இன்று உலக சிற்ப நாள்: சிற்ப விஷயங்கள் அற்ப விஷயங்கள் அல்ல!
இன்று உலக சிற்ப நாள். இதைப் பற்றி யாருக்கும் நினைவில் இருக்காது. ஆனால், சிற்பம் என்பது சாதாரணமான விஷயம் அல்ல என்பதை எல்லோரும் புரிந்துகொணடால் இதன் மகத்துவம் தெரியும்.
பா. கிருஷ்ணன்
சென்னை: வரலாற்றுச் சான்றுகளுக்குப் பெரிதும் கைகொடுப்பவை சிற்பங்கள்தான். கற்காலம் முதல் இன்றுவரை காலத்தை வேறுபடுத்திக் காட்டி வரலாற்று ஆய்வுகளுக்குத் துணைபுரிபவை சிற்பங்களே. அது மட்டுமின்றி இரு வேறு நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை நிரூபிப்பதில் சிற்பங்களே முக்கிய காரணம்.
வட மாநிலங்களில் கோயில்களின் கருவறையிலும் கோயில் விமானத்திலும் சிற்பங்கள் இருப்பதில்லை. கடவுளர் பொம்மைகளைப் போல் அமைத்திருப்பார்கள். ஆனால், தமிழகத்தில் ஏராளமான கோயில்கள் கருவறையில் கற்களால் உளிகளைக் கொண்டு சிற்பிகள் வடித்த சிலைகளே இருக்கும். அது மட்டுமா, மண்டபங்களின் தூண்கள், கோயில் கோபுரங்கள், விமானங்களில் எல்லாம் இடம்பெறுபவை சிற்பங்களே.
சமயத்தைத் தாண்டி, அரசியல் என்று இப்போதைய காலத்துக்கு வந்துவிட்டாலும், ஒரு தலைவரை மதிப்போர் செய்யும் காரியம் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்வதுதான். தமிழ்நாட்டில் ஏழு இடங்களில் மிகவும் பிரபலமான சிற்ப வேலைப்பாடுகள் நடை பெற்றுவருகிறது.
கலை வடிவம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை வட்டமாக கொண்ட மொடையூர் என்ற ஒரு சிறிய கிராமத்தில் சுமார் 600 குடும்பங்கள் இந்த ஊரில் இருக்கிறது. இதில் 75 சதவீதம் பேர் பொற் கலைஞர்கள்தான். வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊராக முடையூர் கிராமம் இருப்பதற்கு காரணம் இந்த சிற்பக்கலைதான். வீட்டில் இருந்தபடியே சிறு சிறு கற்சிற்பங்கள் செய்து வருகிறார்கள் மேலும் சில பெண்கள்.
இந்தியாவில்தான் இந்த பெருமை
எல்லா பெரிய கோவில்களிலும் ஆண்டுதோறும் உற்சவ காலங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். இந்த வழக்கம் ஒருகாலத்தில் உலகம் முழுதும் இருந்திருக்கிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் அங்கெல்லாம் அழிந்த பின்னரும் இந்தியாவில் மட்டும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இன்றுவரை நீடித்துவருகிறது குறிப்பிடத் தக்கது.
வரலாற்று சான்றுகள்
அந்தக் கால சிற்பங்களில் வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்யும் பழக்கம் இருந்தது. மன்னர்கள், சமயப் பெரியவர்கள் குறித்த வாழ்க்கைக் குறிப்புகள் படையெடுப்பு நிகழ்வுகள், மன்னர் கோயில் கட்டியது, ஆட்சி பரிபாலனம் செய்தது போன்ற பல தகவல்களைத் தெரிவிக்கும் ஆவணமாக இருப்பவை சிலைகள், சிற்பங்கள்தான்.சமணர்கள் கழுவேற்றிய வரலாற்றுப் பதிவுகளைச் சிற்பங்கள் நிரூபிக்கின்றன். காம சாஸ்திரக் கருத்துகள், தகவல்களையும் கஜுராஹோ போன்ற சிற்பங்கள் பதிவு செய்கின்றன.
தேவாரம் தேவை
சோழ மாமன்னன் இராஜராஜன் காலத்தில் மிகப் பெரிய பிரச்சினை எழுந்தது, சைவ சமயப் பெரியோர்களும், தமிழ்ப் புலவர்களுக்கும் பெரிய கவலை தேவார நூலின் ஏடு தங்களுக்குக் கிடைக்கவில்லையே என்பதுதான். அந்த ஏடுகள் இத்தனைக்கும் தொலைந்துபோகவில்லை. கோயில் அறையில் பாதுகாப்பாகத்தான் பூட்டி வைக்கப்பட்டிருந்தன. பொக்கிஷங்கள் மக்களுக்குப் பயன்படாமல் பூட்டி வைக்கப்படுவதால் சமூகத்துக்கு என்ன பயன். இதை உணர்ந்தவன் இராஜராஜன்.
மன்னர் யோசனை
நம்பியாண்டார் நம்பி மூலம் இதை அறிந்து அவற்றை மீட்கும் வழியை ஆராய்ந்தார். காரணம். பூட்டி வைத்தவர்கள் "அந்த ஓலைச் சுவடுகளை சைவ சமயக் குரவர்கள் முன்னிலையில்தான் அவற்றை பொதுமக்களுக்கோ அரசுக்கோ அளிக்க இயலும் என்பது ஐதீகம்" என்று கூறிவிட்டனர். இது நிலைமையைச் சிக்கலாக்கிவிட்டது. சைவ சமயப் பெரியவர்களான அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர் மண்ணுலகை விட்டுச் சென்றுவிட்டனர். அவர்களா வந்து சாட்சி சொல்ல முடியும்.. அப்படியானால், அவற்றை மீட்கவே முடியாதா..
