ஃபெட்னா 2017: முதற் தமிழ்ப்பேராசிரியர் சுவாமி விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும், மின்னசோட்டாத் தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்தும் 30ம் தமிழ்ப்பேரவை விழா தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. அதில் விபுலாநந்த அடிகளாரின் ஆவணப்படம் வெளியிடப்பட்டது.
மின்னசோட்டா: 30ம் தமிழ்ப்பேரவை விழா வட அமெரிக்கா மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபொலிசு நகரில் தொடங்கி நடந்து வருகிறது. அதில் முதற் தமிழ்ப்பேராசிரியர் சுவாமி விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியிடப்பட்டது.
தமிழ்ப் பேராசிரியர் கயானா பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்து விபுலாநந்த அடிகளார் ஆவணப் படத்தை வெளியிட, வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் பெற்றுக் கொண்டார். அப்போது ஆவணப்பட இயக்குநர் மு.இளங்கோவனுக்கு கயானா பிரதமர், தனது பரிசாக நூல் ஒன்றை வழங்கினார்.
இந்த நிகழ்வில், தமிழகத்தின் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், பொன்ராஜ், கே.பி.கே.செல்வராஜ் (திருப்பூர்), ஆவணப்பட இயக்குநர் மு.இளங்கோவன் மற்றும் முக்கிய விருந்தினர்கள் பங்கேற்றனர்.
"தமிழ் விழா - 2017" - முதல் நாள் - வரவேற்பு விருந்து, செயின்ட் பால் நகரில், சிறப்பு விருந்தினர்கள், கொடையாளர்கள் கலந்து கொண்ட வரவேற்பு இரவு விருந்தாக தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கி, அறிமுக உரைகளுடன் சிறப்பாக நடைபெற்றது.
பேரவை விழாவில் முதல் முறையாக அமெரிக்க தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடினர் தமிழ்க் குழந்தைகள். மக்களிசை, அறுசுவை மதிய உணவு என களை கட்டியுள்ளது பேரவை விழா. கயானா பிரதமருக்கு பறை இசை, தவில் இசை வரவேற்பு, மங்கள இசை, தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கிய 'தமிழ் விழா - 2017', விழாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்ப் பேரவை விழாவில் தமிழ் நாட்டில் இருந்து தமிழ் அறிஞர்கள், திரைத் துறை கலைஞர்கள், தமிழ் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து வருகிறார்கள்.