ஷார்ஜாவில் சர்வதேச புத்தகக் கண்காட்சி: 3 நாட்களில் குவிந்த 5 லட்சம் பேர்
ஷார்ஜா: ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் கடந்த 5ம் தேதி சர்வதேச புத்தகக் கண்காட்சி துவங்கியது. 33வது ஆண்டாக நடைபெறும் புத்தகக் கண்காட்சியினை ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி துவக்கி வைத்தார். அவர், அரபுலகை இலக்கியம், கலாச்சாரம், அறிவுப் புரட்சி மூலம் அமைதியை ஏற்படுத்த தன்னுடன் இணைந்து கொள்ள வருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
வரும் 15ம் தேதி வரை நடக்கும் இக்கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த 141 புத்தக நிறுவனங்களும், எகிப்து (140), லெபனான் (105), ரஷ்யா (75), சிரியா (68), இந்தியா (56), ஜோர்டான் (51), லண்டன் (51), அமெரிக்கா (27), இத்தாலி (13), ஈராக், ஈரான் உள்ளிட்ட நாடுகளின் புத்தக நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன.
கேரளாவைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றாலும், தமிழக புத்தக நிறுவனம் எதுவும் பங்கேற்கவில்லை
புத்தகக் கண்காட்சியினையொட்டி பல்வேறு கருத்தரங்குகள், சிறுவர், சிறுமியருக்கான போட்டிகள் உள்ளிட்டவையும் நடைபெற்று வருகின்றன. இலக்கிய விருதுகளும் வழங்கப்படுகின்றன.
முதல் மூன்று நாட்களில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்காட்சிக்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.