ஐந்தறிவே அரவணைக்கும்!
பிள்ளைகளால் கைவிடப்படும் பெற்றோரின் நிலைக்குறித்த கதை.
சிகாகோ: பெற்ற பிள்ளைகளே பெற்றோரால் இனி எந்த பயனும் இல்லை என பாராமாய் பார்க்கும் இந்த காலத்தில் நாம் வளர்க்கும் ஐந்தறிவு ஜீவன் எப்படி அரவணைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது இந்த கதை.
பகலவனும் பணி முடித்து பள்ளி அறை சென்றுவிட்டான். பறவைகளும் இரை வேட்டை முடித்து இணையோடு இன்பமாய் கூடு நோக்கி விரைந்தன. காலை முதல் மாலை வரை உழைத்த உழைப்பாளியும் ஓய்வெடுக்க ஆயுத்தமானான்.
இப்படி அனைவருமே ஓய்வைத்தேடி ஓடுகையில் ஒரே ஒரு நாய் மட்டும் அன்னை தெரசா பூங்காவில் ஓயாமல் அலறிக்கொண்டே இருந்தது. எல்லோருமே சென்று விட்ட நிலையில் ஏன் இந்த நாய் மட்டும் இப்படி குரைத்துக் கொண்டு இருக்கின்றது என்று பூங்கா காவலாளி கண்ணனுக்கு சந்தேகம் வந்தவனாக நாய் குரைக்கும் திசை நோக்கி விரைந்தான்.
அங்கே 60 வயது மிக்க முதியவர் ஒருவர் மயக்கமான நிலையில் கிடக்க நாய் ஒன்று கண்ணீரோடு கத்திக் கொண்டு இருந்தது. கண்ணன் அந்த பெரியவரை தூக்கி உட்காரவைத்து, முகத்திலே தண்ணீர் தெளித்து, குடிக்கவும் கொஞ்சம் தண்ணீர் தந்தான். சற்று மயக்கம் தெளிந்த பெரியவர் சாப்பிட ஏதாச்சும் கிடைக்குமா என்று கேட்டார். கண்ணன் தனக்காக வைத்திருந்த இரவு உணவை அவருக்கு கொடுத்தான். உணவு உட்கொண்ட பிறகு பெரியவர் சற்று தெம்பாக காணப்பட்டார்.
கண்ணன் அந்த பெரியவரிடம் அய்யா ஏன் இங்கு வந்து இப்படி கிடக்கிறீர்கள்? உங்கள் வீடு எங்கு உள்ளது? உங்கள் உறவினர்கள் எங்கு உள்ளனர் என்று வினவினான். சற்றே தெம்பானவராய் பெரியவர், கண்ணன் கேள்விகளுக்கு பதிலளிக்க தயாரானார். தம்பி எனக்கு எல்லாம் இருந்தும் எதுவும் இல்லா ஒரு நிலை.
அன்பான மனைவி மற்றும் அழகான ஒரே ஒரு மகன். எங்கே இன்னொரு குழந்தை வந்தால் இவனை சரியாக கவனிக்க முடியாதோ என்று எல்லா பாசத்தையும் இவன் மேல கொட்டி வளர்த்தோம். அவன் ஆசைப்பட்டது எல்லாம் கிடைக்கிற மாதிரி பார்த்து பார்த்து வளர்த்தோம். ஊரிலேயே சிறந்த பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்க வைத்து நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தோம். அவனுக்கு நல்ல வேலைக் கிடைத்தவுடன் நல்ல பெண்ணாக பார்த்து மிகவும் ஆடம்பரமாக அவன் திருமணத்தை முடித்து வைத்தோம். இப்படி எப்போதுமே எங்கள் மகன் சந்தோசத்திற்காக மட்டுமே உழைத்த நாங்கள் எங்களை பற்றி நினைக்க மறந்து விட்டோம்.
இந்த பூங்காவிற்கு நானும் என் மனைவியும் அடிக்கடி வருவோம். அப்படி ஒரு நாள் வந்தபோது இந்த நாய், மன்னிக்கவும் இந்த சோமு அடிபட்டு கிடந்தான். இவனை வீட்டுக்கு கொண்டு போய் மருந்து போட்டு குணப்படுத்தினோம். இவனையும் எங்கள் குடும்பத்தில் ஒருவனாய் பார்த்துக் கொண்டோம். இப்படியே வருடங்கள் உருண்டோடியது. எங்களால் என் மகனுக்கு எந்த பயனும் இல்லை என்ற நிலை வந்த போது அவன் எங்களை பாரமாய் பார்க்க ஆரம்பித்தான். இந்த சூழ்நிலையில்தான் சில மாதங்களுக்கு முன்பு என் மனைவி உடல் நலமின்றி இறந்து போனாள். எனக்கே எனக்காக இருந்த ஒரு துணையும் என்னை தனியாக தவிக்கவிட்டு சென்றுவிட்டது.
என்னால் அந்த வீட்டில் நிம்மதியாய் இருக்க முடியாது என்ற நிலையில்தான் இன்று அந்த வீட்டை விட்டே வெளியேறி விட்டேன். நான் சரியாக சாப்பிட்டு இரண்டு நாள் ஆனதால்தான் மயக்கமாகி விட்டேன். என் சோமுதான் சத்தம் போட்டு உங்களை அழைத்து என்னை காப்பாற்றினான்.
என்ன சொல்றது தம்பி ஐந்தறிவுக்கு இருக்கிற விசுவாசமும் அன்பும் ஆறு அறிவுக்கு இல்லாம போச்சே???.
கதை: சி. அய்யனார், சிகாகோ