ஃபெட்னா 2017: தமிழ்ப்பேரவை விழாவில் சிறப்பு விருந்தினராக சிபிஐ டி.ராஜா
வட அமெரிக்க தமிழ்சங்கமும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் 30ம் பேரவைத் தமிழ் விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய தேசிய செயலர் டி. ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
மினசோட்டா: வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் 30வது பேரவைத் தமிழ் விழா அமெரிக்காவின் மினசோட்டா நகரின் மினபொலிஸ் கன்வென்சன் சென்டரில் இம்மாதம் 30 ம் தேதி தொடங்குகிறது. அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
சிவப்புச் சிந்தனைகளுக்குச் சொந்தக்காரரான டி.ராஜா தமிழர் நலனில், அரசியல் அதிகார வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர். அதற்காகத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பங்களிப்பை முன்நகர்த்துவதில் முதன்மை பங்காற்றி வருகிறார்.
து. ராஜா (டி. ராஜா) வேலூர் மாவட்டம் சித்தாத்தூர் கிராமத்தில் 3-6-1949ல் பிறந்தார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். 1994 முதல் இந்திய பொதுவுடமைக் கட்சியின் தேசியச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்திய நாடாளுமன்றத்தின் பல்வேறு குழுக்களில் பங்காற்றி இருக்கிறார். விளிம்புநிலை மக்களுக்காகவும், சமத்துவ மேம்பாட்டுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர். உலகச்சுற்றுச் சூழலியல் குறித்தான கருத்தரங்குகளில் முனைந்து செயலாற்றிக் கொண்டிருப்பவர். தலித் பிரச்சினை முன்னோக்கிய பாதை எனும் நூலை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி, நாடளாவிய அளவில் புதிய சிந்தனைகளைக் கட்டமைத்தவர்.
சாதிகளிருக்கும் வரை வர்க்கங்களுமிருக்கும்; பேதமற்ற பொதுவான, சமத்துவமான, இயல்பான வாழ்க்கை அமைய பெறாது என்பதை வலியுறுத்திக் களம் கண்டு கொண்டிருப்பவர். நீதிமன்றங்களிலும் மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழ் ஆட்சி மொழியாக இருக்க வேண்டுமெனக் கருதுபவர்.
"தமிழின் அடையாளம். வெறும் கோட்டைகளும், கொளு பொம்மைகளும் அல்ல. தமிழரின் அடையாளம், தமிழின் அடையாளம் வயல்வெளிகள், ஆலைகள் அங்கே வியர்வை சிந்தி உழைக்கக் கூடிய மக்களின் அடையாளங்களே தமிழின் அடையாளங்கள். தமிழ் இனத்தின் அடையாளங்கள் என்று நாம் பெருமையோடு சொல்ல வேண்டும். மக்கள் சார்ந்த அடையாளங்கள் இன்றைக்கு மீட்கப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது" எனச் சொல்லி, நாடளாவிய அளவில் கவனத்தை ஈர்த்துப் பல முனைப்புகளை மேற்கொள்பவரை அழைத்துச் சிறப்பிப்பதில் நாம் அனைவரும் பெருமை கொண்டு சிறப்படைவோம்.