சம்பிரதாய சடங்காய் மாறிப் போன மகளிர் தினம்!
- எழுத்தாளர் லதா சரவணன்
குவிந்து கிடக்கும் குமுறல்களுக்கு நடுவில் தினம் ஒரு பெண்ணின் ஓலத்தோடு சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு வருகிறது. எதிர்ப்பட்ட இரு உதடுகள் சம்பிரதாயமாக தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளும் ஒரு சடங்காகவே மாறிவருகிறது மகளிர் தினக் கொண்டாட்டங்கள்.
ஊர் கூடி தேர் இழுப்பதைப் போலவே இந்த மாதம் முழுமையும் முன்னேற்றப்பாதையில் தங்களை அம்புகளைப் போல செலுத்திக் கொண்டு இருக்கும் பெண்களின் முதுகின் கனம் இன்னமும் கூடிப்போய் இருக்கிறது இந்த நூற்றாண்டில் !
பெண் குழந்தையா ? சித்ரவதைகள் சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொண்டாள் அவள் தன் மென் பிஞ்சு அதரங்களின் நடுவில் நெல்லை சுவைத்து அதை தொண்டைக் குழிக்கும் அமிழத்திக் கொள்ளும் நீலகண்டனின் விஷம் போல !
ஏன் .... ஆணின் முதுகெலும்பில் பிறந்தவள் பெண் என்று ஒரு வார்த்தை உண்டு. முதுகெலும்பினால் பிறப்பெடுத்ததால் என்னவோ அவள் தன் முதுகிலும் அநேக பாரங்களைச் சுமக்க வேண்டியிருக்கிறது. நிழல்களாய் உண்மையைத் தொடர முயற்சிக்கிறாள் ஆனால் கிடைப்பதென்னவோ நிழல் தொலைத்த நிஜங்கள்தான். ஓவியத்தின் நிறங்கள் சுரண்டப்பட்ட நிறங்கள் தான் அவளின் வாழ்வின் தடங்களைச் சொல்லுகிறது.
இல்லை பெண்மையின் சிறகுகள் விரிந்திருக்கிறது அவள் தன் புஜத்தின் வலிமைகளை உணர்ந்து விட்டாள். என்று ஒற்றுமையாய் குரல் எழுப்பும் ஒலிப்பெருக்கிகள் இன்னமும் 33 சதவிகித இட ஒதுக்கீடு மட்டுமே அவள் அடைந்திருக்கிறாள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வாசல் தோறும் கோலமிடும் விரல்கள் வரைகலையில் வாழ்த்துக்களை பாடுகிறது. காவல் என்று கால் கடுக்க காத்திருக்கிறது. அக்கறையாய் மருத்துவம் பயில்கிறது. பக்குவமாய் தன் விரல்களாய் பச்சைப் பிள்ளையின் தலையை வருடி பாடம் கற்றுக் கொடுக்கிறது. ஏன் ஏர் பூட்டும் வேலையில் இருந்து பார் போற்றும் பேரியக்கமாய் பெண் மாறிவருகிறாள் ஆனால் இவையெல்லாம் போதுமா ? என்ற பூதாகரமான கேள்விகள் நம்முள் தினம் தினம் முளைக்காமல் இல்லையே ?!
ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் நிறை கொள்ளும் அரசியலைப் போல, ஒற்றை குருணையில் வயிறு நிரப்பும் பறவைப் போல சிலரின் உயரங்கள் மட்டும் ஒட்டு மொத்த பெண்ணை சிகரம் ஏற்றிவிடுமா ? தடைகள் பல கடந்து இன்று சிகரம் தொட தன்னை தயார் செய்து கொண்டிருக்கும் பெண்களுக்கு நாம் ஏணிகளாய் இருக்கத் தவறிவிடுகிறோம்.
தேடிச் சோறு நிதந்தின்று -பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போல - நான்
வீழ்வே னன்று நினைத்தாயோ ?
என்று வேங்கையாய் வீதியில் போராடுகிறாள் ஒருபுறம்
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் அவை நேரே இன்றெனக்குத் தருவாய் என்று வேண்டுகிறாள் மறுபுறம்.
கண்ணாடிக்குள் அடைக்கப்பட்ட பாதரஸமாய் பிறரை வாழவைத்து தன்னையே மறைத்துக் கொள்ளும் பெண்ணிணமே இன்னும் இன்னும் வீறு கொண்டு நீ எழவேண்டும்... வெறும் உடல்களால் மட்டும் வரிக்கப்படும் உன் பெண்மையை ருசிக்கக் காத்திருக்கும் கழுகுகளைக் கொத்தும் பருந்தினைப் போல நீ மாற வேண்டும். மாற்றம் நம்மில் இருந்துதான் தொடங்க வேண்டும். காத்திருக்கிறோம் உலக மகளிரே கைகோர்த்துக் கொள்ளுங்கள். இந்த வருட மகளிர் தினமாவது விடியட்டும். சூரியனை நோக்கி அந்த நெருப்புக் கங்குகளாய் நாம் இருப்போம் .
மகளிர் தின வாழ்த்துக்கள்