துபாயில் களைகட்டிய திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள்.. எம்பி கனிமொழி பங்கேற்பு
துபாயில் அமீரக திமுகவின் சார்பில் கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது.
Recommended Video
துபாய் : துபாயில் அமீரக திமுகவின் சார்பில் கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது.
அமீரக திமுகவின் தலைவர் தொழிலதிபர் அன்வர் அலி விழாவுக்கு தலைமை வகித்தார். அவர் தனது உரையில் திமுக தமிழ் மக்களுக்கு ஆற்றிய பணிகளையும், குறிப்பாக சிறுபான்மையினருக்கு செய்துள்ள பணிகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மேலும் வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம் தனது பணிகளை தொய்வின்றி தொடர கழக அரசு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தஞ்சை தெற்கு மாவட்ட கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவையின் அமைப்பாளர் பழஞ்சூர் கே. செல்வம் முன்னிலை வகித்தார். சாகுல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னதாக குத்து விளக்கு ஏற்றும் நிகழ்ச்சியும், நடன நிகழ்ச்சியும் நடந்தது. மேள, தாளத்துடன் கனிமொழி எம்.பி.க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
முத்திரை பதித்தவர்
திமுக மாநில மகளிரணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி. சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். அவர் தனது உரையில் கடல் கடந்து வாழ்ந்து வரும் உடன் பிறப்புக்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தலைவர் கலைஞர் அவர்கள் மேடைப்பேச்சு, திரைக்கதை, வசனம், நாவல், புதினம், சிறுகதை, முரசொலி கடிதம், கட்டுரை என தனக்கென ஒரு முத்திரை பதித்தவர். கதாநாயகர்களுக்கு இணையாக கதையை எழுதியவரின் பெயரை இடம் பெறச்செய்யப்பட்டது கலைஞரின் சிறப்பு.
போராளியாக வலம் வந்தவர்
அரசியலில் அவர் ஒரு போராளியாக வலம் வந்தவர்.சமீபத்தில் ஒருவர் பெரியார் குறித்து கூறியதற்காக தமிழகமே அதனை திரண்டு எதிர்த்தது. இதன் மூலம் தமிழகத்தில் திராவிட இயக்கமும், பெரியாரின் கருத்துக்களும் எந்த ஆழ்ந்து இருந்து வருகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் திராவிட கட்சி இல்லாத தமிழகம் என்ற கருத்து அடங்கிப் போனது. முன்னேற்றம் என்ற பெயரை ஆட்சிக்கு வந்தவர்கள் அதில் எந்தவிதமான சாதனையும் மேற்கொள்ளவில்லை. தற்போது பல்வேறு கிராமங்களுக்கும் மின்வசதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இத்தகைய சாதனையை கலைஞர் 20 வருடங்களுக்கு முன்பே நிகழ்த்தி விட்டார்.
அடக்குமுறைகளுக்கு எதிராக
அதேபோல் 1 கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு கொண்டு வந்து கல்வி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார். இது குறித்து பல்வேறு எதிர்ப்புகள் வந்த போதும் அதனை விரிவாக அதிகாரிகளுக்கு விவரித்து அந்த திட்டங்களை செயல்படுத்த தேவையான நடவடிக்கையை எடுத்தார். கல்வி, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் சிறப்பான புரட்சிகளை செய்தவர் தலைவர் கலைஞர். நீட் தேர்வானது சமூக நீதிக்கு எதிரானது. எமர்ஜென்சி உள்ளிட்ட பல்வேறு அடக்கு முறைகளுக்கு எதிராக போராடியவர்.
இந்தியாவை ஆளும் ஒருவர்
இன்று தமிழகத்தையும், இந்தியாவையும் ஆள்பவர் ஒருவராக இருந்து வருகிறார். தலைவர் கலைஞர் உடல் நலத்துடன் இருந்தால் இத்தகைய நிலை ஏற்பட்டிருக்காது.
தமிழகத்தை கண்டு கொள்ளாத வட இந்திய ஊடகங்கள் இன்று தமிழகம் குறித்த செய்திகள் இல்லாமல் வருவது இல்லை. அந்த அளவுக்கு தமிழகத்தின் அரசின் செயல்பாடுகள் இருந்து வருகிறது. இந்த நிலை மாற தமிழகத்தில் கழக ஆட்சி மலர அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
கனிமொழிக்கு நினைவுப்பரிசு
ஏ.எஸ்.பி. ஆடிட்டிங் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஏ.எஸ்.பி. இளவரசன், ஆர்யாஸ் புட்ஸ் நிறுவனத்தின் மதியழகன், ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின் உள்ளிட்டோர் வாழ்த்துரை நிகழ்த்தினர். சிறப்பான முறையில் பணிகளை மேற்கொண்ட தொண்டர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். கனிமொழி எம்பிக்கு நினைவுப் பரிசும், பூங்கொத்தும், ரோஜா மலரும், பொன்னாடையும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். செயலாளர் பாவை ஹனீபா நன்றியுரை நிகழ்த்தினார்.
பலர் பங்கேற்பு
காரைக்கால் வானொலி நிலையத்தின் முன்னாள் செய்தி தொடர்பாளர் பாத்திமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவுகான ஏற்பாடுகளை ஆலோசகர் ஜாஹிர், விழாக்குழு செயலாளர் அப்துல்லா கனி உள்ளிட்ட பலர் செய்திருந்தனர். இந்த விழாவில் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.