அபுதாபி நண்பர்கள் குழுவின் 'ஒன்றாய் துடிக்கும் இதயங்கள்': பாட்டு, நடனம், நாடகம்
அபுதாபி: அபுதாபியில் உள்ள அபுதாபி நண்பர்கள் குழுவின் 5வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
அபுதாபியில் உள்ள "அபுதாபி நண்பர்கள் குழு" (ADFC) சார்பில் 5-வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடந்த 14ம் தேதி மாலையில் ஒன்றாய்த் துடிக்கும் இதயம் என்று பெயரிடப்பட்ட ஆண்டு விழா கொண்டாட்டங்கள் துவங்கியது.
ஆனந்த் அண்ணாமலை மற்றும் சித்ரா செந்தில்குமார் ஆகியோர் வரவேற்புரை வழங்கி விழாவினை தொடங்கி வைத்தனர். ஏடிஎப்சியின் பொறுப்பாளர்கள் கிருஷ்ணபரதன், சிதம்பரநாதன், ஸ்ரீராம், சுனில் மற்றும் விளம்பரதாரர்கள் குத்து விளக்கை ஏற்றி வைக்க தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது.
கலை நிகழ்ச்சி
விழாவிற்கு ஏடிஎப்சியின் உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து சிறப்பித்தனர். இயல், இசை, நாடகம், நாட்டியம் என நான்கிலும் ஏடிஎப்சியின் குழந்தைகள் மற்றும் உறுப்பினர்கள் தங்களின் தனித் திறமையை வெளிக்காட்டி நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தனர்.
குறும்படம்
இணையதளங்களின் மூலமாக நிச்சயிக்கபடும் வரன்களின் விளைவுகளை பறைசாற்றும் விதமாக ஆர்த்தி மங்களா சுப்ரமணியன் இயக்கி ஜெகதீஷ் அவர்கள் தயாரித்த "இனிவேண்டாம்.com" என்னும் குறும்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டு அனைவரின் பாராட்டை பெற்றது.
நாடகம்
குழந்தைகளின் சரியான வளர்ப்புமுறையை எடுத்துரைக்கும் விதமாக கங்காதுரை அவர்களின் 'அகர முதல' என்னும் சிரிப்பு மற்றும் சிந்தனை கலந்த சிறப்பு நாடகம் அரங்கேற்றபட்டது.
விருந்து, பரிசு
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை இரவு விருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் நடனம், பாட்டு மற்றும் நாடகங்களில் பங்குபெற்ற குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பாராட்டி பரிசுக் கோப்பைகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.
பொன்னாடை
கடந்த ஆண்டில் அபுதாபி நண்பர்கள் குழுவின் வளர்ச்சிக்கு பணியாற்றிய செயற்குழு உறுப்பினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை ஏடிஎப்சியின் நண்பர்கள் குழுவினர் சிறப்பாக கவனித்து கொண்டனர். சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த விழாவினை சுஜீதா மற்றும் மகாலட்சுமி முருகப்பன் அவர்கள் அருமையாக தொகுத்து வழங்கினர். முடிவில் இந்திய தேசிய கீதம் முழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.