கலிங்கம் காண்போம் - பகுதி 62 - பரவசமூட்டும் பயணத்தொடர்
-கவிஞர் மகுடேசுவரன்
ஆயிரமாண்டு வரலாற்று நகரமான கட்டாக் நகரத்தின் முதலரசர்கள் ஒடியக் கேசரிகள். பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் நிருபகேசரி என்னும் அரசர் அங்கே தம் படைநிலைத்தளத்தை அமைத்தார். எதிரிகள் தீண்ட முடியாத அகழிகளாய் நதிச்சுற்றரண்கள் வாய்த்ததால் அப்பகுதியை மன்னர்கள் விரும்பியது இயல்புதான். ஆனால், எதிரிகள் வந்தார்களோ இல்லையோ மகாநதியில் வெள்ளப்பெருக்கு வந்து அடிக்கடி அச்சுறுத்தியது. அதனால் படைநிலைத்தளத்தைச் சுற்றி நதிவெள்ளம் மேவாதபடி கற்சுவரெழுப்பிக் காக்க வேண்டியதாயிற்று.
மார்க்கத கேசரி என்னும் அரசர் அவ்வாறு வலிமையான கற்சுவர்களை எழுப்பினார். அடுத்த இருநூறாண்டுகளில் கேசரிகளின் வலிமை குன்றியபோது மூன்றாம் அனங்கவீமதேவரால் நிறுவப்பட்ட கங்க மரபினரின் அரசுத் தலைநகரமானது கட்டாக் நகரம். பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டாக்கை அரசாளும் மன்னர்களாக கஜபதி மரபினர் தலையெடுத்தனர். கஜபதி மரபின் அரசர் முகுந்ததேவர்க்குப் பிறகு கட்டாக்கினை மொகலாயர்கள் கைப்பற்றிக்கொண்டனர்.
ஷாஜஹானின் ஆட்சியின்போது அப்பகுதி முழுக்க மொகலாயர்களால் கைப்பற்றப்பட்டது. மொகலாயர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு கிபி 1750களில் கட்டாக்கில் மராத்தியர்களின் செல்வாக்கு ஓங்கியது. மராத்தியர்கள் வங்காளத்தோடு வாணிப உறவு கொண்டாடுவதற்குக் கட்டாக் நகரமே நுழைவாயிலாக விளங்கியது. ஆங்கிலேயர்கள் வாணிபத்தை நோக்கமாகக் கொண்டு வங்காளத்தில் நிலைபெற்றபோது அவர்களுக்கும் கட்டாக் நகரம் பயன்பட்டது. மராத்தியர்களின் வீழ்ச்சியும் தவிர்க்க முடியவில்லை. கி.பி. 1803ஆம் ஆண்டுக்குப் பிறகு கட்டாக் நகரம் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆளுகைக்கு வந்துவிட்டது.
ஆயிரமாண்டுக் கட்டாக் நகரத்தின் வரலாற்று நிகழ்ச்சிகள் பலவும் பூரிக்கோவிலின் வரலாற்று நூலான மதனவஞ்சியில் ஒன்றுவிடாமல் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கோவிலின் குறிப்பேடுகளும் இவ்வாறு காப்பாற்றப்பட்டிருந்தால் நம் நகரங்கள் ஒவ்வொன்றின் ஆயிரமாண்டு வரலாற்றைக் கணித்து எழுதியிருக்கலாம்தான். அந்த நூலைக் காப்பாற்றுவதற்காக பூரிக்கோவிலின் அடியார்கள் பட்ட துயரங்கள் தனிப்பெருங்கதை.
ஒரு நகரத்தைச் சுற்றிலும் அருகிலும் ஒன்றோ இரண்டோ நதிகள் ஓடலாம். ஆனால், கட்டாக் நகரத்திற்கு ஊடாகவும் நகரத்தைச் சுற்றியதாகவும் ஆறு நதிகள் ஓடுகின்றன. அந்தப் பெருவளம்தான் கட்டாக்கை எல்லாக் காலத்திலும் ஈர்ப்புடையதாக வைத்திருந்திருக்கக்கூடும். கண்ணம்பாடி அணையின் காலடியில் மைசூரு நகரம் இருப்பதைப்போல, ஹிராகுட் அணையின் கீழேயே கட்டாக் நகரம் இருக்கக்கூடும் என்று நினைத்திருந்தேன். ஆனால் கட்டாக்கிலிருந்து இருநூற்று எழுபத்தைந்து கிலோமீட்டர்கள் வடமேற்கே அவ்வணை அமைந்துள்ளது. அந்தத் தொலைவினால்தான் ஹிராகுட்டைப் பார்க்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டியதாயிற்று.
ஹிராகுட் அணை கட்டப்பட்ட பிறகுதான் மகாநதியின் வெள்ளப்பேரிடர் தணிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவ்வணை அமைந்துள்ள பகுதிக்கும் கட்டாக்குக்கும் இடையே கிழக்குத் தொடர்ச்சி மலைகள் இருக்கின்றன. அம்மலைகளுக்குள் மகாநதி புகுந்து வருகிறது. அவ்வாறு வருகையில் மலைத்தொடரில் பெய்யும் மழை வெள்ளத்தையும் சேர்த்து நடந்தால் அந்த வெள்ளத்தின் அளவு கற்பனைக்கு அப்பாற்பட்டதாகத்தான் இருக்க முடியும். இப்போது அணை கட்டப்பட்டதால் பேரளவு நீரை அங்கேயே தடுத்து நிறுத்திக்கொள்ளலாம். மலைத்தொடரில் பெய்யும் மழை இயல்பான நதி நீரோட்டமாய் நகர்ந்து சென்றுவிடும்.
மகாநதியானது கட்டாக்கிற்குள் நுழைவதற்கு முன்பாகவே கிளையாறுகளாகப் பிரிகிறது. முதலில் மகாநதியிலிருந்து மூன்று கிளையாறுகள் பிரிகின்றன. கதஜோடி, குவாகை, விருபை ஆகிய பெயர்களால் அக்கிளையாறுகள் அழைக்கப்படுகின்றன். கதஜோடி ஆறு சற்றே நகர்ந்து மேலும் இரண்டு பிரிவுகளாகப் பிரிகின்றது. தேவியாறு என்றும் விலுவாகையாறு என்றும் அவ்விரண்டும் பெயர் பெறுகின்றன. ஆக, கட்டாக்கின் தலைநிலத்திலிருந்து வடிநிலம் வரைக்குமான நிலப்பரப்பில் மகாநதி, கதஜோடி, குவாகை, விருபை, தேவி, விலுவாகை என்று ஆறு நதிகள் பாய்கின்றன. கிளைபிரிந்தமையால் மகாநதி குறுகிப்போய்விடுகிறதோ என்று கருதிவிட வேண்டும். மகாநதியின் ஆற்றின் பேருருவம் எங்கும் குறுகுவதில்லை.
[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47 , 48, 49, 50,51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63]