இரண்டெழுத்து சொர்க்கம்... பெண்!
- லதா சரவணன்
பெண்! இரண்டெழுத்து சொர்க்கம்.
தாய், தோழி, மகள், சகோதரி என
எத்தனையோ அவதாரங்கள் அவளுள்.
ஆனால், அனைத்திலுமே உணர்வுகளை
உள்ளத்தை மறைத்து அரிதாரம் பூசி
வாழும் வேடதாரியாகத்தான்
இன்றுவரை உலவுகிறாள்.
பெண்ணை நிலவிற்கு ஒப்பிட்டு
அவளை தூரம் ஒதுக்கிவிட்டார்கள்.
அருவிக்கு ஒப்பிட்டு ஓசையை அடக்கி விட்டார்கள்.
தென்றலுக்கு ஒப்பிட்டு
நான்கு சுவர்களுக்குள்
அடைத்து விட்டார்கள்.
நண்பர்களே, இனிவரும் கவிஞர்களே
பெண்ணை கண்ணாடிக்கு ஒப்பிடுங்கள்.
ஏனெனில் தன் முன் தோன்றும்
உருவம் தனை அச்சுபிசகின்றி
வெளிப்படுத்தும் கண்ணாடி!
அதைப்போல், நீங்கள் திணிக்கும்
எண்ணங்களையும், ரசனைகளையும்
மட்டுமே அவள் பிரதிபலிக்க வேண்டும்
என்று கட்டளையிடும் நீங்கள்
அவளைக் கண்ணாடியுடன்
மட்டுமே ஒப்பிட வேண்டும்.
பொம்மைக்கும் பெண்மைக்கும் தான்
இங்கே வித்தியாசமே இருப்பதில்லையே!
விதைக்கப்பட்டவன் ஒதுங்கிக் கொள்ள
விதைநிலமாய் மாறி தன்னுள்
பயிர் விதைத்து வெள்ளாமை செய்பவள்
மட்டும் பெண்ணல்ல!
எதிர் நீச்சல் போடும் என் குல பெண்களே!
அவள் ஒரு முழு பெளர்ணமி
நிலவின் பிரகாசம் உடையவள்,
அதை அமாவாசை இருட்டாய் மாற்றிவிடாதீர்கள்
உலக மகளிர் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
மகளிர் தினம் கொண்டாடுவதன் காரணம் பற்றிய ஆய்வையும், வரலாற்றையும் நாம் அநேகம் முறைப் படித்திருப்போம் சில குறிப்பிட்ட தினங்களை மட்டும் பெண்களுக்கு என்று ஒதுக்கிவிட்டு அன்று நம்மை உச்சாணிக்கொம்பில் தூக்கி வைக்கவும் வேண்டாம். மற்ற தினங்களில் தரையில் தூக்கி மிதிக்கவும் வேண்டாம். வருடம் முழுமைக்குமே பெண் போற்றப்படவேண்டியவள். வருடத்தின் அந்த ஒரு நாள் சுருக்கமும் கண்மூடித்திறப்பதற்குள் அன்றும் அவள் தன் பணிகளை செய்துகொண்டுதான் இருக்கிறாள். வாழ்வின் முழுமைக்கும் அவள் தன் மேல் சுமத்தப்படும் சுமைகளை சுகமாகத்தான் உள்வாங்கிக் கொள்கிறாள் பெண்ணாக இரண்டு எழுத்துக்குள் நுழைந்து தாய்மை உறவு என்று அவளின் பயணம் கடின மலைகளையும்,மேடுகளையும் தாண்டி பாயும் தெளிந்த நீரைப் போன்றது.
பெண்மைக்குள்ளும் வீரம், வன்மை, கோபம், ஆளும்திறன் உண்டென்பதை அனைவரும் ஒப்புக்கொள்ளவேண்டும் என்று அன்றொரு அறிஞர் கூறினார். ஆம் இன்று ஒப்புக்கொள்கிறோம் அவர் அக்கறையோடு பெண்ணிணத்தின் ஆதிக்கத்தை சொன்னார். ஆனால் இன்றைய ஊடகங்கள் பெண்களை அத்தனை அருமையாய் சித்தரிக்கிறது. ஒரு ஆணை பலபேர் முன்னிலையில் அடிப்பது வீரம் அல்ல, தான் வாழும் ஒரு குடும்பத்தை நிர்மூலமாக்க மேற்கொள்ளும் முயற்சிகள் வன்மையில் அல்ல, தன்னுடைய சுக துக்கங்களுக்காக மற்றவர்களை நசுங்கவேண்டும் அதற்கு எந்த எல்லை வரையிலும் போகலாம் என்று சொல்லிக்கொடுப்பது தார்மீககோபம் அல்ல இது அத்தனையும் தான் இன்றைய பெண்களின் இலக்காக குறிக்கிறது டிவி தொடர்கள். பெண்களுக்கு பெண்களே எதிரி என்ற ஒரு நினைப்பை அழகாய் விதைக்கிறது சில விதிவிலக்கு தொடர்களும் உண்டு.
