தாரை, தப்பட்டை முழங்க … பஹ்ரைனில் சித்திரை திருவிழா கோலாகலம்
மனாமா: தாரை, தப்பட்டை முழங்க பஹ்ரைனில் சித்திரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா, செயல்வீரர்கள் கூட்டம், சித்திரை திருவிழா என முப்பெரும் விழாவாக கடந்த வெள்ளிக்கிழமை, நடந்தது.
மனாமாவின் சுகாயா உணவக உள்ளரங்கில் தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் பஹ்ரைன் தமிழ் மங்கையர்கள் குழுவின் உறுப்பினர்கள் குத்துவிளக்கு ஏற்றினர்.
தமிழர் கலை மீட்பு
பொதுச் செயலாளர் செந்தில்குமார் வரவேற்ப்புரை வழங்க முழு நிகழ்வையும் மூத்த உறுப்பினர் பவானி பிரேமானந்த் தொகுத்து வழங்கினார். தமிழர் கலை மீட்புக் குழுவின் ஆதிப்பறை இசை குழுவினர் பறை இசைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
சங்க உறுப்பினர்கள்
2018 - 2019 வருடத்திற்கான செயல்வீரர்களாக பஹ்ரைன் தமிழ் மங்கையர்கள் குழுவின் அமைப்பாளர் அனிதா கார்த்திகேயன், ஔவையார் கல்விக்கூட ஆசிரியர் ஷர்மிளா ஜெயகுமார், தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல் சங்க செயற்குழு உறுப்பினர்களாக பஞ்சு இராஜ்குமார், முகமது அபுசாலி, அப்துல் பாஸித், ஜெகன் குமார், கண்ணன், மதன்குமார் செல்லம், பிரவீண், பாபு பாண்டியன், கார்த்திக், சரவணன், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழர் கலை
தமிழர் கலை மீட்புக் குழுவின் அமைப்பாளர்களாக ரா.சு. பிரதீப் மற்றும் உறுப்பினர்கள் வைத்தீஸ்வரன், ராஜாங்கம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். பல்வேறு முன்னணி நிறுவனங்களின் சலுகைகள் அடங்கிய புதிய உறுப்பினர் அடையாள அட்டையை சங்க தலைவர் முனைவர். கார்த்திகேயன் மற்றும் பொது செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் வெளியிட்டனர்.இதனை மூத்த உறுப்பினர் கண்ணன் பெற்றுக் கொண்டார்.
18 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
இந்தவிழாவில் உறுப்பினர் நலத்துறை இணை செயலாளர் தாமரைக்கண்ணன் பேசுகையில் "சங்க உறுப்பினர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்திய உணவகம், ஆபரணக் கடை, மருத்துவமனை, புத்தகக்கடை, விளையாட்டு அரங்கம், மருந்துக் கடை, வாகன பளுதகற்றும் நிறுவனங்கள், காப்பீடு நிறுவனம், கார்கோ நிறுவனம், பண பரிமாற்ற நிறுவனங்கள், சுப்பர் மார்கெட் உள்ளிட்ட 18 முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தை செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இனிதே நிறைவு
பின்பு ஆடல் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்சிகள் சங்க தலைவர் முனைவர். கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. குறிப்பாக "குடும்ப வாழ்க்கையில் அதிக சவால்களை சமாளிப்பது ஆண்களே பெண்களே" என்ற தலைப்பில் சிரிக்க சிந்திக்க நகைசுவை பட்டிமன்றம் நடைபெற்றது.
பாரம்பரிய உணவு
சங்க வேலை வாய்ப்புத்துறை செயலாளர் மு. முகமது அபுசாலி நன்றியுரை வழங்கினார். கலந்துகொண்ட அனைவருக்கும் வாழை இலையில் பாரம்பரிய உணவு பரிமாறப்பட்டது. அனைத்து உறுப்பினர்களும் குடும்பத்துடன் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
தகவல் : முனைவர். பெ. கார்த்திகேயன்