தைவான் தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சித்திரை திருவிழா கொண்டாட்டம்
தைவான் தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சித்திரை திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
தைவான் : தைவான் தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சித்திரை திருவிழா கலை நிகழ்ச்சிகளுடன் கடந்த ஏப்ரல் 21ம் தேதி சனிக்கிழமை மாலை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
தைவான் வாழ் தமிழர்களின் சங்கமமாகும் இத்திருவிழாவில் தைவான் வாழ் தமிழர்கள் மட்டுமல்லாது தைவான் வாழ் இந்தியர்கள், தைவான் மற்றும் வெளிநாட்டவர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு விழாவைக் கொண்டாடினர்.
தைவான் வாழ் தமிழர்களை ஒருங்கிணைக்கும் வகையில் ஜனவரி 2013ம் ஆண்டு தைவான் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது. அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் அங்கு பொங்கல் மற்றும் சித்திரை திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
தமிழர்கள் கொண்டாட்டம்
அந்த வகையில், இந்த ஆண்டும் சித்திரை திருவிழாவானது கடந்த 21ம் நாள் சனிக்கிழமை அன்று தைவான் தேசிய பல்கலைகழகத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தைவானின் ஷிஞ்சு, தைச்சூங், ஹொஷியாங் மற்றும் தைனன் நகரங்களில் இருந்து பெரும்பான்மையான தமிழர்கள் இதில் கலந்து கொண்டார்கள். சுமார் 300க்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
சிறப்புரையாற்றிய அறிஞர்கள்
சிறப்பு விருந்தினர்களாக இந்தியா தைபே அசோசியேசனின் முதன்மை இயக்குனர் ஸ்ரீதரன் மதுசூதனன், தேசிய தைவான் பல்கலைகழகத்தின் மூலக்கூறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பன்னாட்டு பட்டமேற்படிப்பு துறை இயக்குனர் பேராசிரியர் சுன் வேய் சென், பேராசிரியர் ஷென்-மிங் சென், இரசாயன பொறியியல் மற்றும் உயிர் தொழில்நுட்பவியல் துறை மற்றும் இந்திய தைவான் கலாச்சார கூட்டமைப்பின் தலைவர் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இந்திய தைவான் நட்புறவு
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் சங்கத்தின் துணைத்தலைவர் ரமேஷ் பரமசிவம் அவர்கள் விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று உரையாற்ற சிறப்பு விருந்தினர்களால் குத்து விளக்கேற்றி சித்திரை விழா இனிதே தொடங்கிவைக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்துச் செய்திகளால் விழா சிறப்புற நடைபெற்றது. ஸ்ரீதரன் மதுசூதனன் சிறப்புரையாற்றும் போது, இந்திய மாணவர் சமுதாயத்தின் பங்களிப்புதனை எடுத்துரைத்து, தைவான் அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையேயுள்ள நட்புறவுதனை எடுத்து உரைத்தார். மேலும் சீன மொழியின் எதிர்கால முக்கியத்துவத்தினை விளக்கி வாழ்த்துரை வழங்கினார்.
ஆராய்ச்சி மாணவர்களுக்கு விருது
தைவானில் ஆராய்ச்சி பட்டம் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக கடந்த ஆண்டு முதல் "இளம் ஆராய்ச்சியாளர்" விருது தைவான் தமிழ்ச்சங்கத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதானது பணமுடிப்பு, பட்டையம் அனைத்தும் உள்ளடக்கியது. 2018ம் ஆண்டிற்கான இளம் ஆராய்ச்சியாளர் விருதிற்கு நடராஜன் கரிகாலன், பவித்ரா ஸ்ரீராம்,செல்லக்கண்ணு ராஜ்குமார்,பிரியதர்ஷினி
அன்குர் ஆனந்த், முகேஷ் குமார் தாகூர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள்.
பாராட்டும் பணமுடிப்பும்
விழா மேடையில் இவ்விருதினை சுன் வெய் சென், சங்கர் ராமன் (துணை தலைவர், தைவான் தமிழ் சங்கம்) மற்றும் ரிஷிகேஷ் சுவாமிநாதன் ( உதவி இயக்குநர், ITA ) ஆகியோர் வழங்கி மாணவர்களை கௌரவப்படுத்தினர். மேலும் கடந்த வருடத்தில் தைவானின் பல்வேறு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை முடித்தவர்களை கெளரவ படுத்தும் விதமாக அவர்களுக்கு சங்க நிர்வாகிகள் சங்கர் ராமன், ரமேஷ் பரமசிவம், பிரசன்னன் மற்றும் பொன்முகுந்தன் சுந்தரபாண்டி ஆகியோர் பதக்கம் அணிவித்து பாராட்டுபத்திரம் வழங்கி சிறப்பு செய்தார்கள்.
கிரிக்கெட் கோப்பை 2018
தைவான் தமிழ்ச்சங்கத்திற்கு உறுதுணையாக இருக்கும் ஆர்வலர்கள் தபிரகாஷ்- சங்கரி பிரியா தம்பதியினருக்கும் மற்றும் தில்லை நாயகம் அவர்களுக்கும் சிறப்பு விருது வழங்கப்பட்டது. சமீபத்தில் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக தைவான் தமிழ்ச்சங்கத்தால் நடத்தப்பட்ட கிரிக்கெட் கோப்பை 2018ல் வெற்றிபெற்ற தைபே இந்தியன்ஸ் அணியினருக்கும் இரண்டாம் இடம் வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் கிளப் தைபே அணியினருக்கும் விழா மேடையில் கோப்பை மற்றும் பணமுடிப்பு பரிசாக வழங்கப்பட்டது.
ஆடல் பாடல் நிகழ்ச்சி
பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், சிறுவர் சிறுமியரின் நடனம் மற்றும் உடையலங்கார காட்சிகள், புதியீடு குழுவினரின் தமிழகத்தின் நிலை பற்றிய நாடகம் மற்றும் தைவான் மகளீரின் ஆடல் பாடல் என்று கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றது. சிறுவர் சிறுமியருக்கான ஓவிய போட்டி நடத்தப்பட்டு விழா அரங்கின் முகப்பில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. விழாவில் அனைவருக்கும் அறுசுவை இரவு உணவு பரிமாறப்படது. இவ்விழாவில் சுமார் 350 பேர் கலந்துகொண்டு சிறப்பு செய்தார்கள். விழாவந்து தேசிய கீதத்துடன் நிறைவுபெற்றது.