தோஷம் நீக்கும் மாசிமகம்!
மாசிமகம் நீர்நிலைகளின் மேன்மையை மக்களுக்கு போதிக்கிறது.எனவேதான் இறைவடிவங்களை நீர்நிலைகளில் தீர்த்தவாரியாடச் செய்வதோடு மக்களும் புனிதநீராடி மகிழ்கின்றனர்.
மாசிமகத்தன்று, கும்பகோணத்தில் உள்ள முக்கிய கோவில்களில் இருந்து மகாமக குளத்திற்கும், காவிரியாற்றுக்கும் சுவாமிகள் எழுந்தருளுவர். கும்ப ராசியில் சூரியன் இருக்கும் போது சந்திரன் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். இந்நாளே மாசி பவுர்ணமியுடன் கூடிய மாசி மகமாக திகழ்கிறது. மாசி மகம் மகாவிஷ்ணு, உமாமகேஸ்வரன், முருகன் ஆகிய 3 தெய்வங்களுக்கும் உகந்த நாள் மாசி மகம்.
உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சணின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படு கிறது. பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது. பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்றுதான்.
இந்நாள் முருகப் பெருமானுக்கும் உகந்த நாளாகும். அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் என்ற பெயரும் முருகனுக்கு உண்டு. இதற்கு காரணமான தந்தைக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளும் மாசி மகம்தான்.
தோஷம் போக்கும் மாசி மகம்
சிவன், விஷ்ணு,முருகன் என முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நன்னாள், தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம். நதி, கடல், குளம், புண்ணிய தீர்த்தங்கள், கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மை தரும்.
தீர்த்தமாடும் நாள்
மாசி மகம் நாளை ‘கடலாடும் நாள்‘ என்றும் ‘தீர்த்தமாடும் நாள்‘ என்றும் சொல்வார்கள். புண்ணிய இடங்களில் தீர்த்தமாட முடியாதவர்கள் விரதம் இருந்து கோயிலுக்கு சென்று உமாமகேஸ்வரனை தரிசிப்பர்.
தமிழகத்தை பொறுத்தவரை கும்பகோணத்தில் மாசி மகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வடஇந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள்.
கும்பகோணம் மாசி மகம்
பிற ஸ்தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் சிறப்பு.
ஆண்டுதோறும் மாசி மகம் வந்தாலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் சிம்ம ராசியில் இருக்கும்போது வருவது மகா மகமாகும். அன்றைய தினம் பல லட்சம் பேர் மகாமக குளத்தில் நீராடுவர்.
இளைய மகாமகம்
கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தில் ஆண்டுதோறும் மாசி மாதம் மகத்தன்று புனித நீராடுவது வழக்கம். இதில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மாதம் மகத்தன்று நீராடுவது மகாமக நீராடல் என அழைக்கப்படுகிறது. மகாமகத்திற்கு முன்பு ஓராண்டுக்கு முன் வரும் மாசிமகம் இளைய மகாமகம் என அழைக்கப்படுகிறது.
தேரோட்டம்
இந்த இளைய மகாமகம் நாளை கும்ப கோணத்தில் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கடந்த மாதம் 23ம் தேதி சிவாலயங்களில் விழா கொடியேற்றப்பட்டது. இன்று காலை ஆதிகும்பேஸ்வரன் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது.
மகாமக குளத்தில் தீர்த்தவாரி
இளைய மகாமகத்தின் முக்கிய நிகழ்வாக நாளை காலை 10.30 மணியிலிருந்து 12 மணிக்குள், சிவன் கோயில்களிலிருந்து சுவாமி அம்பாளுடன் மகாமக குளக்கரையில் நான்கு கரைகளிலும் எழுந்தருளிய பின்னர் அஸ்திரதேவர் தீர்த்தவாரி காணுவார். அதன்பிறகு நான்கு கரைகளிலும் பக்தர்கள் மகாமக குளத்தில் புனிதநீராடுவார்கள்
திருப்பதியில் தெப்ப திருவிழா
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் தெப்ப உற்சவம் கடந்த 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 நாட்கள் தெப்பத்திருவிழா நடைபெறுவதை ஒட்டி தெப்ப குளமும், தெப்பமும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தினமும் மாலை 7 மணி முதல் 8 மணிவரை தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
மலையப்பசுவாமி வலம்
முதல்நாளன்று மலையப்பசாமி ஸ்ரீராமர் அவதாரத்தில் சீதை அனுமருடன் தெப்பத்தில் வலம் வந்தார். ஞாயிறன்று ருக்மணியுடன் ஸ்ரீகிருஷ்ண அலங்காரத்தில் தெப்பத்தில் வலம் வந்தார். இறுதி 3 நாட்களும் ஸ்ரீதேவி பூதேவியுடன் மலையப்பசாமி தெப்பத்தில் எழுந்தருளி வலம் வருகிறார். இந்த விழாவை காண திரளான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர்.
திருக்கோஷ்டியூர் ஆலயத்தில்
சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோவில் தெப்பக்குளக் கரையில், திருமணம் நடக்கவும், தீர்க்கசுமங்கலி பாக்கியத்திற்கும், பெண்கள் விளக்கேற்றுவது வழக்கமாக உள்ளது.
பித்ருக்களுக்கு மரியாதை
மகம் என்றவுடன் அதன் சிறப்பை சொல்கிற சொல், "மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள்" என்பதுதான். மக நட்சத்திரத்தை "பித்ருதேவதா நட்சத்திரம்" என்று அழைப்பார்கள். இந்த பித்ருதேவதாதான் முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தியை தருகிறது. முன்னோர்கள் ஆத்மசாந்தியுடன் இருந்தால்தான் அவர்களுடைய வம்சம் சுபிக்ஷமாக இருக்கும். எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும் பித்ருக்களை வணங்கினால் அந்த சுபநிகழ்ச்சி தடையில்லாமல் நடக்கும். பித்ருதேவனின் ஆசியும் கிடைக்கும். அதனால்தான் மாசிமகம் தினத்தன்று பித்ருக்களுக்கு பூஜை செய்யவேண்டும். மாசிமக தினத்தன்று புனித நதிகளில் நீராடுவதை "பிதுர் மஹா ஸ்நானம்" என்கிறது சாஸ்திரம்.
வளமான வாழ்க்கை வாழ
மகத்திற்கு அழிவே இல்லை. அதுவும் மாசிமகம் இன்னும் சக்தி படைத்தது. அதனால் தாட்சாயினியாக அம்மன் மக நட்சத்திரத்தில் தோன்றிய பிறகுதான் சக்தி பீடங்கள் உருவாகி உலகநாயகியாக போற்றப்படுகிறார் அன்னை சக்திதேவி. மாசிமகம் அன்று சிவபெருமானையும், ஸ்ரீவிஷ்ணுபகவானையும் பித்ருக்களையும் வணங்கினால் சகலநலன்களையும் பெற்று வளமான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.