பெண்களிடம் இருந்து கரண்டியைப் பிடுங்கிவிட்டு 60 புத்தகங்களைக் கொடுங்கள் என்று பேசிய பெரியாரின் மொழிகள் அடுப்பூத மட்டும் பெண் பிறக்கவில்லை என்ற பாரதியின் வரிகள் இவையெல்லாம் அன்று பெண்மையை மீட்டெடுக்க உதவியது ஆனால் இன்று அவர்களின் வளர்ச்சி அபரிதம் அவள் மலையைக் கடக்கிறாள், கடலில் மிதக்கிறாள். நிலத்தில் தினம் தினம் தன் சுயத்தை மீட்டெடுக்கப் போராடுகிறாள். வெற்றியென்னும் படிக்கெட்டுகளில் உச்சாணிக்கொம்பில் நின்றாலும் எந்நேரமும் கீழே இழுத்துத் தள்ளப்படும் ஒரு கயிற்றை சமூகத்திடம் கொடுத்து விடுகிறாள். அப்படி கொடுக்கத் தவறிய பெண்கள் ஒழுக்கக்கேடானவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். பெண்மை அவள் வெற்றியை வீழ்ச்சியடைய அவளின் ஒழுக்கம்தான் இங்கே அலசப்படுகிறது. அங்குதானே அவள் அடிபட்டு திரும்பிவிடுவாள் நேர்மையான எதிர்ப்பு பெண்களுக்கு என்றுமே தரப்படுவதில்லை எனின் அவள் அதை இலகுவாக தன் பாதையில் இருந்து நகர்த்திவிடுவாள். பெரும் சாம்ராஜ்யங்கள் கூட வீழ்த்தப்படுவது துரோகத்தினாலும், வஞ்சத்தினாலும் தானே. பெண் எனும் சாம்ராஜ்யம் வீழ்த்தப்படுவதும் அப்படிப்பட்ட தீநாக்குகளால்தான்.
அளவுகோல்களோடு பிறக்கும் பெண் இத்தனை செண்டிமீட்டர் சிரிக்கவேண்டும், இங்குதான் அழவேண்டும் இதைதான் நீ செய்யவேண்டும் என்ற கட்டளைகளோடு வாழும் பெண். அதையும் மீறி அவள் தனி வெளியில் பிரகாசிக்கிறாள். இப்போதைய பெமினிஸம் பெண்களுக்கு மிகப்பெரிய கத்திதான் அவள் அதை பின்பற்றினால் அவளே தன் கழுத்தை அறுத்துக்கொண்டதற்கு சமம். எதிர் பாலினருக்கு நிகராக மதிக்கப்படவேண்டும அவள் தன் கருத்துக்களை எந்தவித பயமும் இன்றி சொல்லவேண்டும் என்பதற்கே பெமினிஸம்
அன்றைய காலத்தில் அரசாங்க ராஜ்ய காரியத்தில் கூட பெண்கள் தனித்துவம் பெற்று விளங்கினார்கள். தங்கள் அரசியல் அறிவை வெளிப்படுத்தினார்கள் மதிக்கப்பட்டார்கள். ஆனால் பின்னாளில் அவளின் ஒளிச்சுடரில் அச்சம் ஏற்பட்டது. அதனால் வீட்டு விவகாரங்களில் கூட அவள் புழக்கடையின் பக்கம் அமைந்திருக்கும் ஒரு கதவின் பின்னால் ஒளிந்திருப்பாள். ஆண்களுக்கு நிகராய் அமர மாட்டாள். உணவு கூட கணவரும் வீட்டு ஆண்பிள்ளைகளும் அருந்திய பிறகுதான் அவளுக்குத் தரப்படும். மாதந்திர உபாதைகளுக்காய் தனியாய் முடக்கப்படுவாள் தீட்டு என்று, கணவன் இறந்தபிறகு அவள் உடன்கட்டையேறினாள். இரவிக்கை அணிய தடையிருந்தது முலைக்கு வரிவிதிக்கப்பட்டது. அதிகம் படிக்கவைத்தால் கல்யாணச் சந்தையில் அவளை கரையேற்றுவது கடினம் என்றெல்லாம் அநேக தடைகள்
