3ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தின ஓவியப்போட்டி.. அசத்திய பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்!
பஹ்ரைன் மனாமா: பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் மற்றும் கிம்ஸ் மருத்துவமனை இணைந்து மூன்றாவது ஆண்டாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உம்அல்ஹசம் பகுதியில் அமைந்துள்ள கிம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் சார்பாக இப்போட்டி நடைபெற்றது.
சுமார் நூறு குழந்தைகள் கலந்துகொண்ட இவ்விழாவில் குழந்தைகள் சிறிய மற்றும் பெரிய என்ற வயது அடிப்படையில் பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற தலா மூன்று குழந்தைகளுக்கும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும் கலந்துகொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் லதா சக்திவேல் நடுவராக செயல்பட்டார். பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் பெ. கார்த்திகேயன், பொது செயலாளர் க. செந்தில்குமார், பஹ்ரைன் தமிழ் மங்கையர்கள் குழுவின் அமைப்பாளர் அனிதா கார்த்திகேயன் முன்னிலையில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
நியூ இந்தியன் பள்ளியின் முதல்வர் கோபிநாத் மேனன், ஊடகவியலாளர் பிரதீப், கிம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி அனஸ் பசீர், மருத்துவர் ரவி ஸ்ரீநிவாசன், சந்தைப்படுத்தும் அதிகாரி ராமீஸ் முகமது ஆகியோரை செயற்குழு உறுப்பினர்கள் கௌரவித்தனர்.
நிகழ்ச்சி பொறுப்பாளரான சங்க ஊடகத்துறை செயலாளர் செ. மதன்குமார் அவர்களை சிறப்பு விருந்தினர்கள் கௌரவித்தனர். அவர் பேசும்போது "நம்மிடம் இருப்பது ஒரே ஒரு உலகம் மட்டுமே, இன்று அனைத்து நாடுகளும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை வெப்பமயமாதல், அதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெறுகிறது" என்று கூறினார். இத்தகைய ஆரோக்கியமான செயல்களுக்காக பஹ்ரைன் வாழ் தமிழர்கள் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தினருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.