யாதும் ஊரே, யாவரும் கேளிர்... தேசிய தைவான் பல்கலைகழகத்தில் பலே போட்டி
தைபே: தைவான் தமிழ்ச்சங்கம் சார்பில் தொடர்ச்சியாக நடத்தப்படும் தமிழ் அமர்வின் ஒன்பதாம் அமர்வு தைபே (Taipei) நகரில் உள்ள தேசிய தைவான் பல்கலைகழகத்தில் (National Taiwan University) சிறப்பாக நடைபெற்றது.
முனைவர். திருமாவளவன் அவர்கள் தலைமையேற்று அவை முன்னவராக இருந்து வழிநடத்தினார். நிகழ்ச்சியின் தொடக்கமாக ''தொல்காப்பியரின் அறிவியல் சிந்தனைகள்" என்ற தலைப்பில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் திருமதி கே. திலகவதி அவர்கள் காணொளி வழியாக நேரிடையாக சிறப்புரையாற்றினார்.
'ஒல்காப்புகழ் கொண்ட தொல்கப்பியம்' ஒரு மிகசிறந்த அறிவியல் நூல் எனவும் தொல்காப்பியர் ஒரு மொழியியல் அறிஞர் மட்டுமல்ல அவர் ஒரு அறிவியல் அறிஞர் எனவும் கூறி தொல்காப்பியத்தின் பகுப்புகளை விவரித்து கூறினார். தொல்காப்பியர் மனித வாழ்வியலுக்கு தேவையானவற்றை மூன்றே விடயங்களாக கூறியுள்ளார். அவை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்.
பாடல் மூலம் விளக்கம்
முதற்பொருள் என்பது நிலமும் பொழுதும், அவற்றைப்பற்றி தொல்காப்பியர், "மாயோன் மேய காடுறை உலகமும் , சேயோன் மேய மயில்வரை உலகமும், வேந்தன் மேய பெருமணல் உலகமும்" என்ற பாடல் மூலம் விளக்கியுள்ளார். அதாவது இவ்வுலகம் காடும் காடும் , வயலும் வயலும், நீரும் நீரும் சார்ந்ததாக உள்ளதையே 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே குறிப்பிட்டுள்ளார். கருப்பொருள் பற்றி "தெய்வம், உணா, மா, மரம், புள் " எனத்தொடங்கும் பாடல் மூலம் விளக்கியுள்ளார். உரிப்பொருளில் மனித ஒழுக்கத்தை பற்றி "புணர்தல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல்" எனத்தொடங்கும் பாடல் மூலம் அழகாக விளக்கியுள்ளார்.
உலக இயக்கம் பற்றி தொல்காப்பியர்
உலக இயக்கம் பற்றி தொல்காப்பியர் இவ்வுலகம் ஐம்பூதங்களால் ஆகி எவ்வாறு இயங்குகிறது என்பதை "நிலம், நீர், தீ,வளி, விசும்பொடு ஐந்தும் கலந்த உலகமாதலின்" என்ற நூற்பா மூலம் கூறியுள்ளார் . மேலும் பல்வேறு நூற்பாக்கள் மூலம் எண்ணுவியல் கணிதவியல், விண்வெளியியல் , சூழ்நிலையியல் போன்ற அறியவியல் கூறுகளை அழகாக எடுத்துரைத்துள்ளார்.
இயற்கை மருத்துவம்
இயற்கை மருத்துவம் பற்றி "வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் வேம்பும் கடும்பும் போல எம்சொல் வெஞ்சொல் தாங்குதலின்றி" என்ற நூற்பாமூலம் விளக்கியுள்ளார். மேலும் பல்வேறு நூற்பாக்கள் எடுத்துக்கூறி, அதன் மூலம் தொல்காப்பியர் ஒரு மிகசிறந்த அறிவியல் அறிஞர் என்பதை அழகுற விவரித்தார்.
பழக்க வழக்கங்கள்
இரண்டாவதாக கொரிய வாழ் தமிழர் முனைவர். சுரேஷ்குமார் மந்திரியப்பன் அவர்கள் "தமிழ் கொரிய நாட்டுப்புற பழக்க வழக்கங்களின் ஒப்பீடு" என்ற தலைப்பில் பேசினார். நம் பொங்கல் பண்டிகையில் மாட்டிற்கு படைத்தல் மற்றும் மாட்டுபொம்மைகள் செய்து வணங்குதல், கும்மி பட்டு -காங்காங், சாங்கு- கேரளாவின் இடக்கை(உடுக்கை போன்ற பெரியது), பொங்கல் பண்டிகையின் புது தாணியப்படையல் கொரியாவின்-புது தாணியப்படையல் போன்றவற்றின் மூலம் தென் கொரியர்களின் பல்வேறு பழக்க வழக்கங்கள் தென் இந்தியாவின் பழக்க வழக்கங்களோடு ஒத்துப்போவதை அறியலாம் என்றார்.
யாதும் ஊரே
விவேகாநந்தன் அவர்கள் "கிளிபாட்டி" என்ற தலைப்பில் பேசினார். அவர் தனது உரையின் தொடக்கமாக கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்' பாடலில் வரும் மற்றொரு வரியில் "திறவோர் கட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே" என தமிழரின் வாழ்வியலை அழகாக எடுத்துரைத்துள்ளார். அத்தகைய அழகான வாழ்வியலை வாழும் "கிளிப்பாட்டி" என்ற கதையின் மூலம் அழகாக எடுத்துரைத்தார்.
வாழ்வியல் விழுமியங்கள்
முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர் திரு. டேவிட் அச்சுதர் பேசுகையில் ஈன்றெடுத்த தாயையும் தாய் மொழி தமிழையும் வணங்கி "தமிழனின் வாழ்வியல் விழுமியங்கள்" என்ற தலைப்பில் புறநானுறு குறுந்தொகை மற்றும் பல சங்க இலக்கியங்களை மேற்கோள் காட்டி பேசினார்.
தமிழ் ஆர்வலர்கள்
மனிதனது செயலுக்கு வழிவகுக்குகின்ற விழுமியங்கள் மனிதத்தன்மையினுள் நிலவுகின்ற இயற்கையின் விடயமாகும் என்றார். இந்நிகழ்ச்சியில் தைவானில் வாழும் தமிழ் ஆர்வலர்கள் பலரும், தைவான் தமிழ்சங்க நிர்வாகிகள் மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சி தமிழ் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.