சிட்னியில் கரகம், பரதம் என களைகட்டிய சித்திரை திருவிழா
சிட்னி: தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டு கழகத்தின் முத்திரை திருவிழாவான சிட்னியில் சித்திரைத் திருவிழா ஐந்தாம் ஆண்டாக கடந்த 8ம் தேதி சிட்னியில் உள்ள ரோஸ் ஹில் ரேஸ்கோர்ஸ் அரங்கில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி வாழ் மக்கள் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த தமிழ் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இவ்வாண்டின் சிறப்பம்சமாக நாட்டுப்புற கிராமிய கலைஞரும், சினிமா பின்னணி பாடகருமான அந்தோணிதாசன் வழங்கிய அந்தோணியின் பார்ட்டி "Folk & Rock" இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் அனகன் பாபு விழாவிற்கு தலைமை தாங்கினார். காலை பத்து மணியளவில் குத்துவிளக்கேற்றி விழா இனிதே துவங்கியது. ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
நியூ சவுத் வேல்ஸ் மாநில பிரிமியர் பிரதிநியாக நாடாளுமன்ற செயலாளர் மற்றும் பரமட்டா தொகுதி உறுப்பினர் டாக்டர். ஜெப் லீ, ஸ்ட்ராத்பீல்ட் தொகுதி உறுப்பினர் ஜோடி மக் கே, பரமட்டா மத்திய நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஜூலி ஒவன்ஸ், கிரான்வில் தொகுதி உறுப்பினர் ஜூலியா ஃபின், நியூ சவுத் வேல்ஸ் பல்லின கலாச்சார கூட்டமைப்பின் தலைவர் ஹரி ஹரிநாத், இந்தியத் தூதரக அதிகாரி வன்லால்வவ்ன (Vanlalvawna).ஹோர்ன்ஸ்பி நகர துணை மேயர் குர்தீப் சிங், ஹில்ஸ் சயர் நகர துணை மேயர் ய்வோன்னே கினே, ஸ்ட்ராத்பீல்ட் மாமன்ற உறுப்பினர் ராஜ் தத்தா, பிளாக்டவுன் மாமன்ற உறுப்பினர் சூசை பெஞ்சமின் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .
உள்ளூர் கலைஞர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், தமிழர் கண்காட்சி, இந்திய மற்றும் தமிழக உணவு வகைகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றன. .தமிழர்களின் பாரம்பரிய நாட்டுப்புற கலை மற்றும் சித்திரை மாதத்தின் சிறப்பை பறைசாற்றும் விழாவாக சிட்னியில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் நாள் முழுக்க தமிழர்களின் கொண்டாட்டமாக சிட்னி தமிழ் மக்களின் பேராதரவுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.