பஹ்ரைன் மனாமா நகரில் இலவச தமிழ்க் கல்விக்காக ஔவையார் கல்விக்கூடம் துவக்கவிழா
பஹ்ரைன் மனாமா நகரில் இலவச தமிழ்க் கல்விக்காக ஔவையார் கல்விக்கூடம் துவக்கவிழா நேற்று நடைபெற்றது.
பஹ்ரைன் : பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் இலக்கியத்துறை சார்பாக குழந்தைகளுக்காக தரமான இலவச தமிழ்க் கல்வி "ஔவையார் கல்விக்கூடம்" தொடங்கப்பட்டது.
பஹ்ரைனில் செயல்பட்டு வரும் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் சார்பாக தரமான இலவச தமிழ் வழிக்கல்வி வழங்கும் நோக்கில் ஒளவையார் கல்விக்கூடம் என்ற பெயரில் நேற்று தி இந்தியன் கிளப் வளாகத்தில் பாடசாலை தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்வில், சங்க வேலைவைப்புத்துறை செயலாளர் ஜெகன் குமார் வரவேற்புரை வழங்க, உறுப்பினர் நலத்துறை செயலாளர் பஞ்சு இராஜ்குமார் தொகுப்புரை வழங்கினார்.
குத்துவிளக்கு ஏற்றி துவக்கம்
தொழிலதிபர்கள் ஹுசைன் மாலீம், விவேகானந்தன், தி இந்தியன் கிளப்பின் செயலாளர் எஸ். நந்தகுமார், KLM நிறுவனத்தின் நிதித்துறை மேலாளர் பிரேம் சங்கர் மற்றும் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர். பெ. கார்த்திகேயன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி கல்விக்கூடத்தை தொடங்கிவைத்தனர். ஹுசைன் மாலீம் அவர்கள் பேசும்போது "உலகின் தொன்மையான மொழியான தமிழ், திட்டமிட்டே நசுக்கப்படுகிறது, தமிழை வளர்க்கும் விதமாக இக்கல்விக்கூடம் தொடங்கப்பட்டுள்ளது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது" என்று குறிப்பிட்டார்.
அனைவருக்கும் தமிழ் கல்வி
நந்தகுமார் பேசுகையில், இக்கல்விக்கூடத்திற்கு அனைத்து உதவிகளையும் இந்தியன் கிளப் செய்யும் என்று கூறினார். விவேகானந்தன், "குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் தமிழை கற்பிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
தமிழ் மங்கையர்கள் குழு
மேலும், சுயவிருப்பத்தோடு ஆசிரியர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட அனிதா அழகர்சாமி, ஜோதிகலா பழனிச்சாமி, ஷர்மிளா ஜெயகுமார் மற்றும் தையல்நாயகி பாபு ஆகியோரை பஹ்ரைன் தமிழ் மங்கையர்கள் குழு அமைப்பாளர் அனிதா கார்த்திகேயன் கௌரவித்தார். நிகழ்ச்சி பொறுப்பாளரும் சங்க இலக்கியத்துறை துணை செயலாளருமான அப்துல் பாஷித் சிறப்பு விருந்தினர்கள் கௌரவித்தார்.
அடிப்படை கல்வி
பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர். பெ. கார்த்திகேயன் கல்விக்கூடத்தின் செயல்பாடுகள் பற்றி கூறும்போது "இக்கல்விக்கூடம் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் தி இந்தியன் கிளப் வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்படும். பதிவு செய்துள்ள சுமார் 100 குழந்தைகளுக்கும் தங்களுக்கு எந்த அளவிற்கு தமிழ் தெரியும் என்று அறிந்து அடிப்படை முதல், "கதை கட்டுரை", "செய்யுள் இலக்கணம்" என்று பிரிக்கப்பட்டு அதன்படி வகுப்புகள் நடத்தப்படும், பஹ்ரைன் வாழ் தமிழர்கள் ஆதரவோடு இக்கல்விக்கூடம் தமிழ் பல்கலைக்கழகமாக உருவெடுக்கும்" என்று கூறினார்.
உறுப்பினர்கள் பங்கேற்பு
சங்க பொது செயலாளர் செந்தில் குமார் நன்றியுரை வழங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் முத்து, சரவணன், கார்த்திக், பிரவீன், ஜெகன் குமார், தினேஷ் குமார், பிரதீப், பாஸ்கர் மற்றும் தன்னார்வு தொண்டர்கள் வைத்தீஸ்வரன், பழனிச்சாமி, இராஜாங்கம்,பிரபாகரன், சிதம்பரம் ஆகியோர் உடனிருந்தனர். கடல் கடந்தும் தமிழை வளர்க்க பாடுபடும் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்திற்கு பஹ்ரைன் வாழ் தமிழர்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.