைக்கப்படுகிறது என்று நம்புகிறார் இவர். ரத்தம் உறிஞ்சும் அட்டைப்பூச்சியை மசாஜ் செய்ய பயன்படுத்தி அட்டையை உறைய வைக்கின்றனர்.
நத்தை மசாஜ்
ரஷ்யாவின் கிராசனோயக்ஷா நகரில், ‘நத்தை மசாஜ் கிளப்' உள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்களை, படுக்க வைத்து, அவர்களின் முகங்களில், சிறிய அளவிலான நத்தைகளை நடக்க விடுகின்றனர். இந்த நத்தை மசாஜ் செய்வதற்காக, வாடிக்கையாளர்களிடம், கணிசமான ஒரு தொகையையும் கறந்து விடுகின்றனர்.
இந்த நத்தை மசாஜால், முகத்தில் உள்ள தோல்கள் புத்துயிர் பெறுகின்றன. முகச் சுருக்கங்கள், முகத்தில் நீண்ட நாள் வடுக்கள், தழும்புகள் ஆகியவை மறைந்து, முகம் புதுப் பொலிவு பெறுகிறது என்கின்றனர், இந்த கிளப்பை நடத்துவோர்.
மீன் மசாஜ்
ஒரு கண்ணாடித் தொட்டி நிறைய தண்ணீர் வைத்து அதில் குட்டிக்குட்டி மீன்களை மிதக்க விட்டு விடுவார்கள். காலில் ஒரு திரவத்தை தடவி தொட்டியினுள் முட்டி நனையும் வரை கால்களை வைக்கச் சொல்கிறார்கள். மீன்கள் மொய்த்து எடுத்து விடும். கைகளுக்கும் இதேபோல செய்யலாம். இது தான் மீன் மசாஜ்.
கூச்சமா இருக்கே
ஆரம்பத்தில் கூச்சம் இருந்தாலும் கொஞ்ச நேரத்தில் கூச்சத்துக்கு பழகி விடும். கை, கால்களில், நகங்களில் உள்ள உள்ள அழுக்குகளை மீன்கள் சுரண்டிச் சாப்பிட்டு விடுமாம். வெளிநாடுகளில் மட்டுமல்ல இந்தியாவிலும் இப்போது இந்தவகையான மசாஜ் பிரபலம்.