சிங்கப்பூரில் நடந்த நோன்பு திறப்பு நல்லிணக்க நிகழ்ச்சியில் உணவுப் பொருட்கள் நன்கொடை
சிங்கப்பூர்: ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சென்ற ஞாயிற்றுக்கிழமை 10-06-2018 அன்று நோன்பு துறப்பு நல்லிணக்க நிகழ்ச்சியை பென்கூலன் பள்ளிவாசல் பன்னோக்கு மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடத்தியது.
பிரதமர் அலுவலக அமைச்சரும், இரண்டாம் நிதி அமைச்சர், இரண்டாம் கல்வி அமைச்சர், இரண்டாம் சட்ட அமைச்சருமான குமாரி இந்திராணி ராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். கடந்த 8 ஆண்டுகளில் இச்சங்கம் 78 நிகழ்ச்சிகளை நடத்தியிருப்பதைக் குறிப்பிட்டு அமைச்சர் பாராட்டினார்.
நோன்பு துறப்பு மற்றும் சமய நல்லிணக்க நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இச்சங்கம் 10 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை நன்கொடையாக வழங்கியது.
வரவேற்புரை வழங்கிய சங்கத்தின் தலைவர் முனைவர் மு. அ. காதர், "இது போன்ற நிகழ்ச்சிகள் பல இன மக்கள் அனைவரும் ஒன்று கூடி, சமூக ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்த பெரிதும் அவசியம்" என்று குறிப்பிட்டார்.
பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சமூகத் தலைவர்களும், பொது மக்களும், மாணவர்களும் மற்றும் சங்க உறுப்பினர்களும் என சுமார் 250 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்துச் சிறப்பித்தனர்.