வனம் வானம் வாழ்க்கை... இயற்கையை பேசும் ஒரு புத்தகம்
இயற்கை பாதுகாப்பு, இயற்கை விவசாயம் போன்ற துறைகளில் வியத்தகு சாதனைகள் புரிந்த முன்னோடிகளை அடையாளம் காட்டும் நூல் தான் வனம், வானம், வாழ்க்கை.
சென்னை: இயற்கையை பற்றியோ, இயற்கை விவசாயம் பற்றியோ எழுதப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை படிப்பது என்பது நம்மில் பலருக்கும் இயலாத செயல். இயற்கை பாதுகாப்பு, இயற்கை விவசாயம் போன்ற துறைகளில் வியத்தகு சாதனைகள் புரிந்த முன்னோடிகளை அடையாளம் காட்டும் நூல் தான் வனம், வானம், வாழ்க்கை.
சென்னை புத்தகக் கண்காட்சி நிறைவடைய உள்ள நிலையில் புத்தக கண்காட்சியில் அறிமுக எழுத்தாளர் க. அரவிந்த் குமார் எழுதிய வனம் வானம் வாழ்க்கை புத்தகம் பற்றி பார்க்கலாம்.
வனம், வானம், வாழ்க்கை
எந்த ஒரு துறையிலும் முன்னோடிகள் என்று சிலர் இருப்பார்கள். அவர்களுடைய சாதனைகளை, அவர்களுடைய பங்களிப்பை அறிந்து கொள்ளாமல் அந்த துறையில் புதிய சாதனைகளை நிகழ்த்துவது என்பதோ, அத்துறையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது என்பதோ சாத்தியமில்லை. அந்தவகையில், இயற்கை பாதுகாப்பு, இயற்கை விவசாயம் போன்ற துறைகளில் வியத்தகு சாதனைகள் புரிந்த முன்னோடிகளை அடையாளம் காட்டும் நூல் தான் வனம், வானம், வாழ்க்கை.
இளைய தலைமுறை
எமர்சன், தோரோ, மசானபு ஃபுகாகோ, சலீம் அலி, மா.கிருஷ்ணன் என்று சர்வதேசம் முதல் நமது உள்ளுர் வரை வாழ்ந்து மறைந்த இயற்கை முன்னோடிகளை, இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவதே இப்புத்தகத்தின் பிரதான நோக்கம்.
இயற்கை விவசாயம்
இயற்கையை பற்றியோ, இயற்கை விவசாயம் பற்றியோ எழுதப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை படிப்பது என்பது நம்மில் பலருக்கும் இயலாத செயல். குறைந்தபட்சம், அவர்களைப் பற்றிய சிறிய அறிமுகமாவது இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் தெரியும்போது இயற்கை மீதான ஓர் பார்வை அவர்களுக்கு ஏற்பட வாய்ப்பு உண்டு.
இலக்கிய ஆதாரங்கள்
வனம், வானம், வாழ்க்கை புத்தகம் அத்தகைய முன்னோடிகளை பற்றியே பேசுகிறது. கூடவே, பண்டைய தமிழ் சமூகம் தொட்டு, தற்போது வரை நம்முடனே பயணிக்கும் உயிரினங்கள் பற்றிய குறிப்புகளை இலக்கிய ஆதாரங்களுடன் இப்புத்தகத்தின் பின்பகுதி பேசுகிறது.
வாழ்வியல் கட்டுரைகள்
பாம்பு, தவளை, மயில், தேனீ என்று பல்வேறு விதமான உயிரினங்கள் தொடர்பான சங்க இலக்கிய பாடல்கள், பக்தி இலக்கிய பாடல்கள், அவற்றின் வாழ்வியல், தற்கால சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் அந்த உயிரினங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்த கட்டுரைகளும் இதில் அடக்கம்.
எழுத்தாளர் க. அரவிந்த் குமார்
பிரபல செய்தி தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் க.அரவிந்த் குமார் இப்புத்தகத்தை எழுதி உள்ளார்.
வடசென்னையின் காசிமேட்டில் பிறந்த இவர், ஊடகத்துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். கவிதை, சிறுகதைகள் போன்றவற்றை எழுதிவரும் அவரது முதலாவது புத்தகம் இதுவாகும்.
128 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் முக்கிய புத்தக விற்பனை நிலையங்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.