கொஞ்சம் கோபமும்.. சுவற்றில் விழுந்த பொத்தல்களும்!
-எழுத்தாளர் லதா சரவணன்
பதட்டம் போலவேதான் கோபமும், நம் நல்ல செயல்கள் அனைத்தையும் அழிக்கும் வல்லமை அதற்குண்டு. அதிக விலைகொடுத்து வாங்கிய காரை துடைத்துக் கொண்டு இருந்த தந்தை, அந்தக் காரில் சிறிய கீறல்களை ஏற்படுத்திவிட்டதற்காக தன்கோபத்தை சிறு மகன் மீது காண்பித்தார். கோபத்தின் காயம் சற்றே மங்கிய பிறகுதான் அவருக்குத் தான் செய்த தவறு புரிந்தது. ஆனால் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதால் யாருக்கு என்ன லாபம். அப்படி அவன் என்னதான் கிறுக்கியிருக்கிறான் என்று பார்த்த அப்பாவிற்கு யாரோ தன்னை சம்மட்டியால் அடித்ததைப் போல இருந்தது. ஐ.லவ் யூ அப்பா என்று அவன் எழுதியிருந்தான். தந்தையின் கோபத்திற்கு மகனின் பிஞ்சுவிரல்கள் பலியாகிப் போனது.
கண்மூடித்தனமான கோபங்களால் இழப்புகள் தான் அதிகரிக்கிறது. மருத்துவர் ஒருவரிடம் எனக்கு கோபம் அதிகமாக வருகிறது, அதை எப்படியாவது, அடக்கணும். நானும் எத்தனையோ முறை முயன்று பார்த்துவிட்டேன்.
கோபம் வரும்போது 1ல் இருந்து பத்து வரை எண்ணுங்கள் கோபம் தன்னாலே போயிடும்.
அதையும் முயற்சித்துப் பார்த்திட்டேன் டாக்டர் வேற ஏதாவது இருந்தா சொல்லுங்க ?! இந்த வார்த்தையை உபயோகிக்கும் போதே அந்த மனிதருக்கு கோபம் இலேசாக எட்டிப் பார்த்தது. இவரை என்ன செய்யலாம்ன்னு யோசித்த டாக்டர் தன் சீட்டில் ஒரு சுத்தியல் 20 ஆணிகள் என்று எழுதினாராம். இதைப் பார்த்ததும் வந்தவருக்கு இன்னமும் கோபம்.
என்ன சார் இது என்னை என்ன பைத்தியகாரன்னு நினைச்சிட்டீங்களான்னு கேட்டார்
உங்களுக்கு எப்போதெல்லாம் கோபம் வருகிறதோ அப்போதெல்லாம் இந்த ஆணியை உங்க வீட்டு சுவற்றில் அடியுங்கள். பத்து நாட்களுக்கு பிறகு நான் உங்களை வந்து பார்க்கிறேன்னு சொன்னாராம்.
முதல் நாள் 5 ஆணிகள், இரண்டாவது நாள் 7 அடுத்த நாள் 4 இப்படின்னு ஒவ்வொரு நாளும் ஆணியின் எண்ணிக்கை குறைந்தே வந்தது. பத்தாவது நாள் சொன்ன மாதிரி டாக்டர் வீட்டுக்கு வந்தார். அன்னைக்கு எந்த ஆணியும் அடிக்கலை.
சார் என்னோட கோபம் கொஞ்சம் குறைந்துவிட்டது. நீங்க கொடுத்த மருத்துவத்துக்கு நன்றின்னு சொன்னாராம்.
சரி இப்போ நீங்க அடிச்ச எல்லா ஆணிகளையும் பிடுங்கி எடுங்கன்னு சொன்னார் டாக்டர். ஏன்னு கேள்வி கேட்காம எல்லாத்தையும் எடுத்தார் அவர்.
ஆணிகள் கையிலே வந்திட்டாலும், உங்க சுவரெல்லாம் நிறைய பொத்தல்கள் விழுந்து போச்சு. உங்களைச் சார்ந்த எல்லாருடைய மனதிலும் இந்த மாதிரி பொத்தல்கள் தான் ஏற்படும்னு சொன்னாராம் டாக்டர்!.
எனவே, கோபத்தை கைவிடுவோம்.. மகிழ்ச்சியைக் கையில் எடுப்போம்.