இது ஒரு குழந்தையின் கேள்வி... உங்கள் பதில் என்ன?
- சுஜாதா ஜெயராமன்
ஒரு அப்பா தன் பத்து வயது மகனிடம் கண்ணா, இன்று உனக்கு விடுமுறைதானே என்னோடு வா. நான் காட்டும் அடுக்கு மாடி குடியிருப்பை காண வா என்று ஆசையுடன் தன் செல்ல மகனை விலையுயர்ந்த சொகுசு காரில் அழைத்து போனார்
போகும் வழியில் வெறும் அடுக்கு மாடி வீடுகள். அப்பா சொன்னார், மகனே உன்னை மாதிரி நான் சின்ன பையனாக இருந்த போது இந்த இடமெல்லாம் வெறும் நெல் வயல்கள். இந்த இடத்தில் பெரிய கிணறு பம்ப்செட். சுற்றி தென்னை மர தோப்பு. நான் என் நண்பர்களுடன் விடுமுறை ஆனால் இங்கு வந்து பம்ப் செட் தண்ணீரில் குளித்து தென்னந்தோப்பில் இளநீர் குடித்து கூடவே நாலு மக்காச்சோளம் சுட்டு கடித்து பகல் முழுதும் தோப்பை சுற்றி விளையாடி மாலை ஆனதும் மாட்டு வண்டியில் வீட்டுக்கு சீட்டியடித்துக்கொண்டே செல்வோம்.
வீட்டிலும் கம்பு கூழ் தான் குடிக்க. நீ அந்த கஷ்டம் படக்கூடாது என்றுதான் நான் இத்தனை கஷ்டப்பட்டிருக்கிறேன். இந்த இடத்திலெல்லாம் நான் மொத்தம் மூன்று அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி விட்டேன். இப்பொழுது நாம் போக போவது நான் செய்யும் நான்காவது ப்ராஜெக்ட். இதோ பார் இந்த இடம் முழுதும் பெரிய ஏரி. இந்த இடம் முழுக்க ஏரி மதகு. இத்தனை தூரம் அந்த நாட்களில் நானும் நண்பர்களும் நடந்தே வருவோம்.
மதகிலிருந்து ஏரியில் குதித்து அந்த கோடி மதகுப்பக்கம் யார் முதலில் சேர்கிறார்கள் என்று பந்தயம். பலநாட்கள் நான் முதலில் வருவேன் என்று பேசிக்கொண்டே வந்தார். கண்ணா, நன்றாக படித்தால் வாழ்வில் முன்னேறலாம். நீயும் என் மாதிரி பெரிய கட்டட கலை நிபுணராகி பெரிய பெரிய கட்டடங்கள் கட்டி பெரிய அளவில் சாதித்து என் சொத்துக்களை மேலும் வளர்த்து கஷ்டமில்லாமல் வாழலாம்.
நீ வேண்டிய பொருட்களை வாங்கலாம். நீ விரும்பிய காரில் ஊர் சுற்றலாம். விமானத்தில் வெளிநாடுகளை சுற்றி பார்க்கலாம் என்று மகிழ்ச்சியுடன் பேசினார். அந்த சிறுவன் உடனே காரிலிருந்து கீழே இறங்கியதும் நீங்கள் சொன்னபடி கேட்கிறேன், நன்றாக படித்தால் நன்றாக வாழலாம் என்கிறீர்கள். நான் நன்றாக படிக்கிறேன். என்னக்காகத்தான் நீங்கள் உழைக்கிறீர்கள். ஒப்பு கொள்கிறேன். எனக்காகத்தான் சொத்து சேர்க்கிறீர்கள். மிக்க சந்தோஷம்.
நான் பிற்காலத்தில் வசதியாக வாழவே இத்தனையும் மதித்து வணங்குகிறேன். இத்தனையும் சேர்த்து வைத்தும் இயற்கையை காப்பாற்றவேயில்லையே நீங்கள் உங்கள் சின்னவயதில் இத்தனை சந்தோஷமாக இயற்கையுடன் பசுமை வாழ்க்கை வாழ்ந்திருக்கிறீர்கள். ஏரியில் நீச்சல் அடித்து இளநீர் குடித்து சோளக்காட்டில் சந்தோஷமாய் சுற்றியிருக்கிறீர்கள். ஆனால் நான்? என் குழந்தைகளுக்கு உங்களை போல என்ன அனுபவத்தை சொல்வேன்?
என் அப்பா வீட்டுக்குள்ளேயே எனக்கு ஒரு பெரிய நீச்சல் குளம் கட்டி கொடுத்தார் என்றா? வீட்டுக்குள்ளேயே ஒரு ஜிம் அமைத்து செயற்கையாக ஒரு மெஷின் மேல் ஓடினேன் என்றா? இந்த வாரம்தான் எங்கள் ஸ்கூலில் பசுமையின் முக்கியம் பற்றி படம் எடுத்தார்கள். அதில் மரங்களும் பசுமையும் இயற்கைக்கு எதிராக மிக அதிகமாக வெட்டி தள்ள படுவதால் பூமியே சூடாகிவிட்டது என்றும் பச்சைக்காடுகள் அழிக்க படுவதால் மழைபொழிவதே வெகுவாக குறைந்து விட்டது என்றும் இதை தவிர இருக்கும் ஏரி குளங்களும் தூற்றி அடுக்கு மாடி வீடு காட்டுவதால் தண்ணீர் பஞ்சம் கொடிய அளவுக்கு எதிர்கால சந்ததியை மிகக் கடுமையாக பாதிக்கும் என்றும் விளக்கமாக பாடம் எடுத்தார் இப்போது என் அப்பாவே இந்த பெரிய தவறு செய்வதை பார்க்க பயமாக இருக்கிறது.
எல்லா வயல்களும் ஏரிகளும் அடுக்கு மாடி வீடுகளாக மாறிவிட்டால் நானும் எனக்கு பிறக்கும் பிள்ளைகளும் என்ன சாப்பிட்டு உயிர் வாழ்வோம் இத்தனை சேர்த்து வைத்தும் நான் உயிர் வாழ தண்ணீர் சேமிக்கவில்லையே என்று இடி போன்ற வார்த்தைகளை கூறினான். அத்தனை பெரிய கட்டிடங்கள் கட்டிய அந்த அப்பாவுக்கு அந்த கேள்வி தலையில் அத்தனை கட்டிடங்களும் அவர் தலையில் விழுந்தது போல வலியை கொடுத்தது.
குட்டிக்கதைதான்.. ஆனால் யோசித்துப் பாருங்கள்.. பூமியைக் காக்க வேண்டியதன் அவசியம் புரியும்.