நேஷ்வில் டென்னசியில் நடந்த 'பொங்கல் குயின்' விழா... நடிகை கஸ்தூரி பங்கேற்பு!
நேஷ்வில்(யு.எஸ்): அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் ஒன்றான டென்னசியின் தலைநகரம், நேஷ்வில் நகரில் பொங்கல் விழா 8 மணி நேரத்திற்கும் மேலாகக் கொண்டாடப்பட்டது.
நடிகை கஸ்தூரி இந்த விழாவில் கலந்து கொண்டு ‘ஜோடி விளையாட்டை' நடத்திக் கொடுத்தார்.
நேஷ்வில் நகரில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக டென்னசி தமிழ்ச் சங்கம் செயல்பட்டு வருகிறது. சமீப வருடங்களில் அங்கு தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் இங்குதான் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த பகுதி தமிழ்ச் சங்கத்திற்கு இவர்தான் ஆலோசகராகவும் இருந்து சங்க நிர்வாகிகளுக்கு, ஊக்கப்படுத்தி ஆதரவளித்து வருகிறார்.
பிப்ரவரி 13ம் தேதி, ஸ்ரீகணேசா கோவில் வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சுமார் 400க்கும் மேலானோர் கலந்து கொண்டனர். மதியம் 2 மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சிகள் இரவு 10;30 மணி வரையிலும் தொடர்ந்தது. மாலை காபி , டீ, ஸ்நாக்ஸ் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.
பெணகள் பங்கேற்ற சக்கரை பொங்கல் போட்டியில் வெற்றி பெற்றவர் ‘பொங்கல் குயின்' ஆக தேர்வு செய்யப்பட்டார்.
சிறுவர்களுக்கான ஓவியப்போட்டியில் 3 முதல் 14 வயதுகுட்பட்ட 37 பேர் பங்கேற்றனர். நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்தப்போட்டியில் 'ஹீரோ' என்ற கருத்து கொடுக்கப்பட்டிருந்தது. சில குழந்தைகள் தங்கள் அம்மா, அப்பாவையே ‘ஹீரோ' வாக வரைந்திருந்தது நெகிழ்ச்சி அடைய வைத்தது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் கலை நிகழ்ச்சி ஆரம்பமானது. சிறுவர்கள் பெரியவர்கள் பங்கேற்ற நடனங்கள். பாடல்கள் என சுமார் நான்கு மணி நேரம் நீடித்தாலும் பார்வையாளர்களை கட்டிப்போட்டு விட்டார்கள், காஸ்ட்யூம் மற்றும் மேடை அலங்காரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, மிகவும் நேர்த்தியாக நிகழ்ச்சிகளை வடிவமைத்திருந்தார்கள்.
ஜோடி விளையாட்டில் 8 ஜோடிகள் பங்கேற்றனர். கஸ்தூரி நெறிப்படுத்தி நடத்தினார். 'மேடையில் முத்தம்' என்று அறிவித்ததும் பார்வையாளர்கள் மத்தியில் ஏகத்துக்கும் டென்ஷன் ஏறியது. அப்படி ஒன்றும் நடக்காமல் வேறுவிதமாக முடித்ததும் சிரிப்பலையில் அரங்கம் அதிர்ந்தது.
தொடர்ந்து, ‘60 எண்றதுக்குள்ளே' நிகழ்ச்சியில் வாயிலேயே பொங்கல் கிண்டி கிச்சுகிச்சு மூட்டினர். பங்கேற்ற 16 பேர்களில் கஸ்தூரியும் ஒருவர். அவரையும் விட்டு வைக்காமல், வாயில் பொங்கல் கிண்ட வைத்து விட்டனர்.
முன்னதாக டென்னசி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சென்னை வெள்ள நிவாரண நிதியாக 20 ஆயிரம் டாலர்கள் நிதி திரட்டப்பட்டு தமிழ் நாடு அறக்கட்டளை மற்றும் உதவும் கரங்கள் மூலம் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நிதி திரட்ட பேருதவி புரிந்த கேரளா அசோசியோஷன் ஆஃப் நேஷ்வில், ஜெகநாத் சொசைசட்டி ஆஃப் அமெரிக்கா அமைப்புகள் பொங்கல் விழாவில் கவுரவிக்கப்பட்டன. கடந்த ஆண்டு தமிழ்ச் சங்கத்திற்கு பணியாற்றிய தன்னார்வத் தொண்டர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
தலைவர் ராஜ்குமார் சுபாஷ், செயலாளர் கோபி சுந்தரேசன் , துணைச்செயலாளர் ராஜாராம் பழனிசாமி, பொருளாளர் சீதாராமன் ராஜேந்திரன் தலைமையில் தன்னார்வத் தொண்டர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
-இர தினகர்