துபாய் ஈமான் அமைப்பு நடத்திய பிரிவு உபசார நிகழ்ச்சி
துபாய்: துபாய் ஈமான அமைப்பு அமீரகத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக பணிபுரிந்து விடைபெற்றுச் செல்லும் பி.பி. அஹமது முஹைதீனுக்கு பிரிவு உபசார நிகழ்ச்சியினை 05.10.2013 அன்று மாலை ஹோட்டல் லேண்ட்மார்க் ரிக்காவில் நடத்தியது.
துவக்கமாக அலுவலக மேலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் இறைவசனங்களை ஓதினார். ஈமான் அமைப்பின் துணைத் தலைவரும், கல்விக்குழுத் தலைவருமான அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் விடைபெற்றுச் செல்லும் அஹமது முஹைதீன் ஈமான் அமைப்பின் பணிகளுக்கு வழங்கிய ஒத்துழைப்பு குறித்து பாராட்டு தெரிவித்தார்.
பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி முன்னிலை வகித்தார். துணைப் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் ஏ முஹம்மது தாஹா துவக்கவுரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், எந்த நேரம் அழைத்தாலும் எவ்வித தயக்கமுமின்றி ஈமான் அமைப்பின் செயல்பாடுகளுக்கு தனது ஒத்துழைப்பினை முழுமையாக வழங்கி வரும் அஹமது முஹைதீன் அவர்கள் தாயகம் சென்றாலும் ஈமான் அமைப்புடன் இணைந்து அனைத்துப் பணிகளிலும் பங்கேற்க வேண்டுகோள் விடுத்தார்.
ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், பணிக்கு வந்துவிட்டோம் என்றில்லாது பணியினூடே முனைவர் பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டுள்ளதை இன்றைய இளைஞர்கள் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
அஹமது முஹைதீன் அவர்கள் நினைவுப் பரிசு மற்றும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார். ஈடிஏ எம்.பி.எம். பொதுமேலாளர் பி.எம்.எஸ். ஹமீது, ஈடிஏ ஜீனத் துணைப் பொது மேலாளர் மஹ்மூது சேட், சி.பி.டி. துணைப் பொது மேலாளர் முஹம்மது ஃபலீல் உள்ளிட்டோர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
ஏற்புரை நிகழ்த்திய அஹமது முஹைதீன் தான் ஆற்றிய சிறிய பணிகளுக்காக தன்னை கௌரவப்படுத்திய ஈமான் அமைப்பினை வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்ச்சி. இப்பணிகளில் தான் மட்டுமல்லாது தன்னுடன் பணிபுரியும் சகோதர சமுதாய ஊழியர்களும் முக்கியப் பணியினை மேற்கொண்டனர். பொறியியல் மேலாண்மையில் குறிப்பிட்ட சிலரே ஆய்வு மேற்கொள்ள அனுமதி கிடைக்கும். அத்தகைய வாய்ப்பு கிடைத்தமைக்கு வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன். மேலும் அமீரகத்தில் தன்னால் மறக்க முடியாத நிகழ்வுகளை பட்டியலிட்டார். எங்கு சென்றாலும் ஈமான் அமைப்பின் பணிகளுக்கு உறுதுணையாய் இருப்பேன் என உருக்கமாகக் குறிப்பிட்டார்.
நலத்துறை செயலாளர் திருச்சி ஃபைஜுர் ரஹ்மான் வாழ்த்துக் கவிதையுடன் நன்றி தெரிவித்தார். விழாக்குழு செயலாளர் கீழை ஏ ஹமீது யாசின் நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.
ஃபைஜல் ஈமான் அமைப்பின் நிகழ்வுகளை ஒலி ஒளிக் காட்சியாக தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதுவை ஹிதாயத், ஹமீது யாசின், ஃபஜுர் ரஹ்மான், ஜமால், காதர், தமீம் உள்ளிட்ட குழுவினர் சிறப்புற செய்திருந்தனர்.