தாயில்லாமல் நானில்லை.. தானே எவரும் பிறந்ததில்லை.. ஹூஸ்டனில் அன்னையர் தின கொண்டாட்டம்
ஹூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டனில் கடந்த 5-ஆம் தேதி அன்னையர் தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
நாடு முழுவதும் மே 12-ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. தாயில்லாமல் நானில்லை, தானே எவரும் பிறந்ததில்லை.. எனக்கொரு தாய் இருக்கின்றாள்.. என்றும் என்னை காக்கின்றாள்... என்ற பாடல் வரிகள் தாயின் சிறப்பை கூறுவதாக இருக்கும்.
அதுபோல் அம்மாவை போற்றும் ஏராளமான பாடல்கள் வெளிவந்துள்ளன. எனினும் மேற்கண்ட பாடல் ஆலங்குடி சோமு 1969ல் எழுதிய பாடல் வரிகளுக்கு மாற்றுக்கருத்து என்றும் கிடையாது. இந்த வரிகளை மையக் கருத்தாகக் கொண்டு தமிழ்நாடு அறக்கட்டளை - ஹூஸ்டன் கிளை கடந்த மே மாதம் 5ஆம் தேதி "அன்னையர் தினம்" கொண்டாட்டங்களை சிறப்பாக நிறைவேற்றியது.
5 தாய்மார்கள்
ஒவ்வொரு ஆண்டும் இந்த அறக்கட்டளை பொதுப்பணியில் சிறப்பாக பணியாற்றிய ஐந்து தாய்மார்களை கவுரவிக்கும் விதமாக விழா ஒன்றை ஏற்பாடு செய்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பொன்னி சிவராமன், மீனா சொக்கலிங்கம், தாரா நரசிம்மன், இந்திரா பார்த்தசாரதி, மற்றும் சாவித்திரி ராமானுஜம் ஆகியோரை சிறப்பாக மேடையேற்றி கௌரவிக்கப்பட்டது.
சிறப்பு
விழாவின் இடையே தமிழ்நாடு அறக்கட்டளை ஹூஸ்டன் கிளையை நிறுவ உறுதுணையாக இருந்த பத்மினி ரங்கநாதனுக்கு "அன்னைகளின் அரசி" என்ற பட்டம் சூட்டி கௌரவித்தனர். இந்த விழாவில் முனைவர் நந்து ராதாகிருஷ்ணன் அவர்கள் எழுதிய "அன்னைக்கோர் கீதம்" என்ற பாடலை, உயர்நிலை பள்ளி மாணவர்கள் ஆதி கோபால், ரியா பாவா, மற்றும் அம்ருதா மஹாதேவன் ஆகியோர் சிறப்பாக பாடினார்கள்.
மகிழ்ச்சி
முதல் முறையாக, உயர் பள்ளியில் தேர்ச்சி பெறவிருக்கும் மாணவர்களை அவர்களின் சேவை மனப்பான்மையை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினர் காரைக்குடியிலிருந்து வருகை தந்த குரால்சூடி உமையாள் மெய்யம்மை என்ற 10 வயது சிறுமியின் நகைச்சுவை கலந்த சொற்ப்பொழிவு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
பரிசுகள்
தமிழ் மீது இவருக்குள்ள ஆர்வத்தையும் ஆளுமையையும் போற்றி "சொற்செல்வி" என்ற பட்டத்தை சூட்டியது தமிழ்நாடு அறக்கட்டளை - ஹூஸ்டன் கிளை. கடந்த மாதம் இந்த கிளை நடத்திய "திருக்குறள் விளையாட்டு" என்ற போட்டியில் ஜெயித்த பிள்ளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விருந்து
லக்குமி பாவா மற்றும் கங்கா சிவா ஆகியோர் ஏற்று நடத்திய தாய்-பிள்ளைகளுக்கான கேட்வாக் என்ற நிகழ்ச்சி காண்பவர் கண்களுக்கு குளிர்ச்சியை தந்தது. அன்று மாலை, மெட்ராஸ் பெவிலியன் உணவகத்தின் உரிமையாளர் ராஜன் ராதாகிருஷ்ணன் அவர்களின் உபயத்தில் அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது. இந்த கிளையின் தலைவி மாலை கோபால், "இன்று மட்டும் அல்ல, அன்னைகள் என்றென்றும் போற்றப்பட வேண்டியவர்கள்" என்பதை நினைவூட்டினார்.