இரு சிந்தனைகள்.. நீங்களும் சிந்தியுங்களேன்!
சென்னை: நமது வாசகர் ஆகர்ஷிணியின் சிந்தனை இது. நீங்களும் கூட சிந்திக்கலாம்.
ஒன்று...
வருமானம் சிறக்கும் கோவில்கள், ஏதேனும் ஒரு கிராமத்தை தத்தெடுத்துக்கொள்ளலாமே... மேலும் மேலும் தங்கத்திலும் வைரத்திலும் ஆபரணங்கள் வாங்கி, அவற்றை யாரோ பின்னர் அபகரித்து செல்வதை விட்டு விட்டு, ஒரு விகிதத்தில் கிராம நலப் பணிக்காக, குடிநீர் தேவைக்காக, வேறேதேனும் வசதிக்காக செலவிடலாமே...
மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்... ஏழையின் சிரிப்பில் இறைவனை காண வேண்டுமென்றால், வருமானத்தில் ஒரு பகுதி, அந்த கோவிலை சுற்றியுள்ள கிராமத்தை தத்தெடுத்துக் கொள்வதோ, ஒவ்வொரு வருடமும் அல்லது ஆறு 3 மாதங்களுக்கு ஒரு முறையோ, சுழற்சி முறையில் ஒரு கிராமத்திற்காக சாலை அமைத்தல், குடிநீர் தொட்டி, ஆழ்துளை கிணறு போன்ற முக்கிய செலவு செய்வதோ செய்யலாமே...
கோவில் வருமானம் எல்லா சாதி மக்களும் அளிப்பதுதானே? வருமானத்தில் சாதி பார்க்கவில்லையென்றால், செலவு செய்வதற்கும் அந்த கிராம மக்கள் என்ன சாதி என்று ஆராய கூடாது, அல்லவா?
மேலும், பசித்த குழந்தைகள் பல பட்டினியால் வாடிக்கொண்டிருக்க, சிறப்பு நாட்களில் 108 குடம், 500 குடம், 1008 குடம் (செல்லூர் ராஜு அதை பால் கவருக்கு மாற்றி மாடர்னாக்கி விட்டார்) என்று பாலை அபிஷேகத்திற்கு பயன்படுத்தாமல், ஒரு அளவோடு நிறுத்திக்கொண்டு, அதற்கு மேல் சேகரிக்கும் பாலையும் அந்த கிராம பிள்ளைகளுக்காக வழங்கிடலாமே?
2வது சிந்தனை...
நம் கடவுள்களுக்கு முதலில் நாம் மரியாதை செலுத்துவோம்..
நாட்டில் ஒவ்வொரு மதத்தவர்க்கும் அவரவர் மதம் பிடித்தமானது. ஒரு மதத்தை மற்ற மதத்தவர் குறை கூறுவதும், அவருக்கு அதனால் கோபம் வருவதும் வாடிக்கையான நிகழ்வுகள்..
மற்றவரை சுட்டிக்காட்ட நினைத்து, சுட்டும் விரலை நீட்டினால், 3 விரல்கள் நம்மை சுட்டும்.. நம் முதுகில் உள்ள அழுக்கு நமக்கு தெரியாது எனவும் சொல்வர்.
கால்களில் மிதிபடும் நமது கடவுள்களின் உருவங்களை கண்டு நான் பதறியிருக்கிறேன்.
ஒன்றை நாம் ஒப்புக்கொண்டதாக வேண்டும்... மற்றெந்த மதத்திலும் கடவுள்களின் உருவத்தை இப்படி பிட் நோட்டீசுகளிலும், மற்ற பல காகிதங்களில் அச்சிட்டு அவற்றை மிதிபடும் நிலைக்கு ஆட்படுத்துவதில்லை.
நாம் மட்டும் ஏன் இதை செய்கிறோம்? பல வருடங்களாக லட்சுமி வெடி என்பது, பட்டாசு தயாரிப்பில் விற்பனையில் முக்கிய அங்கம் வகிக்கும் ஒரு தயாரிப்பு. அதில் செல்வக்கடவுள் லக்ஷ்மியின் படம் அச்சிடப்பட்டு இருக்கும். நம் கடவுள் பிம்பம் இப்படி சிதறுவதை நாம் பல வருடங்களாக
கண்டு களிக்கிறோம்!.... இது நமக்கு வருத்தம் தர வேண்டிய செயல் அல்லவா? பல்லாண்டு காலமாக இதை யாருமே நினைத்துக்கூட பார்ப்பதில்லையே?
சரஸ்வதி பூஜையன்று சில கல்வி மற்றும் கணினி பயிற்றுவிக்கும் நிறுவனங்களிலும் சரஸ்வதி யின் திருவுருவம் அச்சிட்டு கட்டணக்குறைப்பு பற்றி விளம்பரங்கள் வெளியிடுகிறார்கள்...
அந்த நோட்டீசுகளை பெறுபவர்கள், படித்து விட்டு அதை ஒன்று வேண்டுமென்றே நழுவ விடுவார்கள் அல்லது, ஒரு ஓரத்தில் போட்டு விட்டு சென்று விடுவார்கள்.. அந்த அழகிய கடவுள் உருவம், நடப்பவர்கள் காலடியில் மிதிப்படுவதை எத்தனை பேர் பார்த்து, அதை நிறுத்த நினைக்கிறோம்? நான் நினைத்திருக்கிறேன்...
இப்படி நம் கடவுள் பிம்பங்களை நாமே காலடியில் போட்டு மிதிப்பதை நிறுத்த வேண்டும்.
முதலில் நம் கடவுள்களுக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டுமென்றால், இப்படி காலில் மிதிப்படக்கூடிய பிட் நோட்டீசுகளிலும், மற்ற விளம்பரங்களிலும் கடவுள் உருவங்களை அச்சிடுவதை தவிர்க்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்... லட்சுமி வெடி லட்சுமி வெடியாகவே இருக்கட்டும், லட்சுமி படம் இல்லாமல்... சரஸ்வதி கல்வி நிலைய நோட்டீசுகள் அச்சிடட்டும், சரஸ்வதி படம் இல்லாமல்...!
செய்வோமா?