தென்கிழக்காசியாவில் தமிழர்களின் 2,000 ஆண்டு வரலாறு குறித்த நூல் சிங்கப்பூரில் வெளியீடு
சிங்கப்பூர்: தென்கிழக்காசியாவில் தமிழர்களின் 2,000 ஆண்டு கால வரலாறு குறித்த Sojourners to Settlers- Tamils in SouthEast Asia and Singapore என்ற ஆங்கில நூல் சிங்கப்பூரில் வெளியிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கொள்கை ஆய்வுக் கழகம், இந்திய மரபுடைமை நிறுவனம் ஆகியவை இணைந்து Sojourners to Settlers- Tamils in SouthEast Asia and Singapore - குறுந்தங்கலர்கள் முதல் குடியேறிகள் வரை- தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்கள் எனும் இந்நூலை வெளியிட்டுள்ளன., தற்போது ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்நூலின் தமிழ் பதிப்பு அடுத்த ஆண்டு வெளியிடப்படும்.
சிங்கப்பூர் ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சர் எஸ். ஈஸ்வரன் இந்நூலை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்குமான பண்பாட்டுத் தொடர்புகளை நாம் ஆழப்படுத்த வேண்டும். இதுபோன்ற ஆய்வுகள் நமது வேரை அறிந்து கொண்டு நம் சமூகம் வலிமை பெற உதவுகின்றன என்றார்.
நூலின் ஆசிரியர் அருண் மகிழ்நன் பேசுகையில், தென்கிழக்காசியாவில் தமிழர் வரலாறு, வாழ்வு பற்றி ஆய்வு அடிப்படையில் உலகம் முழுவதும் வாழும் துறைசார் வல்லுநர்கள், சிங்கப்பூர் கல்வியாளர்கள் ஆகியோரால் எழுதப்பட்ட முதல் நூல் இது. இது ஒரு தொடக்கம் என்றார். மேலும் சிங்கப்பூரில் தமிழர்களின் ஆதிகாலம் முதல் வாழ்வியல், பங்களிப்புகள் குறித்தும் மேலும் ஆழமான ஆய்வுகள் தேவை என்றார்.
இந்த நூலின் இணை ஆசிரியர் நளினா கோபால் கூறுகையில், தமிழர்களின் தொன்மையை வரலாற்று ரீதியாக நிறுவன முயற்சிக்கிறது இந்நூல் என்றார். மொத்தம் 29 எழுத்தாளர்களின் கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
தென்கிழக்காசியாவில் வேரூன்றிய பழந்தமிழர் பற்றி முதல் பாகம்; சிங்கப்பூரில் குடியேறிய தமிழர் பற்றி 2-ம் பாகத்தில் கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன.