ஃபெட்னா 2017- திரைப் பிரபலங்கள் ரோகிணி, ஆண்ட்டிரியா பங்கேற்கும் அசத்தல் நிகழ்ச்சிகள்
அமெரிக்காவின் மினசோட்டா நகரின் மினபொலிஸ் கன்வென்சன் சென்டரில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் 30 வது பேரவைத் 'தமிழ் விழா' இம்மாதம் 30 ம் தேதி தொட
மினசோட்டா: மினியாபொலிஸ் நகரில் நடைபெறவுள்ள வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 30-ஆம் ஆண்டு தமிழ் விழா நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள் ரோகிணி, ஆண்ட்டிரியா பங்கேற்று தமிழர்கள் மத்தியில் கருத்துக்களையும் நிகழ்ச்சிகளையும் வழங்கவுள்ளனர்.
பாகுபலி, மகளிர்மட்டும், தங்கமீன்கள், மறுபடியும் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் தோன்றிய கலைஞர் ரோகிணி. நடிப்பு என்பதையுங்கடந்து இயக்குநர், வசனகர்த்தா, பாடலாசிரியர், பின்னணி குரலொலிப்பு என பன்முகத்திறம் கொண்டவர்.
இப்படிச் சொன்னால்தான் அவருக்கான அறிமுகம் சமூகத்தில் எளிதில் வசப்படுகிறது. ஆனால் இவற்றையெல்லாம் கடந்து இவர் ஓர் இலக்கியவாதியும் களப்பணியாளருமாவார்.
புத்தக வாசிப்பில் தமிழ்ச்சமூகம் முனைப்பாக தம்மை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்துவதோடு மட்டுமல்லாமல், பல ஊர்களுக்கும் நேரடியாகச் சென்று வாசிப்பியக்கம் நடத்தி வருகிறார்.
சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, நாலாயிர திவ்யபிரபந்தம், பாஞ்சாலிசபதம், சா.கந்தசாமியின் 'சாயாவனம்,' நாவல், பெருமாள் முருகனின் 'கூளமாதாரி' நாவலென, சங்கத் தமிழ் நூல்கள் தொடங்கி நவீன இலக்கிய நூல்கள் வரையிலுமாக, சிறு வண்டுகள், பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள், விலங்குகள், வனங்கள், ஆறுகள், நில அமைவுகள் என இயற்கையின் வளமும் வனப்பும் எவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளன என்பதை இலக்கிய மேடைகளில் எடுத்துரைத்து வருவதோடு நில்லாமல், சமூகச் சிக்கல்களுக்காக போராட்ட களத்திலும் பங்கு கொண்டு வருகிறார்.
விவசாயிகளின் இன்னல் தீரப் போராட்டம், மரபணு விதைகளுக்கெதிரான விழிப்புணர்வு, புற்றுநோய் விழிப்புணர்வு, பெண்கள் பாதுகாப்பினை வலியுறுத்திப் போராட்டமெனத் தொடர்ந்து சமூகத்தின் மேன்மைக்கான பொதுப்பணியில் ஈடுபட்டு வருபவர், தாம் இயக்கிய "அப்பாவின் மீசை" எனும் திரைப்படத்தையும் விரைவில் வெளியிடவிருக்கிறார்.
இவற்றுக்கிடையே அமெரிக்கத் தமிழர்களை சந்திக்கவும் செல்கிறார். வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவையின் தமிழ் விழாவின் கருத்துக்களம் நிகழ்ச்சியை வழங்குவதன் வாயிலாக அவர்தம் சிந்தனைகளைப் பகிர்வதும், இலக்கியக் கூட்டத்தின் வாயிலாக இலக்கிய விழுமியங்களை எடுத்துரைப்பதாகவும் பங்களிக்கப் போகிறார்.
ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா ஜெரெமையா, பின்னணிப் பாடகரும் பின்னணிக் குரல் கொடுப்பவரும் நடிப்புக்கலைஞரும் ஆவார். இவர் தொடக்க காலக்கட்டங்களில் தமிழ் திரையில் பாடகியாக அறிமுகமானார். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் இவரை நடிப்புக் கலைஞராகவும் உயர்த்தின.
தன் பத்தாவது வயதிலேயே இசைக்கருவிகளைக் கையாள்வதில் தேர்ச்சி பெற்றவரானார். கல்லூரிப் படிப்பின் போது நாடகத்திலும் தன் திறமையை வெளிப்படுத்தினார்.
பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, புதிய திருப்பங்கள், வட சென்னை, விஸ்வரூபம் முதலான படங்களில் முதன்மைப் பெண் நடிகராக நடித்துப் புகழ் பெற்றிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பல படங்களுக்கு ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார்.
வேட்டையாடு விளையாடு, ஆடுகளம், நண்பன் முதலான படங்களில் பின்னணிக்குரல் கலைஞராகவும் பங்காற்றியுள்ளார். தொழில் முனைவோராக, நடிப்பு மற்றும் இதர நுண்கலைகளுக்கான அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இசை, நடிப்பு, பின்னணி உள்ளிட்ட பல கலைகளில் தொடர்ந்து பங்காற்றிவரும் கலைஞர் ஆண்ட்ரியா வட அமெரிக்கா தமிழ்ச் சங்கப் பேரவையின் தமிழ் விழாவில் பங்கேற்க உள்ளார். ஆண்ட்ரியா அக்னி குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பேரவை திருவிழாவில் இடம் பெறப் போகும் ஏராளமான மரபுசார்க்கலைகள், நிகழ்ச்சிகளோடு, ஆண்ட்ரியாவின் நிகழ்ச்சிகளையும் காண வாருங்கள் தமிழ் நெஞ்சங்களே.