செல்லமே இதழின் “மாற்றத்தை உருவாக்குவோம் – 2014” விருதுகள்
சென்னை: செல்லமே மாத இதழ் சார்பில் 2014 ஆம் ஆண்டிற்கான "செல்லமே மாற்றத்தை உருவாக்குவோம்" விருதுகள் வழங்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
தமிழில் பெற்றோருக்காக வெளிவருகின்ற வார இதழான செல்லமே தன்னுடைய முதலாவது பிறந்தநாளினை தமிழ்நாட்டில் பல்வேறு திறமைகளைக் கொண்டு, மக்களுக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்ட, மற்றவர்களால் அறியப்படாத 10 சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை, கந்தன் சாவடியில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில், விருது வழங்கப்பட்ட சாதனையாளர்களில் 12 வயதான யோகேஷ் என்ற சிறுவனும் அடக்கம். இவர் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் எலக்ட்ரானிக் டஸ்டர் ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளார்.
தீபக், மாற்றுத்திறனாளியான இவர் லண்டனில் கிளினிக்கல் சைக்காட்ரியில் பட்டப்படிப்பு முடித்தவர். பெரிய, பெரிய மருத்துவமனைகளில் பணி புரியாமல் தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்வதற்கு அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.
மோகனா சோமசுந்தரம் - ஓய்வு பெற்ற பேராசிரியரான இவர் மார்பக புற்றுநோயில் இருந்து போராடி மீண்டு வந்தவர். கிட்டதட்ட 38 வருடங்களாக தமிழ்நாடு அறிவியல் கழகத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றார். கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளுக்கு அறிவியலை எளிமையாக விளக்கும் பணியினைச் செய்து வருகின்றார்.
நாகராஜன் - நெசவாளியான இவர் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். கிட்டதட்ட 10000க்கும் அதிகமான மரங்களை நட்டுள்ளார் இவர்.
வைகிங் ஈஸ்வரன் - வைகிங் கம்பெனியின் முதலாளியான இவர் இன்று ஒரு வெற்றிகரமான தொழிலதிபர். மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த இவர் தனது கனவுகளை நனவாக்க கடுமையாக உழைத்தவர்.
அல்போன்ஸ் லிக்கோரி - சென்னை, செங்குன்றத்தினைச் சேர்ந்த இவர் புழல் பகுதியில் வேலை பார்க்கும் செங்கல் சூளை, அரிசி ஆலை கூலித்தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உணவூட்டம், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வுகளை பற்றி விளக்கமளிக்கும் பணியினைச் செய்து வருகின்றார்.
டாக்டர். ரிபப்ளிக்கா ஸ்ரீதர் - சென்னையின் முன்னாள் ஷெரீப் ஆர்.எம் தேவின் மகளான இவர் ஒரு மருத்துவமனை ஒன்றினை நடத்தி வருகின்றார். இலவச நோய் தடுப்ப்ய் விழிப்புணர்வு முகாம்களையும் நடத்தி வருகின்றார்.
வேலு சரவணன் - தமிழ்நாட்டின் பிரபலமான தெருக்கூத்து கலைஞரான இவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்று வருவதுடன், குழந்தைகளுக்கு தன்னுடைய கலையின் மூலமாக நல்லொழுக்கங்களையும் போதித்து வருகின்றார்.
முத்துகிருஷ்ணன் - எழுத்தாளரான இவர் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் ஏற்படுத்தி வருவதுடன் இந்திய பண்பாடு, கலாச்சாரம், வரலாறு குறித்த கருத்துக்களையும் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறி வருகின்றார்.
ஸ்ரீதர் வேம்பு - இவர் ஸ்கோ பல்கலைகழகத்தின் நிறுவனர். எல்லா மென்பொருள் கம்பெனிகளும் வேலை வாய்ப்பிற்காக படையெடுக்கும் போது, வேம்புவின் ஸ்கோ மட்டும் கிராமங்களை நோக்கி படையெடுக்கின்றது. இவருடைய பல்கலையில் கிராமப்புற மாணவர்களுக்கு மென்பொருள் நிறுவனங்கள் குறித்த அறிவுகள் போதிக்கப்படுகின்றன.
முன்னதாக ராம்கோ குரூப்சின் முதன்மை அதிகாரியான பி.ஆர்.ராமசுப்ரமணிய ராஜா இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். விழாவில் பேசிய அவர், "பெற்றோர்களாக இருப்பது ஒரு கஷ்டமான பணி. அத்தகைய பெற்றோர்களை வழிநடத்தும் சிறப்பான பணியினை செல்லமே இதழ் மேற்கொண்டு வருகின்றது" என்று செல்லமே குழுவினருக்குப் புகழாரம் சூட்டினார்.