பள்ளி மாணவர்களை பாதிக்கும் மனஅழுத்தம்!.. ஹைபர்டென்சன்!!...
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு அதிக அளவில் மன அழுத்தப் பிரச்னை இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் அரசுப் பள்ளிகளை விட தனியார் பள்ளி மாணவ, மாணவிகளில் 20 சதவிகிதம் பேர் உடல் பருமனுடன் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மதிப்பெண்களை வாங்கிக்குவிக்கும் இயந்திரங்களாக மாணவர்களை தயார்படுத்தும் பள்ளிகள்தான் இன்றைக்கு அதிகம் இருக்கின்றன. ஹாஸ்டல் வாழ்க்கை விடிந்தது தொடங்கி இரவு உறங்கும் வரை படிப்பு. தேர்வு, மதிப்பெண் என இன்றைக்கு 9ம் வகுப்பில் இருந்தே மாணவ-மாணவிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
விளைவு மனஅழுத்தம், உயர்ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகும் சூழல் உருவாகியுள்ளது. பெரும்பாலான மாணவர்களுக்கு படபடப்பு, பதற்றம், பய உணர்வு போன்றவையும் ஏற்படுகிறது. ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வேண்டிய பள்ளிகள், நோய் பாதிக்கும் சமுதாயத்தை உருவாக்குகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஹைபர்டென்சன்
உணவில் அதிக அளவில் உப்பைச் சேர்த்துக்கொள்பவர்கள், சிகரெட் புகைப்பவர்கள், மன அழுத்தத்தில் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், மது அருந்துபவர்கள், துடிப்பான வாழ்க்கைமுறையைப் பின்பற்றாதவர்களுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை வரும் என்று மருத்துவ உலகம் கூறுகிறது. பொதுவாக 40 வயதைக் கடந்தவர்களுக்கும் வரலாம். ஆனால், புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்று நடத்திய ஆய்வானது பள்ளி செல்லும் குழந்தைகள் மத்தியில் உயர் ரத்த அழுத்தப் பிரச்னை அதிகரித்துள்ளது என்று எச்சரிக்கிறது.
அதிகரித்த பாதிப்பு
உலக அளவில் டீன் ஏஜ் பருவத்தினர் நான்கு சதவிகிதம் பேருக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளது. 1994-ம் ஆண்டில் இந்தியாவில் 4 சதவிகிதம் குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை இருந்தது. ஆனால் அது தற்போது 8.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
பள்ளி மாணவர்கள்
புதுச்சேரியில் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்கள் 9.6 சதவிகிதம் பேருக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பது சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மேலும், 10.7 சதவிகிதம் மாணவ, மாணவிகள் உயர் ரத்த அழுத்தத்துக்கு முந்தைய நிலையில் உள்ளனர்.
வாழ்க்கை முறை மாற்றம்
குழந்தைகள் மத்தியில் உடல் பருமன், மன அழுத்தம் மற்றும் துடிப்பற்ற வாழ்க்கை முறை காரணமாக உயர் ரத்த அழுத்தம் பிரச்னை அதிகரித்து வருவதையும் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.
உடல் பருமன்
உடல்பருமனே உயர் ரத்த அழுத்தத்துக்கு அடிப்படைக்காரணமாக உள்ளது. அரசு பள்ளி மாணவர்களில் ஐந்து சதவிகித மாணவர்கள் உடல்பருமனுடன் இருந்தனர். ஆனால் தனியார் பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகளில் 20 சதவிகிதம் பேர் உடல் பருமனுடன் இருந்தனர். உடல்பருமனுள்ள ஆண் மாணவர்களில் இருவரில் ஒருவருக்கும், ஒட்டுமொத்தமாக உடல்பருமனுள்ள மாணவர்களில் 35 சதவிகிதம் பேருக்கும் உயர் ரத்த அழுத்தம் இருப்பதைக் தெரியவந்துள்ளது.
மூச்சுத் திணறல்
உடல்பருமனுள்ள மாணவர்களுக்கு, உயர் ரத்த அழுத்தத்துடன் மாரடைப்பு, சர்க்கரை நோய், மூட்டு தொடர்பான பிரச்னைகள், மூச்சுத் திணறல், தூக்கம் தொடர்பான பிரச்னைகள் வரலாம்.
மனஅழுத்தம்
இந்த மாணவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் பிரச்னை ஏற்பட மன அழுத்தமும் மற்றொரு முக்கிய காரணம் என்று கண்டறிந்தோம். அதிலும் அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் உள்ள மாணவ- மாணவிகளுக்கு அதிக அளவில் மன அழுத்தப் பிரச்னை இருந்தது.