நாளடைவில் சிலது தவிர்க்கப்பட்டாலும் சிலது இன்னமும் மறைமுக நடைமுறையில் தான் இருக்கிறது. அதற்கடுத்த காலகட்டங்களில் சில நாட்கள் பெண்கள் அனைவரும் சுதந்திரமாக வெளியே அனுப்பப்பட்டார்கள். பொதுவெளியில் அவர்கள் தங்கள் கருத்துகளை துணிவாக பதிவு செய்தார்கள். சரிநிகர் சமானமாக எல்லாத் துறையிலும் முன்னேறினார்கள். ஆனால் எங்கிலும் எதாவது பொறி அவர்களுக்குக் காத்திருந்தது. இவைகளெல்லாம் அவளுக்கு பெரும் சவாலாய் இருந்தது குடும்பம் நிர்வாகம் பணிச்சுமை இதெல்லாம் இரட்டை மாட்டுவண்டியைப் போல சுமையைக் கூட்டியது. பிஞ்சுகள் எல்லாம் காமச்சேற்றில் புதைக்கப்பட்டன. அடைக்கப்பட்ட கூட்டில் இருந்து ஆசுவாச மூச்சுவிட்ட பெண்கள் மீண்டும் தங்களுக்குள் ஒரு வட்டமிட்டுக்கொண்டனர்.
ஒரு கட்டத்தில் எது சுதந்திரம் எது எல்லைக்கோடு என்பதை அறியாமல் அதிகம் பயணிக்கத் தொடங்கினாள். தாயைக் கொன்ற மகள், பிள்ளைகளைக் கொன்ற தாய் சமூகத்தில் இன்னும் சில அவலங்கள்.
ஒரு சிறுவன் பள்ளிக்கு செல்ல மறுக்கிறான். தாய்தந்தை கேட்டதற்கும் சரியான பதிலில்லை அழுகிறான் அவனை ஒரு மனோத்தத்துவ நிபுணரிடம் அழைத்து செல்கிறார்கள். அங்கே அவன் நீண்டநேர சோதனைக்குப்பிறகு நடந்த விவரத்தை சொல்கிறான் ஒருநாள் பள்ளியில் கேள்வி கேட்ட ஆசிரியரிடம் பதில் சொல்ல தெரியாமல் அழுதிருக்கிறான். அதற்கு அந்த ஆசிரியர் நீ என்ன பெண்பிள்ளைபோல அழுகிறாய் இனிமேல் அவனை எல்லாரும் பெண்ணென்று அழையுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதிலிருந்து உடன்படிக்கும் மாணவர்கள் எல்லாரும் அவனை கிண்டல் செய்கிறார்கள். என்னை நாய் அழைத்தால் நான் நாய் என்பேன் எருமை என்று அழைத்தால் திருப்பி அதே வார்த்தையை சொல்லி திட்டிவிடுவேன் ஆனால் அவர்கள் என்னை பொண்ணு என்னு கூப்பிடுகிறார்கள் எனக்கு அவமானமாக இருந்தது என்று சொன்னான். மிருகங்களை விடவும் பெண் எத்தனை இழிபடுத்தப்படுகிறாள்.
தினங்களை கொண்டாடுவதை விடவும் தினமும் நமக்காக ஏதாவது ஒரு வகையில் தியாகத்தை மேற்கொள்ளும் பெண்களுக்கு நாம் சரிவிகித மரியாதைக் கொடுப்போம் பெண்கள் குழந்தைகள் என அவர்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்போம் பெண் குடும்பத்தின் வண்டிச்சக்கரமாய் சுழல்பவள், கடலாய் தன்னில் அறிவை பொத்திவைத்திருப்பவள், கண்ணாடியாய் பிரதிபலிப்பவள் அன்பின் முகவரி