இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் அன்னை கதீஜாவும், அண்ணலார் குடும்பமும் காப்பியம் வெளியீட்டு விழா
இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் அன்னை கதீஜாவும், அண்ணலார் குடும்பமும் காப்பியம் வெளியீட்டு விழா நடைபெற்றது.
சென்னை: இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில், டாக்டர் ஜின்னாஹ் ஷர்புதீன் ஆக்கத்தில் உருவான அன்னை கதீஜாவும், அண்ணலார் குடும்பமும் காப்பியம் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
வெள்ளம்ஜி ஜமால் தாவூது பதிப்பகத்தாரின் வெளியீடாக, டாக்டர் ஜின்னாஹ் ஷர்புதீன் ஆக்கத்தில் உருவான அன்னை கதீஜாவும், அண்ணலார் குடும்பமும் காப்பிய வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் சே.மு.மு முஹம்மதலி தலைமை தாங்க, துபை தொழிலதிபர் எம்.ஜே.எம்.இக்பால் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்த விழாவில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் முஹையதீன் காப்பியத்தை வெளியிட மூதறிஞர் சிலம்பொலி செல்லப்பனார், டாக்டர் உமா ஹாஷிம், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சாதிக் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் காப்பியச் சிறப்பு, அன்னை கதிஜாவின் மாண்பு, நபிகள் நாயகத்திற்கு அவர்கள் ஆற்றிய சேவைகள் பற்றி குறிப்பிட்டு, மக்கள் அனைவரும் மனிதநேயத்தை பேணி வாழ வேண்டும் என்று பேசினார். கே.எம்.காதர் முஹையதீன், புரவலர் எம்.ஜே.எம்.இக்பாலுக்கு இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில் 'சமுதாயச் செம்மல்' விருதும், ஜின்னாஹ் ஷர்புதீனுக்கு 'பெருங்காப்பியக்கோ' விருதும் வழங்கிப் பாராட்டிப் பேசினார்.
விழாவில் ஈரோடு தமிழன்பன், வீரபாண்டியன், பேராசிரியர் திருநாவுக்கரசு, ஜமாதுல் உலாம தலைமைநிலைய நிர்வாகி பேராசிரியர் தேங்கை ஷர்புதீன், வி.ஜெ.டி ட்ரஸ்ட் நிர்வாகி எம்.ஜே.அப்துல் ரவூப், கவிஞர் ஜா.முஹையதீன் பாட்ஷா, பேராசிரியர் டாக்டர் சதீதுத்தீன் பாகவி, டாக்டர் அஹமது மரைக்காயர், ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன், பேராசிரியர் மு. சயாபு மரைக்காயர், ஏம்பல் தஜம்முல் முஹம்மது, டாக்டர் கார்ல் மார்க்ஸ் ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.
மேலும், இவ்விழாவில் இலக்கிய ஆர்வலர்கள், கவிஞர்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினர்.