ஜெர்மனியில் 'ரைன் தமிழ்க் குழுமம்' தொடக்கம்!
ஜெர்மனியின் கொலோன் நகரில் ரைன் தமிழ்க் குழுமம் தொடங்கப்பட்டுள்ளது.
கொலோன்: ஜெர்மனியில் உள்ள கொலோன் நகரில், தமிழ் புத்தாண்டான கடந்த 14-ந் தேதியன்று கொலோன் நகர் வாழ் தமிழர்களால் 'ரைன் தமிழ்க் குழுமம்' என்ற புதிய தமிழ் அமைப்பு தொடங்கப்பட்டது.
இது தொடர்பாக ரைன் தமிழ்க் குழுமத்தின் தலைவர் சரவணன் ஜெயபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பூமி, நதி, கடல் போன்ற இயற்கை வளங்களை எல்லாம் பெண்ணாகப் போற்றி வழிபடுவது நம் மரபு. தாய் குழந்தைக்கு அன்போடு பாலூட்டி வளர்க்கிறாள். அதுபோல நதிகள் வாழ்வின் ஜீவாதாரமாக இருந்து பயிர்களை விளைவிக்கின்றன. அதனால் கங்கை, காவிரி, யமுனா, சிந்து, கோதாவரி என்று அனைத்து நதிளையும் தாயாக எண்ணி பெண்களின் பெயர்களை முன்னோர் இட்டிருக்கிறார்கள்.
ஆகையால் தான் இன்றும் அப்பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு பெயர்ச்சூடி மகிழ்கிறார்கள் தமிழர்கள். அதனையொட்டியே தாய் வழிச்சமூக மரபில் வந்த புலம்பெயர்ந்த கொலோன் நகர் தமிழர்களால் , சுவிஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலையின் தென்கிழக்குப் பகுதியில் உருவாகி ஐரோப்பாவின் பல நாடுகளை கடந்து ஓடும் மிக முக்கிய நதியான ரைன் நதியின் பெயரில், புதிய தமிழ் குழுமம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மிகக் கோலாகலமாக நடந்த தொடக்க விழாவினை, கொலோன் நகர் மேயர் ஆண்ட்ரியாஸ் வோல்டர் மற்றும் விழா சிறப்பு விருந்தினர்களும் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். ரைன் தமிழ்க் குழுமத்தின் தலைவர் சரவணன் ஜெயபாலன் விழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்று, விழாவிற்கு தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக பிராங்க்பர்ட் இந்திய தூதரக அதிகாரி பிரதீபா பார்கர் கலந்து கொண்டார்.
கொலோன் இந்திய-ஜெர்மன் சமூகத்தின் தலைவர் டீட்டர் காப் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். 'குடும்பத்திற்கு அதிகமாக தியாகம் செய்வது, ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் ரைன் தமிழ்க் குழும உறுப்பினர்கள் பங்கேற்று நடைபெற்றது..
தமிழ்க் குழும உறுப்பினர்களின் பங்களிப்பில் ஆடல், பாடல் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இரவு எட்டு மணி வரை நடைபெற்றது. விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற தமிழ்க்கலைகள் சின்னஞ் சிறார்களால் திறம்பட அறங்கேற்றப்பட்டது.
குழும இணையத்தளம், சமூக வலைத்தளம் - முகநூல், வாட்ஸப் மற்றும் அண்ட்ராய்ட் செயலிகளின் பயன்பாடுகள் குறித்து அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சிகளை அனு வினோத், விஜய் உமாபதி , கணேஷ் இராமமூர்த்தி தொகுத்து வழங்கினர். ரைன் தமிழ்க் குழுமத் தொடக்க விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பகல், இரவு இருவேளை சைவ, அசைவ அறுசுவை உணவுகள் பரிமாறப்பட்டன.
இவ்வாறு சரவணன் ஜெயபாலன் தெரிவித்துள்ளது.