சின்ன வயசில் மறக்காமல் இருக்க என்னவெல்லாம் செஞ்சோம்!
சென்னை: காலம் மாற மாற நிறைய விஷயங்களும் கூட மறந்து போய் விடுகின்றன அல்லது மறைந்து போய் விடுகின்றன. அதில் ஒன்று தான் சின்ன வயதில் நமக்கு கற்றுக் கொடுத்த சில நல்ல பாடங்கள்.
முன்பெல்லாம் எதையும் மறக்காமல் இருக்க சின்னச் சின்னதாக டிரிக்ஸ் சொல்லிக் கொடுப்பாங்க வீட்டிலும், பள்ளியிலும். ஆனால் இப்போதெல்லாம் குழந்தைகள் அதை சட்டை செய்வதில்லை.
இப்போது பெரியவர்களே கூட நிறைய விஷயங்களை மறந்து விட்டு முழிக்கிறார்கள். சின்ன சின்ன கணக்குகளைக் கூட இன்று போடுவதற்கு கால்குலேட்டரைத் தேடுகிறார்கள்.
கைபேசி
குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கணினியும் கைப்பேசியும் கொடுத்து அவர்களின் நினைவாற்றல் திறனைக் குறைந்து விடுகிறோம். அதனை மேம்படுத்த வீட்டிலேயே வார்த்தைகளை வரிசைப்படுத்துதல், ஒரு படத்தின் பாகங்களைக் கொடுத்து அதை வரிசைப்படுத்துதல் போன்ற விளையாட்டுகளைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கலாம்.
தாயம் ஆடுபுலி ஆட்டம்
நம் கிராமத்து விளையாட்டுகளான தாயம், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம் போன்றவை வெறும் விளையாட்டு மட்டுமல்ல.. அவற்றால் குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்தலாம். வீட்டில் காய்களைச் சிறு சிறு துண்டுகளாக்கி அதைப் பிள்ளைகளிடம் கொடுத்து எண்ணச் சொன்னால் அங்கு எண்களை எளிதாகக் கற்றுக் கொண்டு விடுவார்கள்.
ஏன் பாடம் பதிவதில்லை
தொலைக்காட்சியில் பார்க்கும் நடிகர்கள் நடிகையரின் பெயர்கள் மனதில் பதியும் போது பள்ளிப்பாடம் நினைவில் இருக்காதா என்ன. அது மட்டும் ஏன் நினைவில் நிற்பதில்லை என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா. அதற்கான காரணம் ஆர்வமின்மை தான்.
மறக்கவே மறக்காது
பள்ளிப்பாடங்களை நம் வாழ்வியலோடு இணைத்துக் கூறுங்கள். உங்கள் குழந்தை மறக்கவே மறக்காது. ஒரு பந்தை குழந்தையின் கையில் கொடுத்துவிட்டு ஐந்து நிமிடம் காத்திருங்கள். அந்தக் குழந்தை அதை வைத்து என்ன செய்கிறது என கவனியுங்கள்.
எப்படி கீழே வருது
குழந்தை பந்தை தூக்கிப் போடும். அப்போது குழந்தைக்கு பந்து ஏன் தரையில் நிற்காமல் ஓடுகிறது என்றும் பந்தைத் மேலிருந்துக் கீழே தூக்கிப்போட்டால் எப்படி மறுபடியும் மேலே வருகிறது என்று கூறுங்கள் அவ்வளவு தான் எளிமையான அறிவியல்.
சதுரங்கம்
சதுரங்க விளையாட்டுக் குழந்தைகளின் நினைவாற்றலைப் பெருக்கும். நினைவாற்றலை மேம்படுத்த பிள்ளைகளை திட்டமிட பழக்குங்கள். வாய்ப்பாடு படித்தது நினைவு இருக்கிறதா. இன்று குழந்தைகள் அதை மனப்பாடம் செய்கிறார்கள். அதை எளிய முறையில் படித்தால் காலத்துக்கும் அது மறக்கவே மறக்காது.
பிரித்துக் கொடுத்து சொல்லிக் கொடுங்க
பத்து இனிப்புகளை இரண்டு இரண்டாகப் பிரித்து வைத்துவிட்டு அதைக் குழந்தையிடம் எத்தனை இரண்டு இனிப்பு உள்ளது எனக் கேட்டால் குழந்தைச் சொல்லிவிடும். நினைவாற்றலை அதிகரிக்க நிறைய வழிகள் உள்ளன.. காலையில் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யலாம், வால்நட் பாதாம் போன்றவற்றை சாப்பிடலாம், வெண்டைக்காய் சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும், மாலையில் நன்கு விளையாட வேண்டும், படங்களைப் புரிந்துக் கொண்டு படித்தால் மறக்கவே மறக்காது.
மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்பார்கள். அது உண்மைதான். எதைச் செய்தாலும் அதைப் புரிந்து, தெளிந்து செய்தால் எடுத்த பணி வெற்றியில் முடியும். நம்முடைய நினைவாற்றலை மேம்படுத்தி வாழ்க்கையில் வெற்றிப் பெறுவோம்.
- ஜி. உமா