கலிங்கம் காண்போம் - பகுதி 65 - பரவசமூட்டும் பயணத்தொடர்
- கவிஞர் மகுடேசுவரன்
வாராவதிக் கோட்டையிலிருந்து வெளியே செல்கின்ற குறுக்குச் சாலையில் நடந்து ஆற்றங்கரையோரத்திற்கு வந்தோம். அப்பகுதி முழுக்கவே மரங்கள் அடர்ந்து இருந்தன. ஏற்கெனவே வளர்ந்த மரங்களோடு புதிது புதிதாகவும் மரங்களை நட்டிருந்தார்கள். எம்மரத்தின் பெயரும் நமக்குத் தெரியவில்லை. மரம் செடி கொடிகளின் பெயரைக்கூட அறிந்திராத வாழ்க்கையைத்தானே வாழ்கிறோம் ? நம்மீது படியும் நிழல் எம்மரத்தின் கொடை என்பது நமக்குத் தெரிவதேயில்லை. தாவரங்களின் பெயர்கள் நகர மக்களின் அறிதலுக்கு அப்பால் போய்விட்டன.
ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த ஒரு மரத்தின் அடியில் தெய்வச் சிலையொன்று வைக்கப்பட்டிருந்தது. கட்டாக் நகரம் துர்க்கை வழிபாட்டுக்குப் பெயர்பெற்றது. துர்க்கைக்குரிய திருவிழாக்கள் அனைத்தையும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். அந்நகரத்தின் வழிபாட்டு முறைகள் வங்காளத்தன்மையோடு இருக்கும். நிறந்தூவிமகிழ்விழாவாகக் கொண்டாடப்படும் “ஹோலிப் பண்டிகை”யன்று இங்கே புழுதி பறக்கும். அதுதான் கட்டாக் மக்களுக்குத் தலையாய விழா நாள். கட்டாக் நகரம் அனைத்து மதத்தினர்க்குமான புகலிடம். வரலாற்றில் காலந்தோறும் ஒவ்வொரு மதத்தினராலும் ஆளப்பட்டது. ஆட்சித் தலைநகரமாக விளங்கியது. அதனால் எல்லா மதத்தினரும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். மதத்தினர் பலர் இருப்பினும் எவ்விதப் பூசலுக்கும் இடந்தராமல் ஒற்றுமையாக வாழ்கின்றனர். பொறுமையும் ஏற்றருளலும் ஒடியர்களுக்கே உரிய பண்பு நலன்கள்.
மரத்தடியில் பார்த்த தெய்வச்சிலைக்கு அப்போதுதான் நிறம் பூசப்பட்டிருக்கவேண்டும். அத்தகைய சிலைகளைச் செய்து விற்கும் கடைகளும் இருக்கக்கூடும். காலையிலேயே வழிபாடு நடந்திருக்கிறது. சிலைத்தெய்வம் மாலை சூடிக் காட்சியளித்தது. அயர்ப்பில் அடர்குழல் மிகுந்த குழந்தையொன்றுக்கு ஒப்பனை செய்து பூச்சூட்டியதுபோல் இருந்தது. பச்சைப் பசேல் என்று தழைத்திருந்த பெருமரத்தடியில் பன்னிறப் பாங்கோடு அருள்பாலித்திருக்கும் அதன் அழகைக் கண்டு அப்படியே அமர்ந்துவிட்டேன்.
முதன்மைச் சாலையைக் கடந்து சென்றால் ஆற்றுப்படுகை வருகிறது. ஆற்றுக்குள் நுழைவதற்கு வரவேற்பு வளையம் கட்டியிருக்கிறார்கள். மகாநதியில் செலுத்தப்படுகின்ற மிகப்பெரிய ஓடத்தைப் போன்ற தோற்றத்தில் அவ்வளையம் இருக்கிறது. அக்கோட்டையை ஆண்ட மன்னனின் மாலை உலாத்தல் காட்சி அது.
வளைவைத் தாண்டி இறங்கியதும் பெரும் திடலில் நிற்கிறோம். வெள்ளக் காலங்களில் மட்டுமே அந்தப் படுகையை நீர்மேவும். பிற நாள்களில் ஆற்று நீர் வடகரையை ஒட்டியவாறு ஒதுங்கிச் செல்கிறது. ஆற்றுப் படுகைக்குள் அளவிற்பெரிய சோலைப் பகுதியும் இருக்கிறது. அங்கே வானளாவிய மரங்கள் வளர்ந்திருக்கின்றன. ஆறும் சோலையும் தோளொட்டி நிற்கின்றன. அந்தப் படுகை முழுக்கவே மணலும் செம்மண்ணும் கலந்த இறுகிய நிலமாக இருப்பது வியப்பு. ஆங்காங்கே சிறுவர்கள் மட்டைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தனர்.
ஆற்றில் துவைத்த துணிகளும் காய வைக்கப்பட்டிருந்தன. ஆற்றங்கரை ஓரத்தில் துணிகளைத் துவைத்துக் காய வைக்கிறார்கள் என்றால் ஆற்றின் அப்பகுதியில் இறங்குவது பாதுகாப்பானது என்று பொருள். ஆற்றுப் படுகைக்குள் நெடுக்காக மண்தடம் ஒன்றும் செல்கிறது. ஆற்றுக்குள் இருப்பதால் அந்தச் சாலைக்குக் கப்பியிடவில்லை என்று நினைக்கிறேன். மண்ணாகவே இருப்பினும் மணற்பாங்காக இருப்பதால் புழுதி எழவில்லை. அச்சாலையில் கணவன்மார் சிலர் தத்தம் மனைவியர்க்கு ஈருருளி ஒட்டிப் பழக்கிக்கொண்டிருந்தனர். தன்னவன் தன் பின்னமர்ந்து அணைத்தபடி தனக்கு வண்டியோட்டிப் பழக்குவதால் பெண்ணாள் முகத்தில் வெட்கமும் அருஞ்செயற்களையும் கலந்திருந்தன. இடையிடையே வண்டியை நொடிக்கையில் மகிழ்ச்சிக் கூச்சல் வேறு. அந்தப் பேரின்ப ஓட்டத்தில் வண்டியை நம்மீது விட்டு மோதிவிடவும் வாய்ப்பிருப்பதால் நாம் பார்த்து ஓரமாய் நடக்கவேண்டும்.
படுகையின் புற்பரப்பெங்கும் கால்நடைகள் மேய்கின்றன. பசுக்களும் எருதுகளும் எருமைகளும் தலையைத் தாழ்த்தி மண்ணோடு மறைபொருள் பேசுவதைப்போல் இருந்தது அது. எருமைகளுக்கு இன்னொரு வாய்ப்பு. வெய்யில் மிகுந்ததை உணர்ந்ததும் ஆற்றுக்குள் இறங்கிப் படுத்துக்கொள்கின்றன. அவற்றின் குறும்பைப் பாருங்களேன், ஆற்றுக்கு அக்கரையில் உள்ளவற்றையும் “அம்மா” என்று அழைக்கின்றன. இத்தகைய அழகிய காட்சியைத் தமிழ்நாட்டில் எங்கே காண முடியும் ?
[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47 , 48, 49, 50,51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64 , 65 ]