சிற்பத்திற்கும் உண்டு உயிர்
எல்லோரும் குழம்பினாலும் இராஜராஜ சோழன் யோசித்தான். அதே கோயிலின் சந்நிதியில் சைவ சமயத்தின் நாயன்மார்கள் உருவச் சிலைகள் வைக்கப்பட்டு அதற்கான மரியாதைகள் செய்யப்பட்டு வந்தன. அதைப் பார்த்த மாமன்ன இராஜராஜன், சுவடிகளைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களிடம் கேட்டான். "இதோ இங்கே உள்ள சிலைகள் (சிற்பங்கள்) வெறும் கற்களா..." என்று கேட்டார். அதைக் கடுமையாக மறுத்த ஆலயத்தினர், "இல்லை, அவர்கள் சைவ சமயப் பெரியவர்கள். இவர் அப்பர், இவர் திருஞான சம்பந்தர், இவர் சுந்தரர், இவர் மாணிக்கவாசகர்" என்று கூறினர். அதை மீண்டும் கேள்வி கேட்டு உறுதி செய்துகொண்டான் இராஜராஜ சோழன். "அப்படியானால், பேச்சை மாற்ற மாட்டீர்களே..." என்று வலியுறுத்தினான்.
தேவாரமும், திருவாசகமும்
"இங்குள்ள சிற்பங்கள் அந்தப் பெரியவர்கள் என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டால், ஓலைச் சுவடிகளைத் தருவீர்கள் அல்லவா..." என்று கேட்டான். திகைத்துப் போன ஆலயத்தைச் சேர்ந்தவர்கள், மன்னனின் சாதுர்யத்தைப் புரிந்து கொண்டனர். அதை ஒப்புக் கொண்டனர். அடுத்த கணம், தேவாரம், திருவாசகம் போன்ற சைவ சமய நூல்கள் மீட்கப்பட்டன. அவை நாட்டுடைமையாக்கப்பட்டன. நம்பிக்கைகளுக்கு மட்டுமல்ல, நம்பிக்கைகளை மாற்றுவதற்கும் சிற்பங்கள் துணைபுரிந்துள்ளன.
கோபத்தை தணிக்கும்
சிற்பங்கள் Anger Management எனப்படும் சினத்தைக் கையாளவும் முறைக்கும்பெரிதும் பயன்படுத்தப்படும். இதை மகாபாரதம் விளக்குகிறது. பாரதப் போர் முடிந்து, பாண்டவர்கள் கண்ணற்ற திருதிராஷ்டிரனைச் சந்திக்கிறார்கள். அப்போது தனது சொந்த மகன்களை, குறிப்பாக துரியோதனன், துச்சாதனன் போன்றோரை இழந்த துயரம் திருதிராஷ்டரனின் அடி மனத்தில் இருந்தது.
மகாபாரத சம்பவம்
கிருஷ்ண பரமாத்மா, தருபுத்திரர், அர்ஜுனன் ஆகியோரை திருதிராஷ்டரன் முன் நிறுத்தி அறிமுகம் செய்கிறான். அதைக் கேட்ட மன்னன் அவர்கள் ஒவ்வொருவரையும் கட்டித் தழுவி ஆசி கூறினான். அதையடுத்து பீமனை அறிமுகம் செய்த கிருஷ்ண பரமாத்மா, பீமனுக்குப் பதிலாக அங்கே இருந்த ஒரு சிலையை நகர்த்தி திருதிராஷ்டிரன் முன் நிறுத்தினான்.
பீமன் சிலை
பீமன் என்று நினைத்துக் கட்டித் தழுவிய திருதராஷ்டிரனுக்குத் திடீரென்று மனத்தில் கோபம் கொப்புளித்தது. அடி மனத்தின் துயரம் கடும் கோபமாக வெளியேறியது. "இவன்தானே என் மகன்களைக் கொன்று குவித்தான்" என்ற எண்ணம் தோன்றிய மறு கணம், அங்கு பீமன் என்று கூறி வைக்கப்பட்டிருந்த சிற்பத்தைத் தழுவும்போது, அதைக் கொலை வெறியுடன் கட்சி இறுக்கினான். சிற்பம் நொருங்கிப் போனது. மறு கணம் மனத்தில் இருந்த கோபம் வடிந்த நிலையில், பீமனை இறுக்கி அணைத்துக் கொன்றுவிட்டோமே என நினைத்து, "ஐயோ! எனது இன்னொரு மகனையும் இழந்துவிட்டேனே..." என்று புலம்பினான்.
சிக்கலை தீர்ப்பது சிற்பம்
அப்போது நிலைமையை கிருஷ்ணன் மாமன்னனுக்கு உணர்த்தினான். இங்கே ஒரு பொம்மை, மன்னனின் சினத்துக்கு வடிகாலாக அமைந்திருக்கிறது. அதாவது சினத்தைக் கையாளும் இன்றைய உளவியல் அணுகுமுறைக்குப் பெரிதும் உதவியது சிற்பம்தானே! சிற்பம் உணர்வை வெளிப்படுத்துவது, சிற்பம் வரலாற்றைப் பதிவு செய்வது, சிற்பம் மானுடத்தை வளர்த்தெடுப்பது, சிற்பம் சிக்கலைத் தீர்ப்பது, சிற்பம், சிற்பம் சமூகத்திற்கும் அரசியலுக்கும் உதவுவது. அந்தக் கலையைப் போற்றுவோம்.