தம்மாமில் இந்தியன் சோஷியல் ஃபோரம் தம்மாம் மண்டலம் நடத்திய சகோதரத்துவ இஃப்தார் நிகழ்ச்சி
தம்மாம்: சவுதி அரேபியா கிழக்கு மாகாண இந்தியன் சோஷியல் ஃபோரம் தமிழ் பிரிவின் சார்பில் சகோதரத்துவ இஃப்தார் நிகழ்ச்சி தம்மாம் ஜுபிலி ரெஸ்டாரண்ட் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
இந்தியன் சோஷியல் ஃபோரம் கோபார் கிளை தலைவர் கீழை ரமீஸ்தீன் முன்னிலையில் தமிழ் மாநில பிரிவின் தலைவர் காயல் அபுபக்கர் தலைமையேற்று அனைவரையும் வரவேற்றார். இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாண தேசிய துணை தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி நோன்பின் சிறப்பை பற்றியும், மனித நேயம் பற்றியும் சிறப்புரையாற்றினார்.
அவர் தமது உரையின் போது, மனிதர்களில் பணக்காரர், ஏழை என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் பசி பொதுவானது என்பதை உணர்த்தும் உன்னத தத்துவமே நோன்பாகும்.
நோன்பில்லா காலத்தில் வறுமைக்குரிய ஒருவர் பசி என்று வந்தால் அவரது பசியை போக்கிட ஒவ்வொருவரும் முன்வர வேண்டுமென்பதற்காகவே ஒரு மாத பட்டினி பயிற்சியை இறைவன் முஸ்லிம்களுக்கு கடமையாக்கி உள்ளான். அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் உண்டு மகிழ்பவர் என்னை சார்ந்தவர் அல்ல என்று கூறிய இறை தீர்க்கதரிசி முகம்மது நபியவர்களின் போதனையை உள்வாங்கிய நபித்தோழர்கள் அண்டை வீட்டார் பிற மதத்தை சார்ந்தவராக இருந்தாலுமா? என்று வினா தொடுத்த போது, ஆம் அண்டை வீட்டார் பிற மதத்தவராக இருந்தாலும் சரியே! பசி என்பது மனிதருக்குரியதே தவிர மதங்களுக்குரியதல்ல என்ற உன்னத தத்துவத்தை மனித நேயத்தின் அடையாளமாக காண்பித்து தந்தவர்கள் முகம்மது நபியவர்கள். இதுபோன்ற நல்ல விஷயங்கள் தான் மனித நேயத்தை உலகிற்கு உணர்த்தி வருகிறது.
மனிதம் சார்ந்து ஒருவருக்கொருவர் உதவிடும் காரியமே இறை உவப்பிற்கும், சகோதரத்துவ பாதுகாப்புக்கும் ஏற்ற கேடயமாகும் என்று குறிப்பிட்டார்.
இத்தகைய சகோதரத்துவ காரியங்களில் தொடர்ந்து செயலாற்றி வரும் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் வளர்ச்சிக்கு பேராதரவை வழங்கி வரும் மக்களுக்கும், பத்திரிக்கை துறை நண்பர்களுக்கும், மீடியாக்களுக்கும் தமது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக கீழை ஜஹாங்கீர் அரூஸி கூறினார்.
இந்தியன் சோஷியல் ஃபோரம் சிஹாத் கிளையின் தலைவர் மல்லிப்பட்டிணம் அஸ்கர் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் இந்தியா ஃபிரட்டர்னிட்டி ஃபோரம் தம்மாம் மண்டல தலைவர் சாதிக் மீரான், கோபார் கிளை தலைவர் அஹமது மீரான், தம்மாம் கிளை தலைவர் முகம்மது பைசல், சிஹாத் கிளை பொதுச் செயலாளர் ஜாஹிர் ஹுசைன், தமுமுக பொதுச் செயலாளர் இம்தியாஸ் அகமது, டான்பா தலைவர் அப்துல் சத்தார், தம்மாம் காயல் நற்பணி மன்ற தலைவர் ரஃபீக் அகமது, காயல் ஆயிஷா சித்திக்கா பொதுச் செயலாளர் இஸ்மாயில், சமூக ஆர்வலர் நாஞ்சில் கபீர், வேர்ல்ட் ரெப் ஹாஜா பாய், கீழக்கரை, நரிப்பையூர், இராமநாதபுரம், பெரம்பலூர், லால்பேட்டை ஊர்களின் ஜமா அத்தார்களும், ஜமா அத்தே இஸ்லாமி நிர்வாகிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.