நெருக்கடி நிலை
காலையில் எழுந்தது முதல், இரவு படுக்கச் செல்லும்வரை தொடர்ந்து படிப்பு, வெளியில் சென்று விளையாடாதது, துடிப்பான வாழ்க்கை முறையின்மை, ஆசிரியர்கள், பெற்றோர்களின் நெருக்கடி காரணமாக இவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது. மன அழுத்தம் அதிகரிக்கும்போது உடலில் ரசாயன மாற்றம் ஏற்படுகிறது. இது ரத்தக் குழாய்களைத் தாக்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தற்கொலை வரை
மனஅழுத்தம் காரணமாகவே மதிப்பெண் குறைந்தால் கூட சில மாணவர்கள் தற்கொலைவரை தள்ளப்படுகின்றனர். சாதாரண தேர்வில் தோல்வியடைந்தால்கூட உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.
உடல் நலத்தில் அக்கறை
படிப்பு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும் பெற்றோர், ஆசிரியர்கள் குழந்தையின் உடல் நலம் பற்றி கவனிக்க மறந்துவிடுகின்றனர். இதுவே இந்த இளம்வயதில் உயர் ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்படுவதற்குக் காரணமாகிவிட்டது.
உயர் ரத்த அழுத்தம் வந்துவிட்டால் அதைக் குணப்படுத்த முடியாது. தொடர்ந்து மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வதன்மூலம் கட்டுக்குள் மட்டுமே வைத்திருக்க முடியும். 10 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயர் ரத்த அழுத்தத்துக்கு முந்தைய நிலையில் உள்ளனர். இவர்கள் இனியாவது விழித்துக்கொண்டால் உயர் ரத்த அழுத்தப் பிரச்னையைத் தவிர்க்கலாம்.
செகண்டரி ஹைபர் டென்சன்
டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு வரும் உயர் ரத்த அழுத்தம் 50 சதவிகிதம் வேறு ஒரு நோயின் தாக்கமாக இருக்கலாம். இதை செகண்டரி ஹைபர்டென்ஷன் என்று குறிப்பிடுவர்.
பி.எம்.ஐ. பரிசோதித்து, உடல்பருமன் இருந்தால், உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டு வந்து, ரத்த அழுத்தத்தை வெகுவாகக் குறைக்க வழிசெய்யலாம்.
மருத்துவ சிகிச்சை
உயர் ரத்த அழுத்தப் பிரச்னை ஆரம்பநிலையில் வெளியே தெரியாது. குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது தளர்ச்சி, படபடப்பு, மயக்கம், தலைவலி போன்ற அறிகுறிகள் தெரியலாம். ஆரம்பத்திலேயே இதைக் கண்டறிந்து சிகிச்சை எடுக்காவிடில், மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு, சிறுநீரகப் பாதிப்பு, கண் தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம்.
இவர்கள் முறையான மருத்துவ சிகிச்சை, வாழ்க்கை முறை மாற்றம் மேற்கொள்வதன்மூலம் உயர் ரத்த அழுத்தப் பிரச்னை வராமல் தவிர்க்க முடியும்.
பெற்றோர்கள் கவனத்திற்கு
குழந்தைகளுக்கு பச்சைக் காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடத்தரவேண்டும்.
நாள் ஒன்றுக்கு 2 கிராமுக்கு மேல் உப்பு சேர்த்துக்கொள்ளக்கூடாது.
மக்னீசியம், பொட்டசியம் மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை கொடுக்கலாம்.
காலை 7.30 மணிக்கு பள்ளிக்கு அனுப்பும் அவசரத்தில் சில மாணவர்கள் உணவு உட்கொள்ளாமலேயே பள்ளிக்குச் செல்கின்றனர். இதுவும் ஆபத்தானதுதான். காலை உணவைத் தவிர்க்கவேகூடாது.
ஜங்க் ஃபுட்
குளிர்பானங்கள், நொருக்குத்தீனி, ஜங்க் ஃபுட் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். கேன்களில் அடைக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
தினமும் காலையில் மாலையில் உடற்பயிற்சி செய்ய பழக்கப்படுத்த வேண்டும். தினமும் காலையில் நடைப்பயிற்சி செய்யலாம். ஏரொபிக், நீச்சல், யோகா, தியானம் போன்றவையும் நல்லது. முடிந்தவரை பள்ளிக்கு குழந்தைகளை நடந்தோ, சைக்கிளிலோ அனுப்புங்கள்.
அரசு கவனிக்குமா?
மாணவர்களிடமும் ரத்தக்கொதிப்பின் அளவு வேகமாக உயர்வதை அரசு உணர வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறையேனும் அனைத்து பள்ளி மாணவர்களின் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதிப்பெண் முறை மாணவர்களிடம் அதிகளவு மன அழுத்ததை ஏற்படுத்துகிறது. இதை விடுத்து, கிரேடு முறைகளை நடைமுறைப்படுத்தினால், மன அழுத்தமும், ரத்தக் கொதிப்பும் வெகுவாகக் குறையும்.