சிங்கப்பூரில் முதியோர்களை போற்றிய குடும்ப தினம்
சிங்கப்பூர்: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) ஞாயிற்றுக்கிழமை 12-03-2017 அன்று, சிங்கப்பூர் பாசிர் ரிஸ் பூங்காவில் சிங்கப்பூரின் சமூக ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் வகையில், பல இன சமூகத்தினரும் கலந்து கொண்ட குடும்ப தின விழாவைச் சிறப்பாக கொண்டாடியது.
முதியோர்களைப் போற்றி பராமரிப்பதன் அவசியத்தை வலியுறுத்துவது இவ்விழாவின் கருப்பொருள். சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ நாராயண மிஷன் இல்லத்தில் வசித்து வரும் முதியோர்கள் சிலர், இந்த நல்லிணக்க குடும்ப தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட பல இன சமூகத்தைச் சேர்ந்த முதியவர்களுடன், சங்க உறுப்பினர்களும் மாணவர்களும் கலந்து மகிழ்வோடு உரையாடியதுடன், அவர்களுக்கு புத்தாடைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
"இது போன்ற நிகழ்வுகள், சிங்கப்பூரின் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் கலாசாரப் பண்புகளைக் கட்டிக் காப்பதற்கும், அதன் அவசியத்தை இளையர்களுக்கு எடுத்துக்காட்டவும் வழி வகுக்கின்றன" என்று குறிப்பிட்டார் சங்கத்தின் தலைவர் கணக்காய்வாளர் டாக்டர் மு. அ. காதர்.
மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி, புதிர் போட்டி, வண்ணம் தீட்டுதல் போட்டி, இல்லத்தரசிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், பெரியவர்களுக்கானப் போட்டிகள், அதிர்ஷ்டக் குலுக்கு போன்றவைகள் விழாவில் இடம் பெற்றன. பெரியவர்கள், இல்லத்தரசிகள், குழந்தைகள் அனைவரும் இவ்விழாவில் கலந்து முதியோர்களைப் போற்றி சிறப்பித்தனர்.